சித்தும் ஞானமும் எதற்காக…? வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாமா…? என்ற எண்ணத்திலேயே பலர் உள்ளார்கள் – ஈஸ்வரபட்டர்

சித்தும் ஞானமும் எதற்காக…? வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாமா…? என்ற எண்ணத்திலேயே பலர் உள்ளார்கள் – ஈஸ்வரபட்டர்

 

இந்தப் பூமியில் பல காலமாக ஏற்பட்டதின் தொடர்ச்சியில் பல பல நிலைகள் நடக்கின்றன.
1.ஒன்றைப் போல் ஒன்றில்லாமல்தான்
2.ஒன்றை ஒன்று அழித்து… ஒன்று சக்தி கொண்டு இவ்வண்டமும் பேரண்டமும் சுழல்கின்றன.

ஆனால் இந்த மனித ஆன்மாக்கள் மட்டும் ஒருவரைப் பார்த்து ஒருவர்…
1.அவரைப் போல் நாம் வாழ வேண்டும் என்று ஆசையில் சிக்குகின்றனர்
2.மற்றவர்களைப் பார்த்து ஆண்டவன் அவர்களுக்கு மட்டும் அபரிதமான சக்தியை அளிக்கின்றார்…! என்ற குறையான எண்ணம் வேறு.

ஒன்றைப் போல் ஒன்றில்லை. ஒன்றில்லாமல் ஒன்றில்லை என்ற நிலை இந்தப் பூமிக்கே உள்ள பொழுது நாம் ஏன் ஒன்றின் எதிரொலியை எதிர்பார்க்க வேண்டும்…?

ஆதிகாலம் தொட்டே ஞானிகள் உணர்த்தி வந்த நிலையிலும் ஒவ்வொருவரும் அவர்களின் உண்மை நிலையைத் தான் உணர்த்தினார்கள்.

ஞானத்தின் சக்தி பொதுவானது தான். அந்த ஞானத்தைப் பெறும் ஆற்றல் எல்லோருக்கும் உள்ளது என்று உணராமல் செக்குமாடுகளைப் போல் சுழன்று கொண்டுள்ளோம்.

ஞானிகள் வெளிப்படுத்தியதை இப்பூமியில் உள்ள பல பாகத்தில் இதன் நிலையை எடுத்து அதில் ஆராயும் நிலையைப் பெற்றுப் பல விஞ்ஞானத்தைத் தன் ஞானத்துடன் சேர்த்துச் செயலாக்குகின்றார்கள்.

ஆனால் ஞானத்தை வளர்த்த இந்த இந்தியாவில் பூமியில் உள்ள ஆத்மாக்கள்
1.மற்றைய மேலை நாடுகளில் உள்ள செயற்கையில் மயங்கி
2.இங்கிருந்து அங்கு சென்று வந்தால் இந்த உலக அனுபவம் பெறலாம் என்று அற்ப ஆசையில் ஓடுகின்றார்கள்.

ஞானிகளையே அள்ளி வழங்கிய ஞானச் சுரங்கத்தை எடுக்கும் பக்குவத்தை எல்லாம் இன்றைய காலத்தில் ஜாதியின் அடிப்படையில் சொந்தமாக்கி… பொருளைக் கொண்டு ஸ்தானங்கள் அமைக்கப்படும் கோயில்களில் ஏற்படும் இந்த மதிப்பு விகிதத்தைக் கொண்டு… பக்தியையும் ஞானத்தையும் மங்கச் செய்துவிட்டார்கள்.

இராமாயணத்தையும் கீதையும் இவர்கள் ஜாதியின் அடிப்படையில் சொந்தமாக்கி அதில் உள்ள கருத்துக்களை மாற்றி விட்டனர்.

விக்கிரமாதித்த ராஜாவின் கதையில் உள்ள வேதாள முனிவர் செப்புவதாக உணர்த்திய அதன் கருத்துக்களை மக்களினால் விளையாட்டாகவும் விரும்பத் தகாத முறையில் பேய் என்ற ஒதுக்கப்பட்ட நிலையிலும் ஒதுக்கிவிட்டார்கள்.

விக்கிரமாதித்தன் கதையில் உள்ள கருத்துக்களை ஊன்றி அறிந்தால் இந்த உலக நடப்பின் உண்மைகளை அன்றே கதை உருவில் ஆவி பேய் என்ற ரூபத்தில் உணர்த்தியுள்ளார்.

