ஆத்மாவின் விழிநிலை ஜோதி நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Atma awakening

ஆத்மாவின் விழிநிலை ஜோதி நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சகல ஜீவ சக்திகளிலும் சரீர உணர்வினால் செயல்படும் ஒளித் தன்மையின் விழி நிலை (கண் பார்வை) ஜீவராசிகளுக்குத்தான் உண்டு.

பூமியும் பூமி வளர்க்கும் தாவர இனம் மற்றைய தாதுப் பொருள்கள் ஒவ்வொன்றும் ஜீவ சக்தி கொண்டது தான். இருந்தாலும் அவற்றின் முலாம் வளர்ச்சியின் முதிர்வு நிலையில் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்றாக மாறி மாறி வரும் நிலை வளர்ப்பு… அழிவு… வளர்ப்பு… என்றே வந்தது.

அதன் வளர்ச்சி நிலையில் அணு சமைத்து வளர்ந்த முலாம் கொண்டு உயிரணுவாகத் தோன்றியது. உயிரணுவாகத் தோன்றினாலும் அவை ஒவ்வொன்றூம் பல வார்ப்பு நிலையில் வளர்ந்து… அழிந்து… சக்தி கொண்டு… பல நிலைகளுக்குப் பிறகு ஜீவனுள்ள சரீரம் பெறுகிறது.

சரீரம் பெற்ற நிலையில் ஊர்வன நீந்துவன பறப்பன நடப்பன என்ற ஜீவராசிகளின் வளர்ச்சியில் விழிநிலையில் ஒளி காணும்… உருவக எதிர் நிலையை… அறியும் ஆற்றல் வருகின்றது. அதாவது
1.விழியின் ஒளியை எதிர்ப்படும் பொருள் கண்டு
2.விழியின் பாப்பாவில் படம் பிடித்து
3.அதனதன் உணர்வு கொண்ட எண்ணத்தில் அறிந்து செயல்படும் வாழ்க்கை நிலை நடக்கின்றது.

ஆனால் சாதாரண பிறப்பு இறப்பு என்ற நிலையில் ஜீவ சக்தி பிரிந்து உடலை விட்ட உயிராத்மாவிற்கு ஆத்ம ஒளி வட்டம் தான் உண்டு. இந்தக் காற்றலையில் தான் சுழலும்.

ஜீவன் பிரிந்த ஆத்மாக்கள் காற்றலையில் மிதந்து கொண்டே இந்தப் பூமி ஈர்ப்பில் சுழன்றாலும் விழியால் பார்க்கும் நிலை அந்த ஆத்மாக்களுக்கு இல்லை. சுவையையும் மணத்தையும் நுகரும் சுழற்சி வட்டத்தில் தான் அவை சுழலுகின்றது.

ஜீவனுடன் உள்ளவர்களின் சரீர எண்ணத்தால்…
1.உடலை விட்டுப் பிரிந்தவர்களின் நினைவில் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது
2.அவ்வலையின் உணர்வு இவர்களின் மேல் மோதி
3.அந்தத் தொடர்புடன் அவர்களுக்கும் ஜீவ காந்த அலைத் தொடர்பு கிட்டியவுடன்
4.அவர்கள் தொடர்புடன் ஆவி ஆத்மாவும் விழி அலை பிம்பத்தை எதிர் கொண்டு பார்க்க முடிகின்றது.

அலை உணர்வின் தொடர்பைக் கொண்டு “பார்க்கும் நிலையானது” எப்படி..?

ஒரு புகைப்படக் கருவியைக் கொண்டு (CAMERA) அதில் பூசப்பட்ட அமிலப் புகை பிம்பத் தாள்களை (FILM) அக்கருவியுடன் பொருத்தி அதற்குகந்த விசை அழுத்தத்தைத் தந்தால் எதிர் பிம்பத்தைப் பதிவு செய்வதைப் போன்று தான் ஆவி ஆத்மாக்களின் செயல்கள் உண்டு.

எதிர் நிலையில் காண்பதை விழியில் காணும் நிலை தான் மனித சரீரத்திற்கே உண்டு. தன் முதுகைத் தானே காண முடியாது. தன் பிம்பத்தையே எதிர் அலையின் நிலைக்கண்ணாடியிலோ நீரிலோ தான் பார்க்கும் நிலை உண்டு.

ஆதம தியான சக்தியைக் கொண்டு… ஞான திருஷ்டியால்… விழியை மூடிக் கொண்டு… ஞானத்தால் பெறும் தியான சக்தியில்… ஆத்ம சக்தியின் உயர்வு நிலையால்…
1.இச் சரீரக் கூட்டிலிருந்தே சகல சித்துக்களையும் பெறும் வழித் தொடர் கொண்டு
2.ஞானத்தால் காணும் விழியின் ஒளி நிலைக் காட்சிகளை
3.எண்ணியவை யாவையுமே காணத்தக்க விழி நிலையின் ஒளித் தன்மை… இவ்வாத்ம அலையைப் பெற்றுவிட்டால்
4.ஏகமும் ஒன்றான அகில சக்தியின் தொடர்பிலும் விழி அலை ஒளி நிலையில் காண முடியும்.

அத்தகைய நிலை பெற வேண்டும் என்றால் இச்சரீரக் கூட்டின் சமைப்பில் காந்த மின் அலையின் வலுத்தன்மையை எலும்புக் கூடுகள் பெற்றிருக்க வேண்டும்.

அப்படிப் பெற்ற தன்மை கொண்டு தான்…
1.ஆத்மாவின் விழி நிலையின் ஜோதி நிலை கொண்டு
2.நம் வளர்ப்பின் தொடருக்கு வழி காட்டிய ரிஷிச் சக்தியின் உயர்வுத் தொடர்புடன்
3.மகரிஷிகளின் அருள் வட்டமுடன் நம் ஐக்கியச் செயலையும் ஐக்கியப்படுத்தலாம்.

இது எல்லோராலும் சாத்தியமானதே…!

ஆகவே பிறவா வரம் கொண்ட ஜோதி நிலை பெறும் ஒளி நிலையின் உயர் தத்துவத்தை ஒவ்வொருவரும் உணர்ந்தீர்கள் என்றால் உயர்வு கொண்ட அந்த “ஒளி நிலையின்…” உண்மை புரியும்.

Leave a Reply