மெய் ஞானிகளையும் மகரிஷிகளையும் பற்றிய சூட்சமங்களை எல்லோரும் அறியும் கால நேரம் வந்து விட்டது – ஈஸ்வரபட்டர்

Golbal Tamil Nadu

மெய் ஞானிகளையும் மகரிஷிகளையும் பற்றிய சூட்சமங்களை எல்லோரும் அறியும் கால நேரம் வந்து விட்டது – ஈஸ்வரபட்டர்

 

இப்பூமி சுற்றுவதைக் காட்டிலும் சூரியன் சுழலும் வேகம் அதிகப்படுகிறது. இன்று இப்பூமியின் ஈர்ப்புத் தன்மைக்கு மேல் சூரியனின் ஈர்ப்புத் தன்மை பல மடங்கு அதிகமாக உள்ளது. அது ஈர்த்து வெளியிடும் நிலையும் அதே நிலைக்குகந்த துரித நிலையில் உள்ளது.

பல சூரியன்களின் தொடர்பு கொண்ட நம் சூரியன் நாம் காணும் சூரியனின் சக்தி மிகவும் வலுப்பெற்ற சக்தி. சூரியனின் பூமி நிலை குளிர்ந்த நிலை. இப்பூமியில் பிறவி எடுத்து இப்பூமியிலிருந்து சூட்சும நிலைக்கு சென்ற பலர் இருந்து செயல்படுத்தும் கோயில்தான் நம் சூரியன்.

இப்பூமியில் உதித்த உயிரணுக்கள் மற்ற மண்டலங்களில் வாழ்ந்திட முடியாது. சுவாச நிலை மாறுபடும் பொழுது அம்மண்டலத்தின் உந்தலினால் இம்மண்டலத்திற்கே உந்தப்பட்டு வருவார்கள் என்று உணர்த்தினேன்.

சூட்சும நிலைக்குச் செல்பவர்கள் பல மண்டலங்களிலும் இருந்து செயல்படுத்துகிறார்கள். இப்பூமியிலும் பிற மண்டலத்தில் உதித்து வாழ்ந்தவர்கள் சூட்சும நிலை பெற்றே இம்மண்டலத்திலும் (பூமி) சில நிலைகளைச் செய்கிறார்கள்.

வான சாஸ்திரம் என்று அறியப் பல நிலைகளைச் செய்கிறார்கள்.
1.அன்றே இப்பூமியும் மற்ற பூமிகளின் நிலையையும் என்றாவது ஒரு நாள் வெளிப்படுத்தும் நிலையில்
2.பல சித்தர்கள் ஒன்றுபட்டு இப்பூமியிலேயே அக்காலப் பெட்டகத்தைப் பதித்து வைத்துள்ளார்கள்.
3.இக்கலி மாறுவதற்குள் அந்நிலை வெளிப்படும்.
4.அந்நிலையை வெளிப்படுத்திட இக்கலியில் வந்து பல சித்தர்களினால் உருவப்படுத்தி ஜீவன் தந்த ஓர் உயிரணு
4.ஒரு தாயின் வயிற்றியிலேயே பிறந்து வந்துள்ளது
5.அவன் வெளிப்படுத்துவான் சூட்சும நிலையில் உள்ள பல சித்தர்களை என்றேன்…
6.சூட்சும நிலைக்குச் சென்ற பெரியோர்கள் என்றும் உணர்த்துகிறேன்.

அச் சூட்சும நிலைக்குச் சென்றவர்கள் தனித்த நிலையில் யாரும் இயங்குவதில்லை. அவர்களின் சக்தியை எல்லாம் ஒன்றாக்கி அச்சப்தரிஷிகளின் நிலையிலிருந்து செயல்படும் தன்மைக்கு வருகிறார்கள்.

மனிதர்களின் குண நிலை மாறுபட்ட குண நிலைகள். சூட்சுமத்தில் உள்ளோரின் குண நிலைகளோ ஒன்றுப்பட்ட நிலை.

இன்று சிறு தேவதைகள்… பெரும் தேவதைகள் என்று மாறுபட்டுப் பிரித்துச் சொல்கிறார்கள் புராணக் கதைகள் மூலமாக. இச்சிறு தேவதைகளின் நிலை துர் ஆவிகளின் நிலையில் இருந்து மாறுபட்ட அன்பு கொண்ட ஆத்மாக்கள்.

இவ்வுலகின் ஆசையுடன் இவ்வுலகில் உள்ளோரின் எண்ணமுடன் கலந்து தன்னையே ஆண்டவனாக ஏற்கும் நிலைப்படுத்திச் செய்து வரும் நிலை.
சூட்சுமத்திற்குச் சென்று அச்சகல தேவர்களின் தேவனாக இயங்கும் அச்சூரிய தேவனிடம் செல்லும் நிலைக்குப் பக்குவப்படாத நிலையிலேயே உள்ள நிலைதான். சித்து நிலையுடன் கலந்து உறவாடும் நிலை.

சூரிய தேவன் என்றேனல்லவா…? அனைத்துச் சித்தர்களும் முனிவர்கள் ரிஷிகள் சப்த ரிஷிகள் அனைவரும் ஒன்றுபட்டு அச்சக்தியின் சக்தியான அச்சூரியனில் ஒன்று கலந்து அச்சூரியனின் நிலையிலிருந்துதான் எல்லாச் செயல்களுமே இன்று செயல்படுத்துகின்றனர்.

இன்று அச்சூரிய தேவன் இல்லா விட்டால் எவ்வுலகமும் இல்லை. நம் சூரியனைப்போல் சக்தி கொண்ட பல சூரியன்கள் இருந்தாலும் அனைத்து சூட்சும சக்தியிலுள்ள தேவர்கள் கலக்கும் நிலை நம் சூரியன் தான்.

1.இவ்வுடலில் உள்ளபோதே அனைத்து நிலையையும் அறியும் பக்குவத்திற்கு உங்களைச் செயல்படுத்திடத்தான்
2.பல சக்திகளைக் கொண்ட சூட்சும நிலையில் உள்ளவர்களின் நிலையை ஒன்றுபடுத்தியே
3.இந்நிலையை இங்கு வெளிப்படுத்துகின்றோம்

சக்தியின் சக்தி பெற்ற இம் மனித ஜென்மத்தில் வாழும் பாக்கியத்தைப் பெற்ற சக்திகளே…!
1.உங்களின் சக்தியை அனைத்து சக்திகளுடன் ஒன்றுபட்டு
2.அனைத்து மண்டலங்களின் நிலையையும் உம் சக்திகளில் இருந்தே ஈர்த்து அறியும் பக்குவத்திற்கு
3.உம் சக்தியின் செல்வத்தைச் சக்தியாக்கி வாழுங்கள்.

Leave a Reply