நல்ல குணங்களை வேட்டையாட நினைக்கும் தீமைகளை மகரிஷிகளின் அருள் ஒளி கொண்டு நாம் வேட்டையாட வேண்டும் 

நல்ல குணங்களை வேட்டையாட நினைக்கும் தீமைகளை மகரிஷிகளின் அருள் ஒளி கொண்டு நாம் வேட்டையாட வேண்டும் 

 

இந்த உடலில் இருக்கப்படும் பொழுதே மெய் ஒளியின் அருள் அந்த மகரிஷிகள் பெற்ற அருள் ஒளிகளைப் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

சாமியிடம் (ஞானகுரு) போனோம்… சாமி கொடுக்கவில்லை…! என்று குறையை எண்ணாதீர்கள். அந்த அருள் ஒளியை வளர்ப்போம்… அந்த அருள் ஒளியினுடைய நிலைகளில் ஒளி நிலை பெறுவோம். நாம் வாழ்க்கையில் வரக்கூடிய தீமையின் நிலைகளை நம் மூச்சாலே நம்மை அணுகாது பாதுகாப்போம் என்று உறுதி கொள்ளுங்கள்.

அந்த மெய் ஒளியின் நிலைகள் பெறப்படும் போது இருள் விலகும், அந்தப் பொருள் தெரியும். இருள் விலகிப் பொருள் காணும் போது வாழ்க்கையிலும் நீங்கள் பொருள் காணலாம்.

உடலில் எவ்வளவு வேதனைகள் துன்புறுத்தினாலும் அந்த இருளை மாய்க்க உங்களுக்கு யாம் கொடுப்பது ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்.

புலி நம்மைத் தாக்க வரும்போது அதை வேட்டையாடுவதற்கு அம்பைக் கொண்டு எவ்வாறு எய்கின்றோமோ அதே போன்று
1.உங்கள் உடலுக்குள் நின்று உங்களை வேட்டையாட நினைக்கும்
2.அந்தத் தீய விஷ உணர்வுகளையும் வேதனைப்படச் செய்யும் அந்த உணர்வின் தன்மைகளையும்
3.வேட்டையாடுவதற்குத்தான் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்.

ஓ…ம் ஈஸ்வரா…” என்று அந்த உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து உங்கள் உடலுக்குள் செலுத்தி ஆத்ம சுத்தி செய்து
1.உங்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும் வேதனைப்படுத்திக் கொண்டிருக்கும்
2.அந்த உணர்வின் தன்மைகளை அந்த மகரிஷியின் அருள் ஒளியாலே அடக்கச் செய்யுங்கள்.

அப்போதுதான் அவைகள் அடங்கும்.

வேதனையாக இருக்கின்றது என்ற நிலையை மறந்துவிட்டு அந்த மகரிஷிகளின் அருள் ஒளியாலே எனக்குள் இருக்கக் கூடிய துன்பங்கள் நீங்கும் என்ற உணர்வைச் சுவாசியுங்கள்.

அந்த உணர்வின் தன்மை மெய் ஞானியின் அருள் உணர்வு உங்களுக்குக் கிடைக்கும்போது, மெய் ஞானிகள் அவர்கள் உடலிலே எப்படித் தீமையை மாய்த்து மெய் ஒளியின் தன்மையைப் பெற்றார்களோ அந்தத் தீமையான உணர்வை மாய்க்க அருள் ஒளியின் தன்மையிலே சென்றால்தான் முடியும்.

நிறையப் பேர் சாமியிடம் சென்று வந்தோம்… தலை வலி போகவில்லை. சாமியிடம் சென்றால் என்ன கிடைக்கின்றது…? என்று எண்ணுவார்கள்.

அருள் வழியில் நன்றாக ஆகிவிட்டதென்றால் மீண்டும் வருவார்கள். அடுத்த முறை வந்து “சாமி…” என்று கேட்பார்கள். மூன்றாம் முறை வரும் போது என்ன செய்கிறார்கள்…?

நம் வாழ்க்கையில் அடிக்கடி அசுத்தங்கள் வந்து கொண்டே இருக்கும். அப்போது என்ன செய்கின்றோம்…?

அன்று நல்லதாக நடந்தது, இன்று யாம் சொன்ன வழிகளிலே தீமை நீக்கும் செயலாக நடந்தீர்களா…? என்று யாம் அவர்களிடம் கேட்டால், நேரம் இல்லைங்கே…! என்று சொல்கிறார்கள்.

இது போன்று நேரமில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் என்றால் அவர்கள்… ஒன்றும் கிடைக்கவில்லை என்ற நிலைக்குப் போய்க் கொண்டிருப்பார்கள்.

அந்த மாதிரியாக, நமது வாழ்க்கையினுடைய நிலைகள் பயனற்றதாகப் போய் விடாதபடி நாம் மெய் வழி காண்போம்.

வாழ்க்கையில் வரக்கூடிய துன்பத்தைப் போக்குவதற்குத்தான் இப்பொழுது யாம் உபதேசிப்பது. அந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்திற்குள் பல இரகசியங்கள் இருக்கின்றது.

