முடிவு நிலையில் உள்ள நாம்… முதல் நிலைக்குச் செல்லும் பக்குவம் பெற வேண்டும் – ஈஸ்வரபட்டர்

முடிவு நிலையில் உள்ள நாம்… முதல் நிலைக்குச் செல்லும் பக்குவம் பெற வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

தியானத்தில் நம் சுவாச நிலை சமநிலைப்பட்டவுடன்…
1.நாம் எடுக்கும் சுவாசத்தினால் நம் எண்ணத்தை ஒரு நிலையில் குவித்து
2.எந்த மகரிஷியை எண்ணுகின்றோமோ அந்நிலை கொண்ட அருள் ரிஷியின் ஒளிக்கதிர்கள்
3.நம் உயிராத்மாவுடன் நாமெடுக்கும் சுவாசமுடன் மோதுண்டு
4.நாம் எடுக்கும் இச்சக்தியின் அருளைக் கூட்டச் செய்கின்றது.

முந்தைய கால புராணங்களிலும் நடைமுறை வாழ்க்கையிலும் ஆண்டவனே வந்து சில நிலைகளைக் கவியாக உணர்த்தியதாக உணர்ந்திருப்பீர்.

பல ஆயிரம் காலங்களாக இம்மனித எண்ண அறிவு வளர்ச்சி கொண்ட நாள் தொட்டே பல ரிஷிகளின் சக்தி நிலை நம் பூமியில் செயல்பட்டு வருகின்றது.

அந்தந்தக் கால நிலைகளுக்கொப்ப இச்செயல் நிலை கலந்து வந்தது.

இன்றைய மனித ஆத்மாக்களின் எண்ணத்தில்… இச்செயற்கை நிலையிலும் புத்தக அறிவின் உறவிலும் செயல்படும் நிலையில் பக்தி கொண்டு உள்ளதால்
1.தன் எண்ணத்தைக் குவித்து
2.சப்த ரிஷிகளின் நிலையுடன் தொடர்பு கொள்ளும் பக்குவ நிலை இக்கலிக்கு வரவில்லை.
3.இன்றைய கலியின் நிலையில் உணரும் பக்குவமும் இல்லை.

சப்த ரிஷிகளின் நிலையுமே இன்றைய இக்கலிக்குகந்ததாகத்தான் எவ்வெண்ணத்தில் மனித ஆத்மாக்கள் செல்லுகின்றனரோ அதே வழித் தொடர்கொண்ட சக்தியைத்தான் அவர்களும் நமக்கு உணர்த்துகின்றனர்.

கவியிலும் காவியத்திலும் இன்றைய சக்தி நிலையை உணர்த்தி… அதை ஏற்கும் பக்குவ ஆத்மாக்கள் “சில தான் உள்ளன…!” என்பதனைப் புரிந்தே கால நிலைகேற்ப அருள் ஒளிதான் அவ்வாண்டவனின் ஜெபம் கொண்டவர்களின் நிலையிலும் செயல்படுகின்றது.

நம் எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி… இவ்வுலக வாழ்க்கையுடன் நம் வாழ்க்கையை ஜெயித்துக் காட்டிட வேண்டிய பக்குவ நிலை பெறவும் நமக்கேற்படும் அனைத்து நிலைகளிலிருந்து நம் நிலையை உயர்ந்ததாக்கும் செயல் நிலைதான் நமக்கு இன்று தேவைப்படுகின்றது.

அந்நிலை பெறவும்… இயற்கையின் உண்மை நிலையை அறியவும்… நம் எண்ணத்தை அவனிடம் செலுத்தும் பக்குவத்தைத்தான்… இன்றைய நம் நிலை இருந்திடல் வேண்டும்.

1.எண்ணத்தை ஒரு நிலைப்படுத்திக் குவிக்கக் குவிக்க
2.நம் சக்தி உயிரான ஈசனிடம் ஐக்கியப்பட்டு… உரமாய் அவன் சக்தியை நம்முள் ஊன்றச் செய்து
3.அவனும் நாமும் ஒன்றான நிலையில் நம் உயிராத்மாவும் நம் உடலும் இருந்திடும்.
4.இந்த நிலையில் நமக்கு ஏற்படும் நம்மைச் சுற்றியுள்ள எந்நிலையும் நம் அருகில் நெருங்காது.

இவ்வுலக மாற்ற நிலை கூடிய விரைவில் ஏற்படப் போவதினால் நம்மை அதிபக்குவப்படுத்தி நாம் செயல் கொண்டிடல் வேண்டும்.

மனித ஆத்மாக்களுக்குத்தான் இந்நிலையில் புகட்டுகின்றீர்…! மற்ற ஜீவன்களுக்கு அதன் ஆத்மாவைக் காத்திடும் பக்குவம் எப்படி ஏற்படும்…? என்ற வினாவும் எழலாம்.

இன்றைய நிலையில் எண்ணத்தைச் சிதற விட்டு வாழ்பவன் இம்மனிதன் தான்…!

மிருகங்களில் சிலவற்றின் நிலையும் பறவைகளில் சிலவற்றின் நிலையும் சில உயர்ந்த நிலையில் வாழுகின்றன. இம் மாற்றத்தினால் பறவைகளில் சிலவற்றின் நிலை சிதறுண்ட நிலையில் செயல்படப் போகின்றது.

பூமிக்கு மாற்றம் வரும் நிலையில் பறக்கும் பட்சிகளுக்குத் தப்ப முடியாதா…? என்று எண்ணலாம்.

காற்று மண்டலமே மாற்றம் கொண்டுள்ள இந்நிலையில் இப்பொழுதே பறவைகளின் எண்ணச் சிதறலின் வளர்நிலை தொடர்பட்டுவிட்டது. இவ்வுலக மாற்றத்திற்குள்ளேயே பறவைகளின் நிலை மிகவும் குறைந்துவிடும்.

நம் பூமியிலேயே பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பறவைகளின் நிலை இருந்ததைக் காட்டிலும் படிப்படியாய் இன்று குறைந்துவிட்டது.

மற்ற ஜீவராசிகளின் நிலையும் ஒரு சில இன வர்க்கங்கள் மிகவும் குறைந்து விட்டதற்குக் காரணமே…
1.தாவரங்களை அழித்ததினால் இக்காற்று மண்டலமே விஷத்தன்மை அதிகப்பட்டதிலிருந்து இம்மாற்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
2.முந்தைய காலங்களில் வயல்களில் விளையும் கதிர்களை பட்சிகளிலிருந்து காக்கத் தக்க நடவடிக்கை இருந்திட்டது
3.இன்றைய நிலையில் தாவரங்களை புழு, பூச்சி இவற்றிலிருந்து காக்கும் நிலைதான் அதிகப்பட்டுவிட்டது.

காலங்கள் மாற மாற இன வளர்ச்சியின் நிலையும் மாறிக் கொண்டே வருகின்றது. இப்பூமியில் கல்கியில் தொடர்ந்து இக்கலி வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் முடிவு நிலைதான்… இன்று நாமுள்ள நிலை…!

1.முடிவு நிலையில் உள்ள நாம்…
2.முதல் நிலைக்குச் செல்லும் பக்குவ நிலைதான் இங்கு உணர்த்தும் உண்மை நிலை…!

Leave a Reply