பிள்ளைக்குத் திருமணம் தடையாகிக் கொண்டே போகிறது என்று எண்ணுபவர்களுக்கு…!

spiritual-success

பிள்ளைக்குத் திருமணம் தடையாகிக் கொண்டே போகிறது என்று எண்ணுபவர்களுக்கு…!

உதாரணமாக… தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள்
1.”ஒருவருக்குத் திருமணம் ஆகவில்லை…!” என்ற அந்தக் குறைகளைத் தாய் கேட்டுப் பதிவாக்கியிருந்தால்
2.அந்த அதிர்ச்சியான உணர்வலைகள் அந்தக் கருவிலே விளைந்துவிடும்.
3.இது பூர்வ புண்ணியமாக அமைந்து… அதனால் பிற்காலத்தில் அந்தக் குழந்தைக்குத் திருமணத் தடை வருகின்றது.

ஆனால் இப்படித் தடைகள் வந்தாலும் அதை நாம் மாற்றி அமைக்க முடியும்.

என் குழந்தை அருள் ஞானம் பெறவேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தையின் உடலிலே படர வேண்டும். திருமணமாகி எங்கே சென்றாலும் அந்தக் குடும்பத்தில் தொழில் வளம்… செல்வம்.. செல்வாக்கு பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.

ஆனால் குழந்தை மீது பாசமாக இருக்கும் பொழுது பிள்ளைக்கு வயதாகின்றதே… திருமணம் ஆகவில்லையே…! என்ற சோர்வும் அதனால் வேதனையும் வரும் பொழுது பாலிலே பாதாமைப் போட்டாலும் பாதாமிற்குள் சிறிது விஷம் பட்டால் என்ன செய்யும்..?

பாதாமிற்குச் சக்தி இழந்து விடும்.

பக்தி மார்க்கங்களில் நாம் சென்றாலும்… நல்லது நடக்கும் பொழுது மகிழ்ச்சி வரும். கொஞ்சம் குறையானால் அந்த குறையைத் தாங்கும் நிலையற்றுப் போய்விடுகின்றது.

வாழ்க்கையில் வரும் குறையை நிவர்த்தி செய்வதற்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்தத் தியானத்தை உங்களுக்குச் சொல்கிறோம்.

கடவுளின் அவதாரத்தில் வராக அவதாரத்தைக் காட்டினார்கள் ஞானிகள். பரிணாம வளர்ச்சியில் புழுவிலிருந்து பல கோடிச் சரீரங்கள் எடுத்துக் கொண்ட பின் வராகனகாக வரும் பொழுது சாக்கடையில் உள்ள நாற்றத்தை நீக்கிவிட்டு நல்ல உணர்வை நுகர்கின்றது.

1.அதன் வாழ்க்கையில் அது அறிந்து நுகரவில்லை….!
2.சந்தர்ப்பத்தில் விளைந்து கொண்ட உணர்வை அது நுகர்கின்றது.
3.நுகர்ந்த உணர்வுகள் அதன் உடலிலே சேர்கின்றது.
4.நல்லதை நுகர்ந்த உணர்வோ அந்தப் பன்றி உடலைப் பிளக்கின்றது.
5.பன்றி உடலைப் பிளந்த பின் பரசுராம்… மனிதனாகப் பிறக்கின்றது
6.தீமைகளை நீக்கும் அந்த அருள் சக்தியை மனித உடலில் பெறுகின்றது.
7.ஏனென்றால் சமப்படுத்தும் உணர்வுகளாக அந்த எண்ணங்கள் நமக்குள் தோற்றுவிக்கும்.

இதன் வழிப்படுத்தி மனிதன் வாழக் கற்றுக் கொண்டால் தீமையை அகற்றிக் கொள்ளலாம். இப்படி ஒவ்வொன்றையும் சமப்படுத்தி நாம் வாழ்வோம் என்றால் நமக்குள் அருள் என்ற நிலைகளும்… ஞானிகளின் உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்ட பின்.. இனிப் “பிறவியில்லா நிலை..” என்ற நிலையை அடையவும் இது உதவும்.

ஏனென்றால் பற்றின் நிலை கொண்டு எனக்கு வரவில்லையே.. ஒன்றும் எனக்குக் கிடைக்கவில்லையே…! என்ற எண்ணத்திற்குப் போக வேண்டியதில்லை.

இந்த மனித வாழ்க்கையில் குடும்பத்தில் எல்லோரும் நலமாக வேண்டும்…! என்ற பற்றுடன் தான் இருக்க வேண்டுமே தவிர
1.கல்யாணம் நடக்கவில்லையே…! என்ற பற்றைக் கூட்டினால்
2.அந்த உணர்வின் தன்மை முன் நின்று நடத்தச் செய்யும் நல் உணர்வுகளைத் தாழச் செய்யும்.
3.நாம் செய்யக்கூடிய காரியங்களுக்குத் தடையாகும்.

நாம் எதை எண்ணுகின்றோமோ இதை ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி ஓ..ம் நமச்சிவாய…! என்று உடலாக நம் உயிர் உருவாக்கி விடுகின்றது.

சிவாய நம ஓம்…! நமக்குள் பதிவு செய்த உணர்வுகளே மீண்டும் நமக்குள் அந்த எண்ணங்களாகத் தோற்றுவித்து நம்மைச் சோர்வடையச் செய்யும்.

நம் பெண்ணைப் பார்க்க வருவோருக்கும் இந்தச் சோர்வான உணர்வுகள் படப்படும் பொழுது வருவர்கள்… பார்ப்பார்கள்… போய் விடுவார்கள்…! இதைப் போன்ற நிலையில் நம் மனம் தான் வருவோரை அகற்றுகின்றது

தாயின் கருவின் மூலம் வந்த அந்த உணர்வின் தன்மை நமக்குள் வித்தாக வளர்த்து அந்த உணர்வின் தொடர் வரிசையிலேதான் இந்த வாழ்க்கையில் இப்படி ஒரு தடை வருகின்றது. இதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும் அல்லவா…!

மேலும் இந்தக் காற்று மண்டலமே இன்று நச்சுத் தன்மை ஆகிவிட்டது. இதிலிருந்து மனிதர்கள் நாம் எப்படி மீள வேண்டும்..? என்பதற்குத்தான் ஆத்ம சுத்தியையும் தியானத்தையும் உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

ஆகவே ஒவ்வொரு நிலையிலும் தியானத்தின் மூலம் அருள் சக்திகளை அதிகமாகக் கூட்டிக் கொண்டு
1.வரும் எந்தக் குறையாக இருந்தாலும் அதை மனதில் இருத்தாதபடி மாற்றிட வேண்டும்.
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.அருள் ஞானம் பெருக வேண்டும்… அருள் வழியில் வாழ்க்கை நலம் பெறவேண்டும்
4.எங்கள் பார்வை அனைவரையும் நலமாக்க வேண்டும்
5.நாங்கள் பார்ப்போர் எல்லாம் நலம் பெறவேண்டும் என்ற இத்தகைய உணர்வுகளை வளர்த்துக் கொண்டே வந்தால்
6.அருள் உணர்வின் கரு நமக்குள் உருவாகும்… இந்த உணர்வின் அலைகள் நமக்குள் பெருகும்.

அதன் மூலம் நம் சொல் அனைவருக்கும் நலமாகின்றது. நாம் எண்ணிய காரியங்கள் ஜெயிக்கும் தன்மையாக அதன் உணர்வின் இயக்கமும் நமக்குள் தொடர்ந்து வரும்.

 

Leave a Reply