இந்தத் தியானத்தின் நிலைகள் கொண்டு நமக்குள் ஆற்றல் பெற்றபின் யார் துன்பப்பட்டு வந்தாலும நாம் ஆத்ம சுத்தி செய்து கொண்டு அவர்கள் உடலில் இருக்கக் கூடிய தீமைகளை நீக்க அவர்களையும் அந்த ஆத்ம சுத்தி செய்யப் பழக்குங்கள்.

1.யாம் எப்படி உங்களை நல்லதாக்க வேண்டுமென்று விரும்பி
2.இந்த ஞானத்தின் வழி முறை கொண்டு உங்களுக்குள் சேர்க்கச் செய்கின்றோமோ
3.இதைப் போன்று நீங்களும் செயல்படுத்துங்கள்.

உங்கள் மூச்சாலும் பேச்சாலும் மற்றவர்களுடைய துன்பத்தைப் போக்கச் செய்யுங்கள். இதை உங்கள் அனுபவத்திலே நீங்கள் பார்க்கலாம். நீங்கள் உங்களை நம்புங்கள். நாம் எடுக்கும் தியானத்தின் மூலமாக ஆற்றல் மிக்க சக்தியைப் பெறமுடியும்.

யாரோ செய்து கொடுப்பார்… எவரோ செய்து கொடுப்பார்… என்று எண்ணாதபடி
1.நாம் இதைப் பெற முடியும் இந்த ஆற்றல் மிக்க சக்தி நம் உடலில் உண்டு
2.அந்த ஆற்றல் மிக்க சக்தியை நாம் பெற முடியும் என்ற நிலைக்கு நாம் வர வேண்டும்.

உயிருடன் தொடர் கொண்டு அந்த அலையின் வரிசையில் இங்கே பாய்ச்சப்படும் போது, ஒவ்வொன்றும் நல்லதாகும்.

1.நம்மால் முடியுமா…? என்ற பலவீனத்தை மட்டும் விட்டு விடுங்கள்.
2.எண்ணியதைப் படைக்கும் சக்தி உங்களை இயக்கிக் கொண்டிருக்கும்
3.உங்களை ஆண்டு கொண்டிருக்கும் இந்த உயிருக்கு உண்டு.

உயிரின் துணை கொண்டு அது எப்படி நம்மை ஒளியாக உருவாக்குகின்றதோ நம் உணர்வின் செயலை உருவாக்குகின்றதோ அதைப் போன்று நம் உணர்வுகள் அனைத்தும் அந்த ஈசனின் உணர்வின் ஒளி அலைகளாக மாறி அந்த உணர்வுகள் செயல்படும்.

ஆகவே… உயிர் நம்மை ஒளியாக இயக்கிக் கொண்டிருக்கும் அந்த உணர்வாக நாம் மாற்ற வேண்டும்… மாற வேண்டும்.

ஒன்றை ஒன்று விழுங்கித்தான் ஒன்றுக்குள் மறைந்து வருகின்றது. ஆனால் எல்லாவற்றிருக்கும் ஞானம் உண்டு. இன்றைக்குக் காற்றாக வருகிறதென்றால் இந்தக் காற்றும், போர் முறைகளிலேதான் வருகின்றது.

பல அணுக்களின் நிலைகள் கொண்டு நம் பூமிக்குள் விளைந்த நிலைகள் கொண்டு எதிர் நிலையான அலைகள் பட்டவுடன் ஒன்றுக்கொன்று போர் செய்துதான் சுழிக் காற்றும் வருகின்றது.

இவையெல்லாம் ஒன்றையொன்று வெல்லும் போது ஏற்படக் கூடிய மூச்சின் அலைகள்தான்.

ஆகையினாலே எல்லாமே இயற்கையின் செயல்தான். அனைத்தையுமே அறிந்துணரக்கூடிய ஆற்றல் மனிதனுக்கு உண்டு. மனிதனாக இருக்கக் கூடிய நாம் எதைக் கொண்டு எதை வெல்ல வேண்டும்…?

நாம் இருளை வென்று ஒளியாக்க வேண்டும். இது தான் கடைசி நிலை.

இருளை வென்று ஒளியாக உருவாக்கும் தன்மையை வளர்க்கச் செய்வதற்குத்தான் குருநாதர் எமக்குக் காட்டிய ஆற்றலை நான் பெற்றாலும் அதே ஆற்றலின் தன்மையை உங்களுக்குள்ளும் பாய்ச்சுகின்றேன் (ஞானகுரு).

ஆத்ம சுத்தியைச் சீராகக் கடைப்பிடித்து அந்த அருள் ஆற்றலை நீங்களும் பெறலாம். நீங்கள் பெறும் போது உங்கள் மூச்சலைகளால் உங்களைச் சந்திப்போரும் அந்த ஆற்றலைப் பெறுவார்கள்.

Leave a Reply