இந்தத் தியானத்தின் மூலம் முன் கூட்டியே அறிய முடியும்

இந்தத் தியானத்தின் மூலம் முன் கூட்டியே அறிய முடியும்

 

ஒரு கம்ப்யூட்டரில் மணிக்கணக்குகளைக் காட்டுகின்றார்கள். உணர்வின் தன்மை எலெக்ட்ரானிக்காக அது இயங்கி… அதிலே குறித்த நிலைகள் வரும் பொழுது மணிகளை மாற்றி மாற்றிக் காட்டுகின்றது.

ஆனால்…
1.அதிலே சிறிது தண்ணீர் பட்டு விட்டால் முழுவதும் மறைந்துவிடும்.
2.எதிர்மறையான உணர்வுகளைப் பதியச் செய்யும் போது அது தாறுமாறாக வேலை செய்துவிடும்.
3.அந்தக் கரண்டின் இயக்கம் அதில் உள்ள பேட்டரியின் சார்ஜ் குறைந்தாலும் தப்பான கணக்கைத் தான் காட்டும்.

அதைப் போன்று தான் நம் உயிரின் இயக்கம் சீராக இருக்கப்படும் பொழுது நம் எண்ணம் சொல் செயல் எல்லாம் நன்றாக இருக்கும்.

1.சோர்வு வேதனை போன்ற மற்ற நஞ்சான உணர்வுகள் வந்தால்
2.அத்தகைய எண்ண அலைகளை நமக்குள் அதிகமாகச் சேர்த்த பின்
3.நம் உயிர் அந்த உணர்வின் தன்மையை இயக்கப்படும் பொழுது இயக்கத்தின் துடிப்பு குறைந்து விடும்.

அப்படிக் குறையும் பொழுது நம் உடலின் இயல்பான இயக்கங்களும் குறையத் தொடங்குகின்றது. நம் எண்ணும் நிலைகள் சீராக வராது ஒரு கணக்குப் பார்த்தாலும் சரியாக வராது. நம் சொல்லும் சரியாக இருக்காது.

ஏனென்றால் நம் உயிர் எலெக்ட்ரானிக்காக (உணர்ச்சிகள்) அதை உற்பத்தி செய்து கொண்டே இருக்கும்.
1.அதிலே எந்த உணர்வின் தன்மை அதிகரிக்கின்றதோ அந்தந்த உணர்வுகளை மாற்றி மாற்றிக் கொண்டே இருக்கும்.
2.அந்த மாற்றம் எதுவோ கண்களில் அந்த நிறங்கள் மாறும்.
3,சொல்லுக்குள்ளும் உணர்ச்சிகள் மாறும். அந்த உணர்ச்சிக்கொப்ப உடலின் நிறமும் மாறும்.

இந்த மாதிரி ஒருவரைப் பார்த்தவுடனே அவருடைய நிலைகளைச் சொல்லிவிடலாம். யாம் சொல்லும் தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்போருக்கு இது தெளிவாகத் தெரிய வரும். தெரிந்தாலும் இதை ஜோதிடம் போன்று சொல்லி விடக்கூடாது.

சில நேரங்களில் உங்களிடம் சில கேள்விகள் கேட்பேன் (ஞானகுரு). அப்பொழுது அந்தச் சமயத்தில் உங்களிடமிருந்து என்னென்ன வருகிறது என்று பார்ப்பேன். பார்த்த பின் அதிலே என்ன நல்ல மாற்றம் கொடுப்பது என்று நான் இணைத்துக் கொடுப்பேன்.

நான் வேறு விதமாக மாற்றிச் சொல்லும் பொழுது உங்களிடமிருந்து எல்லாம் வெளியே வந்துவிடும். அப்பொழுது இந்த அலைகளைத் தொடர்ந்தவுடன் “எந்த உயர்ந்த உணர்வை உங்களிடம் கலக்க வேண்டும்…?” என்று சொல்லி உங்களிடம் கலக்கச் செய்வேன்.

1.அந்தச் சமயத்தில் நான் சொல்வதில் விஷயம் அதிகமாக இருக்கும்.
2.ஏனென்றால் குரு வழியில் அதை எதை இணைக்க வேண்டும் என்று இணைத்துத்தான்
3.உங்களுக்கு எந்த அறிவைக் கொடுக்க வேண்டும் என்று அந்த நல்ல மாற்றத்தைக் கொண்டு வருவது.

உதாரணமாக பள்ளியில் ஆசிரியருக்கு ஒரு மாணவன் மீது வெறுப்பாகி விட்டால் பாடத்தைக் கொஞ்சம் அழுத்தமாகத் தான் சொல்லிக் கொண்டு வருவார். மாணவனுக்குள் பயம் வந்து விட்டால் ஆசிரியர் என்ன சொன்னாலும் இவனுக்குள் இது பதிவாகாது. இது எல்லாம் அந்த உணர்வின் நிலை.

