ஞானப் பொக்கிஷத்தை நேரடியாகக் கொடுத்தாலும்… பயன்படுத்துவார் இல்லை

Gnaguru and Eswarapattar

ஞானப் பொக்கிஷத்தை நேரடியாகக் கொடுத்தாலும்… பயன்படுத்துவார் இல்லை

 

மனித வாழ்க்கையில் தவறு செய்யாமலே சாப அலைகள் எப்படித் தாக்குகின்றது…? என்பதைக் குருநாதர் சொன்ன நிலைகளில் ஒவ்வொன்றையும் பரீட்சித்துப் பார்த்ததைத் தான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

ஒரு உடலிலிருந்து வரக்கூடிய தீய வினைகள்… சாப வினைகள்… எப்படி வருகின்றது…? ஒரு தலை முறைக்கு இரண்டு தலை முறைக்கு அது எப்படிப் பாதிக்கின்றது..? என்று நேரடியாகக் காட்டுகின்றார்.

1.ஆனால் அவர்களுக்கு நீ இந்தப் பாதிப்பைப் போக்குகின்றாய் என்று வைத்துக் கொள்வோம்.
2.அதனால் அவர்களுக்கு அங்கே மகிழ்ச்சியாகும்.
3.அந்த உணர்வுகள் நல்லதாக ஆன பின் மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள்.
4.இருந்தாலும் நீ சொல்லும் ஞான வழியினை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள்.
5.மீண்டும் அவர்கள் செல்லும் வழியிலேயே சென்று “தவறு செய்யத் தொடங்குவார்கள்…”
6.அந்தத் தவறின் தன்மை வந்தது… அன்றைக்கு நல்லதாக ஆனது.
7.ஆனால் மீண்டும் இன்றைக்கு ஆகவில்லையே…! என்று ஏங்கிக் கொண்டு
8.நீ சொல்லும் ஞானிகள் உணர்வை அவர்கள் எடுக்கவே மாட்டார்கள்…! என்று
9.ஈஸ்வரபட்டர் எமக்கு இதை எல்லாம் தெளிவாக்குகின்றார்.

உடனடியாக ஒரு தரம் நல்லதாக ஆனால்… அதைப் பக்குவப்படுத்தி அந்த மெய் ஞானிகளின் உணர்வை எடுத்து வளர்த்துக் கொண்டால் அடுத்து வரும் தீமைகளை மாற்றியமைத்துக் கொள்ள உதவும்.

அதைப் போல் குரு அருளால் நலமாக வேண்டும் என்று ஞானிகள் உணர்வைப் பதிவு செய்கின்றோம். ஆனாலும் பதிவு செய்யும் பொழுதே என்ன செய்கின்றார்கள்…?

எங்கெங்க…? என் துன்பம் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது…! பணம் வாங்கிச் சென்றவன் தர மாட்டேன் என்கிறான்…! என்று என்னிடமே திருப்பிச் சொல்கிறார்கள்.

ஒரு நோயாளிக்கே நல்ல வாக்கினைக் கொடுத்தாலும் அவர்கள் சார்புடையோர்… (அதாவது அவரைக் கூப்பிட்டுக் கொண்டு வந்தவர்கள்)
1.“இவருடைய கஷ்டத்தை ஒன்றும் சொல்ல முடியாது…!” என்று இப்படி ஞாபகப்படுத்துகின்றார்கள்.
2.யாம் சொல்லும் ஞான உணர்வுகளை அவர்களைக் கேட்க விடாதபடி இடைமறித்து
3.இப்படிச் சொல்லகூடிய உணர்வுகள் தான் வருகின்றது.

அருள் வாக்கினைப் பதிவு செய்து… நினைவுக்குக் கொண்டு வந்து அவர்களை மீட்க வைக்கலாம்…! என்று நான் (ஞானகுரு) எண்ணினாலும் முடியவில்லை.

ஆனால் இதை எல்லாம் அறிந்து கொள்ள எத்தனை சிரமப்பட்டேன்…? எத்தனை அவஸ்தைப்பட்டிருப்பேன்…! காட்டுக்குள் அழைத்துச் சென்று தான் குருநாதர் இதை எல்லாம் அனுபவபூர்வமாகக் காட்டினார். நேரத்தில் சாப்பிடுவதற்கு சோறு (உணவு) இல்லை.

காட்டுக்குள் சென்றால் குருநாதர் என்ன செய்வார்…?

கத்திரிக்காய்… மிளகாய்… மாங்காய்… என்று மோரில் ஊற வைத்ததை அவர் எடுத்துக் கொடுப்பார். அதிலே அவர் எத்தனையோ பக்குவம் செய்து வைத்திருப்பார். உப்பு காரம் என்று தனியாக எதுவும் எடுத்துக் கொண்டு போவதில்லை.

இதிலேயே தான் எல்லாம் இருக்கும்.

ஒரு சிறிய டப்பா தான். அதிலே சிறிதளவு அரிசியை எடுத்துப் போட்டு நீரைக் கொஞ்சம் விட்டு அதனுடன் மோரிலே ஊற வைத்த ஒரு மிளகாய் அல்லது கத்திரிக்காயைப் போட்டு வேக வைக்கச் சொல்வார்.

பின் அது எல்லாம் வெந்த பின் குருநாதர் ஒரு அளவாகத் தண்ணீரை ஊற்றுவார். கஞ்சி மாதிரிப் பக்குவம் வரும். ஆளுக்குக் கொஞ்சம் குடித்துக் கொள்வோம்.

இது எப்படிடா… இருக்கின்றது…? என்பார் குருநாதர்.

நன்றாக இருக்கிறது சாமி…! என்பேன்.

ஒரு லிட்டர் அரிசியை வைத்து நானும் குருநாதரும் காட்டிற்குள் “இரண்டு மாதம் சாப்பிட்டுக் காலம் தள்ளியிருக்கின்றோம்…!” என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

வேறு ஒன்றையும் அங்கே சாப்பிட விடமாட்டார். சாம்பாரும் அது தான்… காயும் அது தான்…! எல்லாம் அந்தக் கஞ்சியைக் குடித்துக் கொள்ள வேண்டியது தான்,

குடும்பம்… தொழில்… உணவு… எல்லாவற்றையும் விட்டுத்தான் யாம் இத்தனையும் தெரிந்து கொண்டு வந்தோம். அப்படிப் பெற்ற ஞான வித்தை உங்களுக்குள் பதிய வைக்க எத்தனையோ வழிகளைச் செய்கிறோம்.

ஆனால் அதை எத்தனை பேரால் எடுத்து வளர்க்க முடிகிறது…? தனக்குள் வந்து தீமைகளையும் சாப அலைகளையும் போக்க முடிகிறது…?

1.சாமி செய்வார்…
2.குருநாதர் செய்து தருவார்.. என்ற எண்ணத்திலேயே தான் இருக்கின்றார்களே தவிர
3.யாம் பதிய வைக்கும் ஞான வித்தை வளர்ப்பார் இல்லை…!

Leave a Reply