வாழ்க்கையில் புயல் போன்று வரும் தீமைகளிலிருந்து மீளும் வழி

வாழ்க்கையில் புயல் போன்று வரும் தீமைகளிலிருந்து மீளும் வழி

 

நாம் ஒரு கட்டிடத்தைக் கட்டுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். கட்டும் போது அங்கங்கே முட்டுகள் (பொய்க்கால்) கொடுத்துத்தான் கட்டுகின்றோம்.

கட்டிடம் வலுவாக நின்ற பின் சிமெண்ட் நன்றாகக் காய்ந்துவிட்டதா என்ற பதத்தைப் பார்த்த பின் அந்த முட்டுகளை எடுக்கின்றோம். அப்புறம் முட்டு இல்லாமல் கட்டிடம் தன்னாலே நிற்கின்றது.

ஆகவே முட்டு இல்லாமல் எந்தக் கட்டிடமும் கட்ட முடியாது.

ஆனால் கட்டிடம் சரியாகக் காய்வதற்கு முன்னனாடியே முட்டைத் தட்டி விட்டோம் என்றால் என்ன செய்யும்? கீழே விழுந்துவிடும்.

சிமெண்ட் பாலை ஊற்றிக் கட்டிடத்தைக் கட்டிவிட்டு அடுத்தாற்போல் உடனே அந்த முட்டுகளைத் தட்டிவிட்டோம் என்றால் நம்மைத் தான் போட்டு அமுக்கும்.

இந்த மாதிரித் தான் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு அணையாக‌ இருக்கக்கூடிய நல்ல உணர்வுகளைக் கழற்றி விட்டு விடக்கூடாது.

இப்போது மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்கிறோம் என்று சொன்னால்
1.யாம் வலுவாகக் கொடுக்கும் அந்த முட்டுகளை (உபதேச உணர்வுகளை)
2.அந்த ஞானிகளின் அருள் சக்திகளைத் தட்டிவிடக் கூடாது.

நான் எல்லாச் சக்திகளையும் பெற்றுவிட்டேன் என்கிற வகையில் கொடுக்கும் ஞானிகளின் உணர்வைக் கழற்றி விட்டு விட்டு எல்லாவற்றையும் நானே பார்த்துக் கொள்வேன் என்று சொன்னால் என்ன ஆகும்?

இப்படிக் கொஞ்ச பேர் இருக்கின்றனர்.

தீமைகளிலிருந்தோ அல்லது துன்பங்களிலிருந்தோ விடுபட மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில்
1.அதிலிருந்து (உடனடியாக) “தப்ப முடியவில்லையே…” என்ற வேகத்தில்
2.எடுத்துக் கொண்டிருக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளைத் தட்டிவிட்டு விடுகின்றார்கள்.

ஏனென்றால் இதையெல்லாம் அனுபவபூர்வமாகத் தெரிந்து நான் சொல்கின்றேன். குருநாதர் அனுபவத்தின் மூலமாகத் தான் பல ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறச் செய்தார்,

மனிதருடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் பாச அலைகள் துன்ப அலைகள் மற்ற உணர்வுகள் எப்படித் தாக்குகின்றது…? இதிலிருந்து எப்படி மீள வேண்டும் என்று குருநாதர் உணர்த்தினார்.

உதாரணமாகப் பெண் குழந்தைகளுக்குச் சரியான நேரத்தில் திருமணம் நடக்கவில்லை.. சிறிது கால தாமதம் ஆகிறது என்றால் எப்படி எண்ண வேண்டும்…?

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குழந்தை உடல் முழுவதும் படர்ந்து
1.குழந்தையின் எதிர் காலம் நன்றாக இருக்க வேண்டும்
2.எந்தக் குடும்பத்திற்குப் போனாலும் நன்றாக வாழ வேண்டும்
3.நல்ல மாப்பிள்ளையாக வர வேண்டும். நல்ல வரனாக வர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

“இந்த மாதிரிச் செய்யுங்கள்…!” என்று சொன்னால் எங்கள் பிள்ளைக்கு இப்படி நினைக்காமல் வேறு எப்படிங்கெ நினைப்போம்…! என்று எனக்கே திருப்பிச் சொல்கிறார்கள்.

நாங்கள் இப்படித்தான் நினைக்கின்றோம்…! ஆனால் எங்கெங்க மாப்பிள்ளை வருகின்றது…? என்று திருப்பி இதே ராகத்திலேயே சொல்லிக் கொண்டு போகிறார்கள்.

சற்று சிந்தித்துப் பாருங்கள். பாலில் சிறிதளவு நஞ்சை ஊற்றினால் எப்படி இருக்கும்..? அந்த விஷமான உணர்வு தான் அங்கே இயக்கும்.

இதைப் போல தான் மனிதனுடைய வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் மீளாத் துயரத்தில் சுழன்று கொண்டு இருக்கின்றோம்.

எவ்வளவோ உயர்ந்த சரக்குகள் இருந்தாலும் அதில் நஞ்சினை கலந்தால் அந்த நஞ்சின் செயலாக்கம் எவ்வாறு இருக்குமோ அதைப்போல
1.உயர்ந்த குணங்கள் கொண்டோர் அனைவரும்
2.எத்தனையோ புயல்களிலேயும் அலைகளிலேயும் வாழ்க்கையில் இன்னல்களில் சிக்கித் தவிக்கின்றனர்.

ஒரு புயல் அடித்தால் என்ன நடக்கின்றது? எல்லாவற்றையும் அழித்துச் செல்லுகின்றது. புயல் ஓய்ந்த பின் பார்த்தோம் என்றால் இயல்பாக இருக்கும் அனைத்தும் காணாமல் போய்விடுகிறது.

இதைப் போல மனிதனின் உடலில் இப்படி பெரும் புயல் வீச ஆரம்பித்தால் “என்ன வாழ்க்கை…?” என்ற நிலையில் அனைத்தும் இருள் சூழச் செய்து தற்கொலைக்கே அழைத்துச் செல்லுகின்றது.

நாம் ஆசையுடன் தான் வாழ்கின்றோம். ஆனால் வாழ்க்கையில் சந்தர்ப்பபேதத்தால் வரும் இன்னல்களுக்குள் புயலில் சிக்கியது போன்று ஆகிவிட்டால் என்னென்ன ஆசைகள் இருந்ததோ அனைத்தும் நொறுங்கி விடுகின்றது. ஆகவே
1.புயலைப் போன்று வரும் இன்னல்களை
2.தீமையாக இயக்கும் கடுமையான அலைகளை
3.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் பிளந்து
4.நம் பயணத்தின் பாதையை அழியா ஒளிச் சரீரம் நோக்கிச் செலுத்துவோம்
5.அருள் ஞானிகள் வாழும் சப்தரிஷி மண்டலத்தை நம் எல்லையாக வகுப்போம்.

Leave a Reply