ஞானம் பெற சந்நியாசம் தேவை இல்லை – ஈஸ்வரபட்டர்

Spiritual family

ஞானம் பெற சந்நியாசம் தேவை இல்லை – ஈஸ்வரபட்டர்

 

வளர்ந்து வரும் செயற்கையுடன் கூடிய கால நிலையில் ஆவி உலகின் செயலும் நம்முடனே வருகிறது என்பதனை உணர்ந்தே நாம் வாழ்ந்திடல் வேண்டும்.

1.இன்று வாழ்ந்திடும் மக்களின் (எண்ணிக்கை) அளவை விடவும் அதிகமாக
2.இவ்வாவி உலகில் ஆத்மாக்களின் தாக்குதலினால் இன்றுள்ள மக்களின் வெறியுணர்வு அதிகரித்துள்ளது.

உயிரணுவாய் உதித்து ஆத்மாவுடன் கூடிய ஜீவ நிலை பெற்று ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்திடும் வாழ்க்கையிலெல்லாம் நாம் உண்ணும் நிலை கொண்டும்… எண்ண நிலை கொண்டும்… நம்முடன் பல உயிரணுக்கள் நம்முள் நம் உயிர் ஜீவ ஆத்மாவுடன் நம் உடலில் ஏறுகிறது.

அதனால் நம் செயல் எல்லாம் நம் ஆத்மாவுடன் கூடியதாக மட்டும் இருந்திடாமல் பல உயிரணுக்களின் நிலைக்கு ஒத்த சக்தியெல்லாம் நம் உடலில் இருப்பதினால் “பல நிலை கொண்ட சக்தி” நம் உடலுடன் வளர்கின்றது.

ஒவ்வொருவரின் உடலிலும் பல நிலைகள் உள்ளன. நம் ஆத்மாவை நாம் செயலாக்கிட…
1.ஒரே வழியான ஜெபம் கொண்ட வழியை நாம் செயலாக்கும் பொழுது
2.நம் உடலில் உள்ள பல நிலைகொண்ட அணுக்களின் சக்தி குறைந்து விடுகின்றது.

நம் உயிராத்மாவுக்கு நம் பூமியின் தொடர்பு கொண்ட சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளி வரும் சக்திகளை நம் உயிராத்மா தன்னிச்சையில் ஈர்க்கும் பக்குவம் பெற்றுவிட்டால் அதிலிருந்து வருவதுதான் நமக்குகந்த ஜெப நிலை.

1.பல தீய அணுக்களின் சக்திக்கு அடி பணிந்தே வாழும் வரை
2.தெய்வீக சக்தி நிலையை அடையும் நிலைக்கு நாம் வருவது மிகவும் கடினம்.

நம் உயிராத்மாவிற்கு வேண்டிய சக்தியினை ஈர்க்கும் நிலைப்படுத்தி வாழுங்கால் நமக்கு சப்தரிஷி மண்டலங்களின் தொடர்பிலிருந்து சேமிக்கும் நிலையை எளிதில் பெற முடியும். இது தான் தியானம் என்பது.

இத்தகைய தியானத்தின் மூலம் பல எண்ணங்களின் பிடியிலிருந்து விடுபட்டுத் தெய்வீக சக்தியை ஈர்க்கும் நிலை பெற்று விட்டால் பல ஞான வழிகளையும் சித்து முறைகளையும் சப்த ரிஷியின் நிலையையும் நம் உயிரணுவே (உயிர்) ஈர்த்துச் செயல் கொண்டிடும்.

இவ்வுயிர் என்னும் ஜீவக்கூட்டை இருந்த இடத்தில் விட்டுவிட்டு நம் ஆத்மாவுடன் கூடிய சத்து (அமில) நிலையை ஈர்த்துக் கொண்டே பறக்கும் நிலை பெறலாம்.

எந்நிலைக்கும் சென்று நம் ஆத்மாவுடன் கூடிய சத்து நிலையுடன் பிம்ப நிலையையும் ஏற்படுத்தி ஒவ்வொரு மண்டலங்களின் நிலையையும் அறியலாம்.

இக்காற்றுடன் எந்தெந்த ஜென்மங்கள் எடுத்து அச் ஜென்மத்தில் நாம் வெளியிட்ட மூச்சு அலையினால் சப்த அலையின் நிலை கொண்டு பல ஜென்மங்களில் வாழ்ந்த நிலையையும் அறிந்திடலாம். இவ்வுலகினிலும் மற்ற மண்டலங்களின் நிலையை அறிந்திடலாம்.

இவற்றினால் யாது பயன் என்றும் கேட்டிடுவீர்…?

இவ்வுயிர் ஆத்மாவின் சக்தியை இக்காலமுடன் காலமாக இவ்வுடலுடன் கூடிய குறுகிய வாழ்க்கையுடன் சுழல விடாமல் இம் மாற்றம் கொண்டு சுழலப் போகும் “இக்கலியின் நிலையிலிருந்து மீளத்தான் இவ்வழியினை வெளியிடுவதெல்லாம்…!”

நம் சக்தியுடன் பல மண்டலங்களின் சக்தியையும் இணைத்துச் செயல்படுத்திட முடியும். இவ்வழியினை யாவருமே அடைந்திடலாம்

இல்வாழ்க்கையென்னும் பிடியில் பேராசையில் வாழ்ந்திட்டால் செயலாக்குவது கடினம். அன்பு கொண்ட ஆண்டவனாய் வந்திட்டாலே இச்சக்தி நிலையை நம் ஜெபமுடன் பெற்றிடலாம்.

இந்நிலையில் வந்த சித்தர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலைகொண்டு வந்துள்ளனர். வாழ்க்கையுடன் இன்னலில் இருந்து சலிப்புற்ற நிலையில் வந்த பலர் உள்ளனர்.

1.போகரின் நிலையைப் போல் வாழ்க்கையுடன் கூடிய நிலையில் வருவதுவே மகத்துவம்.
2.கோலமாமகரிஷி தன் சக்தியையே ஆதிசங்கரரின் சக்திக்கு அளித்திட்டார்.
3.ஒவ்வொரு ரிஷியும் ஒவ்வொரு நிலை கொண்டு வந்தவர்கள்தான்.
4.புத்தரின் நிலை அனைத்திற்கும் மாறு கொண்ட வெறுப்பற்ற நிலையில் வந்த நிலை.
5.பல ஞானிகள் வந்த நிலையெல்லாம் குடும்பத்துடன் ஒன்றிய ஆத்மீக நெறி கொண்ட அன்பு வழியில்தான்.
6.இவ்வழி அடைவதற்கே சந்நியாசி நிலை உகந்ததல்ல
7.ஆத்மீக நெறி பெறுவதற்கு வயது வரம்பு இல்லை.

இந்நிலைகளை உணர்ந்து ஒவ்வொருவரும் வழி பெற்றிடுங்கள்.

Leave a Reply