சாதாரண வாழ்க்கையிலிருந்தே மெய் ஞானத்தைப் பெற்ற ஞான ரிஷிகளைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Maharishis worlds

சாதாரண வாழ்க்கையிலிருந்தே மெய் ஞானத்தைப் பெற்ற ஞான ரிஷிகளைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

1.இச்சரீர உணர்வில் பெறும் சுக துக்கங்கள் மாறி மாறி வந்தாலும்
2.அதிலே வரும் அந்தத் துன்ப உணர்விலிருந்து மீளும் நிலை எப்படி…? என்று அறிந்து
3.தன் வாழ்க்கையில் மோதப்பட்ட அத்தகைய சம்பவங்களினால் தான் சகல ஞானிகளும் மகரிஷிகளும் உருவானார்கள்.

வால்மீகியார் வேட்டையாடிப் புசிக்கும் வேடுவ குலத்தில் பிறந்து வேட்டை ஆடச் சென்ற காலத்தில் ஜோடியாக இருந்த இரண்டு புறாக்களில் ஒன்றை அம்பெய்து வீழ்த்துகின்றார்.

வீழ்ந்த புறா வேதனையில் துடிப்பதையும் வேதனையில் துடிக்கும் புறாவின் நிலையை அதனுடைய ஜோடிப் புறா பார்த்துத் துடிதுடிக்கின்றது.

பாச உணர்வால் துடிதுடிக்கும் புறாவின் வேதனையை தன் எண்ணத்தின் உணர்வில் உற்றுப் பார்த்த வேடனான வால்மீகியார்…
1.தாக்கும் நிலையை விடுத்துத் தன் ஞானத்தின் உயர்வை
2.வானை நோக்கி ஏகும் போது உண்மையை உணர்கின்றார்.

அந்த எண்ண அலைத் தொடரைக் கொண்டு அன்று அவருக்குப் பிறந்த ஞானம்தான் இராமாயணக் காவியமாக உருவாகியது.

அதற்குப் பிந்திய காலத்தில் மீனவனாய்ப் பிறந்த வியாசர்… மீன் பிடித்துத் தன் வாழ்க்கையை நடத்திச் சென்ற வழித்தொடரில்… கடலில் மீன் பிடிக்கச் சென்ற பொழுது கடலில் விழுந்து தவித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு மீன் (டால்பின்) அவரைக் கரை சேர்க்கின்றது.

1.எந்த மீன் இனத்தைத் தான் இம்சித்தோமோ அதே இன ஜீவன்
2.தன்னைக் காத்ததை எண்ணி அப்பொழுது ஏங்குகின்றார்.

அந்த நேரத்தில் உதித்த ஞானத்தின் உணர்வுதான் அவரின் உயர் ஞான சித்தில் மனித வாழ்க்கைக்கு உயரும் பக்குவமான “கீதையின் உபதேசமாகத் தன் தத்துவத்தை” வடித்து வெளிப்படுத்தினார்.

பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்… இந்த மனித வாழ்க்கையில் மனிதன் எந்த நிலைக்குச் செல்ல முடியும்…? எதை எதைப் பெற முடியும்…? என்ற ஞான உணர்வில் அகஸ்தியர் காடுகளில் ஜெபமிருந்தார்.

அப்பொழுது ஓரிடத்தில் பிரசவ வேதனையுடன் ஓர் பெண்ணின் அழு குரல் கேட்டு அருகில் சென்று பார்க்கும் பொழுது… குழந்தையைப் பிரசவித்த நிலையில் நீருக்காக அத்தாய் அழுவதைப் பார்க்கின்றார்.

அது படும் வேதனையைப் பார்த்து அப்பெண்ணைக் கூட்டி வந்த பெண்ணும் தாகம் தீர்க்கத் தண்ணீருக்கு ஓடிய நிலையைக் கேட்டு அறிகின்றார்.

அப்பெண் தாகத்திற்காகத் துடிக்கும் நிலையறிந்து தண்ணீர் கொண்டு வருவதற்குள் தாகத்தால் அந்தத் தாய் உயிர் நீத்துவிடுகின்றது.

இதைக் கண்ட அகஸ்தியர் இத்தனை காலங்களாக தன்னால் சாதிக்க முடியாத ஜெப சக்தியை நாம் பெற்றுள்ளோம். இருந்தாலும் நினைத்த மாத்திரத்தில் அந்தப் பெண்ணின் தாகத்திற்கு
1.நீரைக் கொடுக்கக் கூடிய சக்தி இருந்திருந்ததென்றால்…
2.தாகத்தால் உயிர் நீத்த அத்தாய்க்கு
3.தன்னால் நீர் தர முடிந்திருக்கும் என்ற உணர்வின் ஏக்கம் கொள்கின்றார்.

அந்த எண்ணத்தைக் கொண்டு வீரிய ஜெபம் இருக்கின்றார். அதன் வழி வந்த ஞானத்தால்
1.தான் பெற்ற அகத்தின் உணர்வின் ஸ்திரத்தால் அகஸ்தியர் என்ற நாமம் பெற்று
2.அவரின் சித்தின் உயர்வின் ரிஷி சக்தியால்…
3.அவர் அமர்ந்திருந்த இடங்களில் எல்லாம்
4.ஜீவ நதிகள் உற்பத்தியாகும் வழித்தொடர் உருப் பெறுகின்றது

மனித உணர்வுக்கு ஒத்த ஜீவ நீர் அலைத் தொடரில் “தன் சக்தியை” இன்றும் செயலாக்கிக் கொண்டுள்ளார்.

