திருமூலர் உரைத்த திருமந்திரம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

திருமூலர் உரைத்த திருமந்திரம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சிவகாமி என்ற பெண்மணி நடனக் கலையில் சிறந்து விளங்கினாள். இருந்தாலும் தன்னை யாராலும் வெல்ல முடியாத என்ற நிலையில் கர்வப்பட்டு ஆக்ரோஷ குணம் கொண்டு தன்னிடம் தோற்பவவர்களைத் தண்டிக்கும் குணம் படைத்த காளி போல் காட்சியாகின்றாள்.

பதஞ்சலியோ நடனக்கலையின் நுட்பத்தில் தான் உருவாக்கிய யோக சூத்திர மார்க்கத்தைப் புகுத்திக் கர்ண வித்தைகளை உருவாக்கி அவளுடன் போட்டியிடுகின்றார்.

1.அவர் காட்டும் அத்தனை கர்ண வித்தைகளையும் அம்மாது காட்டிக் கொண்டே வருகின்றாள்.
2.பதஞ்சலி வலது காலை ஆகாயத்தை நோக்கி உயர்த்தும் முத்திரையைக் காட்ட
3.அதைத் தான் காட்ட முடியாது என்ற நிலையில் பெண் குணத்தின் இயல்பான நாணம் வந்து தடுக்க
4.தான் தோற்றுவிட்டதாக ஒப்புக் கொண்டு சிவகாமி அடிபணிகின்றாள்… அவள் கர்வம் ஒடுக்கப்பட்டது.

பதஞ்சலியின் நடன ஞான மார்க்கம் மற்ற பக்தி நெறிக்கு இடையூறு விளைவிக்கின்றது என்ற கருத்தில் தில்லை அன்பர்கள் சிலர் பதஞ்சலியை மரணப்படுத்தும் காலத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

அந்த நேரத்தில் தானாக வந்தமைந்த விதமே திருமூலர். மாடு மேய்க்கும் மூலன் இறந்தவுடன் மூலன் உடலில் கூடு விட்டுக் கூடு பாயும் தன்மையால் பதஞ்சலி உள்ளே நுழைகின்றார்.

சரியான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பதஞ்சலியின் உடலை அப்புறப்படுத்தி எரித்து விட்டனர்.

எரித்த பின் அந்த எலும்புகளைக் கொண்டு சென்று அந்த எலும்புகளைப் பூஜித்தால் அவருடைய உயர்ந்த சக்திகளைத் தாங்கள் பெறலாம். அந்தப் பலனை நாம் பெறவேண்டும் என்று ஒருவருகொருவர் சத்தியமும் செய்து யாரும் வெளியிடாதபடி தாம் செய்த செயலை நியாயப்படுத்தினர்.

திருமூலர் உடலில் புகுந்த பதஞ்சலி திருமூலர் உடலுடன் வந்து தேடும் பொழுது
1.சாட்சாத் பரமேஸ்வரனே உங்கள் திரு உடலை மறைத்து அருளியுள்ளார்.
2.இந்தத் திருமூலரின் உடலுடன் இருப்பதே எம்பெருமான் சித்தம் என்று
3.பதஞ்சலியினால் தங்களுக்குத் தங்கள் பக்தி வழிக்கு எந்த இடையூறு ஏற்படாத வண்ணம் சாதுரியமாக மாற்றினார்கள்.

ஆனாலும் திருமூலர் திருமந்திரம் வெளிப்பட்டவுடன் மீண்டும் தங்களுக்கு வந்த இடையூற்றினை உணர்ந்து என்ன செய்தார்கள்…?

1.பதஞ்சலியால் இயற்றப்பட்ட திருமந்திரத்தில் “ஞான விளக்கமாகும் செயல் முறையும்”
2.தங்களின் “ஆச்சார அனுஷ்டானங்களை உடைக்கும் வைத்திய முறையும்” இருப்பதால்
3.அந்தத் திருமந்திரத்தை மறைத்தனர்… பல அழிக்கப்பட்டன… பல காலமாக…!

ஆனாலும் திருமூலர் வெளிப்படுத்திய மூச்சலைகள் இந்தக் காற்றிலே தான் நமக்கு முன்னாடி உண்டு. காற்றிலே ஓடும் அந்த நிலைகளைத் தன் ஈர்ப்பில் கொண்டு வந்து நிச்சயம் இந்த உலகுக்கு அளிக்க முடியும்… ஞானத்தை உணரும் ஞானிகளால்…!

திருமூலர் உடலும் ஜெபத்தின் பொழுது மண்ணிட்டுப் புதைக்கப்பட்டு ஓர் நன்னாளில் சிதம்பரம் கோவில் நிலையில் ஓரிடத்தில் ஜீவ சமாதி போல் மறைக்கப்பட்டுப் பூசி அடைக்கப்பட்டு விட்டது.

சிதம்பரம் கோவிலுக்குள் அவர் செயல் நிலை இன்றும் பதஞ்சலியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

Leave a Reply