விக்கிரமாதித்த ராஜாவின் கதையில் உள்ள நிலைகள் உண்மை நிலைகளை உணராதபடி…
1.ஒவ்வொரு மனிதனின் எண்ணத்திலும் இன்று பல பேயான குணங்களுக்கு இடமளித்துவிட்டு
2.பேய் என்று உருவமில்லாத நம்பப்படாத நிலைக்கு மட்டும் தான் இன்றைய மனிதன் பயப்படுகின்றான்.

உலக நிலை எப்படி இருக்கிறது பார்த்தீர்களா…? அனைத்துமே ஆவிதான்.

பக்தி என்ற நிலையில் “சக்தி மாதா” என்று மற்றவர்கள் எழுதி வைத்த மந்திரங்களை உருப்போட்டு… பல பொருள்களை அந்தச் சக்தி மாதாவிற்குப் படைத்துப் பூஜித்து வணங்கச் சொன்னால் “இன்றைய நம் மனிதர்கள் நம்புவார்கள்…”

உலகின் சத்திய நியதியை எடுத்துச் சொன்னால்… ஆவி என்றும் பேய் என்றும் சொல்பவர்களை ஒதுக்கித் தள்ளுவார்கள். இன்றுள்ள ஆத்மாக்கள் செக்குமாடுகளைப் போல் சுழன்று கொண்டுள்ள நிலையில் மறு சொல் ஏற்கப்படுவது கடினம் தான்.

நம் பூமியின் நிலையே அந்தந்த இடத்திற்குத் தக்க அமிலத்தை ஈர்க்கும் குணத்தைக் கொண்டு இந்தப் பூமியின் பல பாகங்களில் அதனதன் இயற்கை வளத்தின் செழிப்புத் தன்மையும் கால நிலைகளும் உருவாகின்றன.

இயற்கைத் தன்மைக்கு மட்டும் தான் மாற்றமா..? இயற்கையின் வளர்ச்சி பெற்ற மனித ஆத்மாவுக்கும் அதுவே தான்.

அந்தந்தப் பூமியின் காந்த சக்தியைக் கொண்டு தான் மனிதனின் எண்ண ஓட்டம்… உருவ வளர்ச்சி… உணவு நிலை.. உறங்கும் நிலை…! அனைத்துமே இருந்திடும்.

இங்குள்ள மனிதனின் சுறுசுறுப்பிற்கும் மற்ற நாட்டின் சுறுசுறுப்பின் தன்மைக்கும் மாறுபடும். இங்கு காய்க்கும் காய்கறி வளங்களைப் போல் மற்ற நாடுகளில் இருப்பதில்லை.

இங்குள்ளவை அங்கு வளர்வதில்லை. அங்குள்ளவை இங்கு வளர்வதில்லை. இதே விதையை அங்கு போட்டாலும் அப்படி அது வளர்ச்சி எய்தினாலும் சுவையில் மாறுபடுகிறது.

அங்குள்ள மனிதன் சுறுசுறுப்பாக உள்ளான். பல நவீன செயற்கையகங்களை உருவாக்கி உள்ளான் என்றால்
1.அது அவன் செயல் மட்டுமல்ல…
2.அவன் பிறந்த பூமியின் அமில குணத்தில் அவன் உருவாக்குகின்றான்
3.அவன் செயல் திறனும் அதன் நிலைக்கொப்பத் தொடர்கிறது.

இங்குள்ள இந்த ஞான ஒளியை… அன்று உணர்ந்த சித்தர்களின் தொடர்பிருந்தும்… நாம் அதை எல்லாம் தவறவிட்டு சாமான்யர்களாகப் பெற முடியாத ஒன்றாக அதனைக் கருத்தில் கொண்டு வாழ்கிறோம்.

இன்னும் சிலர் சித்தும் ஞானமும் எதற்காக…? வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாமா…? என்ற உணர்விலேயே ஞானத்தைத் தவறவிட்டு… பக்தி என்ற மமதைப் பிடியிலும் அரசியல் என்ற கோமாளி விளையாட்டிலும் தன் செயலை எல்லாம் விரயமாக்கி வருகின்றார்கள்.

Leave a Reply