“ஊழ்வினை” என்று எலும்புக்குள் பதிவாகும் வித்தினைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்

Body cells formation

ஊழ்வினை என்று எலும்புக்குள் பதிவாகும் வித்தினைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்

 

ஒரு சமயம் காட்டிற்குள் செல்லும் போது (ஞானகுரு) ஒரு சிறு பூச்சி ஒன்று என்னைக் கடிக்கின்றது. அது கடித்தபின் எனக்கு மயக்கமே வருகின்றது.

குருநாதர் அதை விட்டுக் கடிக்கச் செய்கின்றார். என் உடல் முழுவதும் நஞ்சு பாய்கின்றது. அந்த விஷம் ஓடும்போது உடலில் ஒரு கருக்கல் போல்… அது இரத்த நாளங்களில் பட்டபின் இரத்த நாளங்களே கருப்பாகின்றது.

அப்பொழுது அதனின் உணர்வுகள் எவ்வாறு…? என்று எனக்குக் குருநாதர் காட்டுகின்றார்.

நீ இவ்வளவு பெரிய மனிதனாக ஆகியுள்ளாய். ஆனால் இதற்கு முன்னாடி இதைப் போன்ற பூச்சியாகவும் இருந்தாய். அந்தப் பூச்சியின் நிலைகளில் இருந்து தான் மீண்டாய்.

இப்பொழுது மீண்டும் அதே பூச்சி உன்னைக் கடிக்கும்போது உன் உணர்வின் நினைவாற்றல் அங்கே செல்கின்றது…?

அதனுடைய விஷம் படர்வதைப் பார். உன் கவன நரம்புகளைத் தாக்குவதைப் பார்… அங்கே தாக்குவதற்கு முன் நீ சிந்தித்துப் பார். ஆனால் இது உன் கவன நரம்பில் தாக்கிவிட்டால் உனது நினைவுகள் மறைந்துவிடும். நீ எங்கே செல்வாய்…? என்ற உணர்த்திக் காட்டுகின்றார்.

அந்த உணர்வலைகள் எனக்குள் படர்வதையும் என் நினைவாற்றல் முழுவதும்..
1.இந்தப் பூச்சி கடித்துவிட்டதே…
2.நான் மடிந்துவிடுவேனே…
3.இந்த உடலை விட்டுப் போய்விடுவேனே…! என்று
4.இந்த உணர்வுகள் தான் தோன்றுகின்றதே தவிர
5.தன்னைக் காக்கும் உணர்வுகள் வரவில்லை.

பரிணாம வளர்ச்சியில் பல கோடிச் சரீரங்களில் பூச்சியாக புழுவாக இருக்கப்படும்போது இன்று பார்க்கின்றோம். ஒரு பட்சி ஈயை விழுங்குகின்றது அதனைத் தன் இரையாக்கி கொள்கின்றது. ஆனால் ஈயின் உயிரோ பலியாகின்றது.

அதே சமயத்தில் பல்லியை ஒரு தேள் கொட்டுகின்றது. விஷத்தைப் பாய்ச்சுகின்றது. அது தசைகளை உணவாக உட்கொள்கின்றது.

இது போன்று பல கோடிச் சரீரங்களில் நீ எத்தனை இம்சைப் பட்டிருப்பாய்…? என்றார் குருநாதர்.

அதிலிருந்தெல்லாம் மீண்டிடும் நிலைகள் பெற்ற நீ.. மீண்டிடும் சக்தி பெற்றபின் உன்னால் ஏன் முடிவதில்லை…! ஒரு சிறு விஷம் கொண்ட அணு தான் இது…! ஆனால் கடித்தபின் அதனுடைய வலிமை உனக்கு எவ்வளவு பெரிய வேதனையாகின்றது.

உயர்ந்த ஞானங்கள் பெற்று உயர்ந்த நிலைகள் பெற்றதனால் அடுத்து விஷத்தை முறிக்கும் ஒரு மருந்தினை இதனுடன் இடப்படும்போது உனக்குள் அதைத் தடைப்படுத்துகின்றது.

ஆனாலும் அந்த விஷப் பூச்சி உன்னை கடித்ததல்லவா…!
1.அது கடித்தது உனக்குள் ஒரு வித்தாக ஊழ்வினையாகப் பதிவாகி விடுகின்றது.
2.மருந்தைக் கொண்டு புண்ணை ஆற்றிவிடலாம்…. இன்று நீ தப்பிவிட்டாய்.
3.ஆனாலும் இந்த விஷ அணுக்கள் ஊழ்வினையாகப் பதிவான பின் வித்தாகின்றது.

முதலிலே நீ நுகர்ந்த உணர்வுகள் ஓ… என்று இந்த உடலிலே அணுவாக மாறுகின்றது. மருந்தைக் கொடுத்து விஷத்தை நீக்கி நான் உன்னைக் காப்பாற்றுகின்றேன்.

1.கடித்த உணர்வின் தன்மை உன் எலும்புக்குள் அந்த விஷம் வித்தாக ஊன்றிவிடுகின்றது.
2.நீ நுகர்ந்ததோ ஓ என்று ஜீவ அணுவாக மாறுகின்றது
3.அந்த அணுவின் மலம் உன் உடலாக மாறுகின்றது.

நான் மருந்து கொடுத்து விட்டேன்… விஷத்தையும் முறித்துவிட்டேன்…! இதை நீ தெளிவாகத் தெரிந்து கொண்டாய்..
1.ஆனால் விஷத்தை உருவாக்கும் அந்த வித்து
2.உன் உடலுக்குள் ஊழ்வினையாக ஊன்றியுள்ளது.
3.இதை அடக்க முடியாது.

நிலத்திலே களைகளைப் பிடுங்குவது போல் மருந்தால் அந்த அணுக்களைக் கொன்றாலும் மீண்டும் அதை நினைவுபடுத்தினால் அந்த அணுக்கள் வளரத் தான் செய்யும். இதை நீ தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால்… இது போல் ஒவ்வொன்றும் தன் நினைவிற்கு வரவேண்டும்.

இந்தச் சந்தர்ப்பம் விஷம் என்று நீ அறிந்தது. இந்த உணர்வின் தன்மை பதிவானால் தான் அதே இனத்தின் தன்மை மீண்டும் வரப்படும்போது
1.இது தன் இனம் என்று கவர்ந்து… சுவாசித்து… உயிரிலே பட்டு…
2.இன்ன விஷம் கொண்டது என்பதனை நீ தெரிந்து கொள்ள உதவும்
3.மீண்டும் அத்தகைய விஷத்திலிருந்து தப்பித்துக் கொள்ள உதவும்.

இத்தகைய அறிவில்லை என்றால் உனக்கு நினைவில்லை என்று எனக்குத் தெளிவாக உணர்த்துகின்றார் குருநாதர்.

Leave a Reply