இப்பூமியில் குறுகிய காலத்தொடரில் கொங்கணவர் பெற்ற வழித்தொடரும் இதே முறையில் தான்.
காட்சி:
குன்றுகள் போன்று சிறு சிறு மலைகள் தெரிகின்றன. மேடான ஒரு மலையில் ஓலை வேயப்பட்டுச் சிறு சிறு குடிசைகளும் அதற்குப் பக்கத்தில் சாணியைக் கொண்டு மெழுகிய தரை விசாலமாகவும் தெரிகின்றன.

அதற்குச் சிறிது தூரத்தில் சிறு சிறு பையன்கள் குதித்து விளையாடுவதைப் போன்றும், விளையாடும் பையன்களைப் பார்த்து அந்த வழியாகச் சிறு மூட்டை ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு வந்த பையன் மற்றச் சிறுவர்களுடன் தானும் விளையாடப் போகின்றான்.

எதிர்பாராது ஓர் கூர்மையான கல்லில் இடிபட்டுப் பலத்த காயமுடன் விழுந்து அலறுகின்றான். குடிசையிலிருந்த ஓர் தாய் அச்சிறுவனை அக்குடிசைக்குள் படுக்க வைத்து அச்சிறுவனுக்கு உண்டான காயங்களுக்கு மருந்திட்டுப் பாதுகாக்கின்றது.

பின் அதே சிறுவன் அத்தாயுடன் சிறிது வளர்ந்த நிலையில் அத்தாய்க்கு உதவியாக மருந்து அரைத்துத் தருகின்றான்.

அதன் பிறகு ஓர் கல்லறையும் அக்கலறையில் மண் மேட்டில் அதே சிறுவன் மீண்டும் வளர்ந்த நிலையில் அக்கல்லறையின் கால்மாட்டில் அமர்ந்து அழுது கொண்டிருப்பதைப் போன்றும் காட்சி தெரிகின்றது.

அக்கல்லறையிலிருந்து அச்சிறுவனுக்கு உதவிய தாயே வெளிச்சமுடன் கூடிய உருவமாய் அச்சிறுவனின் உருவமுடன் ஒன்றியதைப் போன்றும்… மேடான ஓரிடத்தில் ஓர் மரத்தை வெட்டி அம்மரம் ஐந்து ஆறு அடி உயரத்தில் உயர்ந்த மேடை போன்று இருப்பதைப் போன்றும்… அந்த இடத்தில் சிறுவனாய் இருந்து பெரியவனான அப்பையன் அமர்ந்திருப்பதைப் போன்றும்… அதே பையனின் உருவம் வயது முதிர்ந்த நிலையில் தெரிகின்றது.

மற்ற ரிஷிகள் தெரியும் பொழுது அடர்ந்த முடி தெரியும். ஆனால் இவரின் நிலை சிறு சிறு முடியுடன் சன்னமான தேகமுடன் அமர்ந்திருப்பதைப் போன்றும் காட்சி தெரிகின்றது.

அவரை வணங்கி யாரோ ஆசீர்வாதம் கேட்கும் பொழுது… என்னிடம் ஒன்றுமில்லை… அத்தாய் சக்திதான்…! என்று அத்தாயை எண்ணி அவர் வணங்குகின்றார்.

அவருக்கு முன் ஒளியாக அத்தாயின் உருவம் தெரிந்து அத்தாயிடம் தான் ஆசீர்வாதம் பெற்றுத் தன்னிடம் ஆசீர்வாதம் வேண்டி நின்றவர்களுக்கு இவர் அருள் புரிகின்றார்.

இதனுடைய உண்மைத் தத்துவம் அனாதையான சிறுவன் பட்ட துன்பத்தை நிவர்த்தித்து ஆதரவு தந்து அத்தாயின் சக்தியால் உயர்ந்த கொங்கணவர்…
1.அத்தாயின் உணர்வுடனே தன்னையும் ஐக்கியப்படுத்தி
2.தனக்கு ஆதரவு தந்து தன்னை உருவாக்கிய அத்தாய் சக்திக்குத்தான் தன் சக்தி சொந்தமென்று தவிர்த்து
3.தன்னை உயர்த்திக் கொள்ளாமல் தாயின் ஜெபத்துடனே தன் உயர்வைக் கொண்டு
4.தாயின் உயர்வுடனே சகல சித்துத் தன்மையையும் பெற்ற பக்குவ நிலை கொண்டு செயல்பட்டார்.

ரிஷி சக்திகளின் உண்மைத் தொடர்பு ஆரம்ப வாழ்க்கை நிலைகள் எல்லாமே சகல மனிதர்களை ஒத்த நிலைதான்…!

ஆனால்… தங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய
1.எண்ணத்தின் உணர்வில் எதிர்ப்படும் மோதல் காலங்களில்
2.ஞானத்தின் உயர் ஞானத்தைக் கொண்டு உயர்ந்தவர்கள் தான் சகல மாமகரிஷிகளும்.

Leave a Reply