பார்வை அங்கே இருட்டாகும். எதிரில் எது இருந்தாலும் அதைச் சரியாகக் காண முடியாது. அந்த உணர்வுக்குள் நஞ்சாகும்.

ஆக… விஷத்தில் எந்த நல்ல பொருளைப் போட்டாலும் சிந்தனை வராது. விஷத்தின் தன்மையின் உணர்வாகவே மாறிவிடும். அந்த நேரத்தில் என்ன பதிவு செய்தாலும் அது பதிவாகாது.

அது போல் ஆகாது… குருநாதர் கொடுத்த கோடி கோடி என்ற நிலைகள் கொண்டு அந்த உண்மையின் தன்மை வளர்ந்தாலும்… கோடி கோடி என்ற ஒளியான உணர்வின் தன்மையாக உங்களுக்குள் இணைத்தே கொண்டு வருகின்றேன்.
1.இணைத்துக் கொண்ட பின்
2.அது தெளிந்த அறிவை உங்களுக்கு ஊட்டும்.

ஆக… அடுத்தவர்களை நீங்கள் பார்த்த பின் கேட்டறிந்து அதைச் சொல்வதல்ல. கேட்டறிந்து நீங்கள் சொல்ல வேண்டும் என்றால் நானே அப்படிச் சொல்ல முடியாது.

ஆனால் திருப்பிச் சொல்லும் நிலை வந்தால் அது வெறும் பாட நிலையாகத் தான் ஆகும். ஆகவே நாம் ஒருவரைப் பார்க்கப்படும் பொழுது அந்த உண்மைகளை நமக்குள் உணர்த்தும். அங்கிருக்கும் தீமையும் தெரியும்.

அப்பொழுதெல்லாம்…
1.அந்தத் தீமையை நீக்குவதற்குண்டான வழி எது… என்று நாம் எடுக்க வேண்டும்.
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வை எடுத்தால் நமக்குள் தீமை சேராது.
3.அவர்களின் தீமைகளை நீக்கும் சொல்லாக நம்மிடமிருந்து வரும்.

அந்தச் சொல்லினை அவர்கள் பதிவு செய்து விட்டால்… அவர்கள் கேட்டுணர்ந்தால்… திருப்பி அதை அவர்கள் எண்ணினார்கள் என்றால் அவர்கள் தீமையை அவர்களே போக்க முடியும்….!

ஒருவர் வாய் திறந்து சொன்னால் போதும்… இப்படித்தான் என்று நமக்கு அது தெரிய வரும். நமக்குத் தெரிய வந்தாலும் உடனே நாம் ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

தெரிந்து கொண்டேன் என்று உடனே அவர்களிடம் சொல்லக்கூடாது.

1.அவர்களுக்கு நல்ல உணர்வை எப்படிக் கொடுக்க வேண்டும் என்ற நிலையில்
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறவேண்டும் என்ற இந்த உணர்வுடன்
3.அவர்கள் கண்களை உற்றுப் பார்க்க வேண்டும்… நாம் எதையும் சொல்ல வேண்டியதில்லை.

ஆனால் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பிறிதொன்றை அவர் சொல்லும் போது நமக்குக் கோபம் வரும். ஆனால் இங்கே சொன்ன உபாயத்தின்படி எண்ணிப் பாருங்கள்.

சரி… அப்படியா…! என்று அந்த அருள் உணர்வுகளைக் கண்ணிலே பாய்ச்சிப் பாருங்கள். யாராவது குற்றமாகச் சொல்ல வரும் பொழுது இந்த முறையைக் கையாண்டு பாருங்கள்.
1.அவர்களுக்குள் ப்ரேக் ஆகும்… நாம் பாய்ச்சும் அருள் உணர்வுகள் அவர்களை இடைமறிக்கும்.
2.குறைகளையே சிந்தித்துக் கொண்டிருந்தால் இது போய் அங்கே தடையாகும்.
3.ஆனால் அவர்கள் உணர்வுகள் நமக்குள் வராது… நாம் பாய்ச்சும் அருள் உணர்வுகள் அவர்கள் தீமைகளை அடக்கச் செய்யும்.

ஏனென்றால் யாரும் தவறு செய்யவில்லை. நுகர்ந்த உணர்வு அவர்களை இயக்குகிறது. அந்தக் குறை வளரக்கூடாது என்ற நிலையில் மகரிஷிகளின் அருள் ஒளி அங்கே படர வேண்டும்… மெய்ப் பொருள் காணும் திறன் பெறவேண்டும் என்று இதை மட்டும் நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

இப்படிச் செய்வதற்கு மாறாக நாம் அவர் உணர்வை அப்படியே எடுத்துக் கொண்டால் இரண்டு பங்கு நமக்குக் கோபம் வரும். நீ பெரியவனா… நான் பெரியவனா…! என்று சண்டை வரும்.

இந்தத் தியான வழியில் உள்ளவர்கள் இதை எல்லாம் கொஞ்சம் பழகிக் கொள்ள வேண்டும்.

Leave a Reply