மின்னல்களைக் கவர்ந்து… துருவ நட்சத்திரமானவன் தான் அகஸ்தியன்..!

agastyan and lightning

மின்னல்களைக் கவர்ந்து… துருவ நட்சத்திரமானவன் தான் அகஸ்தியன்..! 

 

நம் உயிர் ஒரு தனி நட்சத்திரம் அல்ல…!

ஜோதிடம் பார்ப்பவர்கள்… உதாரணமாக நீ கார்த்திகை நட்சத்திரக்காரர்…! என்று “ஒரு” நட்சத்திரத்தைச் சொல்வார்கள். அது பிழை.

ரேவதி நட்சத்திரத்துடன் கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தியும் ஆண் பெண் என்ற நிலைகளில் கலந்தால் தான் உயிரணு தனக்குள் ஒன்றை நுகர்ந்து உருவாக்க முடியும்.

நட்சத்திரங்கள் ஆண் பெண் என்று ஒன்றுடன் ஒன்று மோதித் துகள்களாக மாறும் பொழுது நம் பூமிக்குள் அவைகள் வரும் பொழுது அதிலே
1.ஆண் நட்சத்திரத்தின் சக்தி அதிகமாக இருந்தால் பாறைகள் அங்கே ஜாஸ்தி “வலுப் பெற்றதாக…!” இருக்கும்.
2.பெண் பால் நட்சத்திரத்தின் சக்தி அதிகமாக இருந்தால் அந்தப் பாறை அங்கே வேகமாக வளரும்… அது “தன் இனத்தைப் பெருக்கும்…!”

இதைப் போல் தான் செடிகளிலும் ஆண் செடி பெண் செடி என்று உண்டு. ஆண் செடிகள் இல்லை என்றால் பெண் செடிகளில் இராசி பலன் இல்லை.

நெற் பயிர்களில் பார்த்தோம் என்றால் ஆண் பெண் விகிதாச்சாரம் குறைவாக இருந்தால் அங்கே பலன் இருக்காது… நல்ல மகசூல் காண முடியாது.

மரங்களிலும் அதே போல் தான். பனை மரங்களிலும் ஆண் பெண் என்று உண்டு. பப்பாளி மரத்திலும் ஆண் பெண் உண்டு. ஆண் பப்பாளி மரம் இல்லை என்றால் பெண் பப்பாளியில் கருவுறாது… பலன் கிடைக்காது.

ஆகவே இதைப் போல் ஆண் பெண் என்ற நிலையில் தான் எல்லாமே வருகின்றது. இந்த உண்மைகளை எல்லாம் உணர்ந்தவன் அகஸ்தியன்.

1.கணவனும் மனைவி இருவரும் தனித்து இருந்தாலும் ஒன்றாக இணைக்கும் பருவம்
2.மனிதனான பின் இதைச் செயல்படுத்த முடியும் என்று உணர்ந்தவன் அகஸ்தியன்.

மற்ற மிருகங்கள் தன்னத் தப்பி வாழத் தன்னைக் காட்டிலும் வலு கொண்ட உணர்வைச் சுவாசித்துப் பரிணாம வளர்ச்சியில் வருகின்றது,

மனிதனாக ஆனபின் கணவன் மனைவி இரண்டு உயிரின் நட்சத்திரங்களும் வேறு வேறு ஆக இருந்தாலும்… இந்த நட்சத்திரங்கள் சேர்க்கப்படும் பொழுது ஒரு உருப்பெறும் தன்மை வருகின்றது.

ஆண்பால் என்ற கார்த்திகை நட்சத்திரத்திற்கு ரேவதி நட்சத்திரம் என்ற பெண் பால் நட்சத்திரம் இருந்தாலும் இதே மாதிரிப் பெண்களுக்கு ஆண் பால் நட்சத்திரத்தின் உணர்வும்
1.இப்படி நான்கு நிலை வரப்படும் பொழுது தான் பிரம்மம் என்ற நிலையே உருவாகின்றது.
2.இந்த நான்கு நட்சத்திரங்களும் இரண்டு உயிருடன் சேர்த்து இணைக்கப்படும் பொழுது தான்
3.எதைக் கவர்ந்தனரோ அந்த ஒளியின் கற்றையாக வளர்கின்றது.

இப்படி வளர்ச்சி அடைந்த நிலைகளில் தான் நட்சத்திரங்களின் விஷத் தன்மைகளை முறிக்கும் தன்மை பெற்ற அகஸ்தியன்
1.மின்னல்களைக் கண்ட பின் ஆனந்தமான நிலைகளில் அதைக் கவர்ந்து கொண்டான்
2.அந்த உணர்வின் தன்மையை எடுத்து உடலிலுள்ள அணுக்கள் அனைத்தும் மாற்றிக் கொண்டான்
3.அதாவது உயிரைப் போலவே (நட்சத்திரத்தின் ஒளிக் கற்றைகளாக) மாற்றினான்.

இதை வைத்துத் தான் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) என்னிடம் சொன்னார். ஏய்.. மின்னல் பாய்வதைப் பாருடா…! என்பார். அப்பொழுது எங்கள் இரண்டு பேருக்கும் சண்டை வரும்.

நான் (ஞானகுரு) மின்னலைப் பார்க்கும் பொழுது என் கண்கள் போனால் யார் சாமி கொடுக்கிறது..? நாம் பிள்ளை குட்டிக்காரன்..! என்பேன்.

அவர் என்ன சொல்வார்…? நான் சொல்வதை எல்லாம் செய்கிறேன் என்று சொன்னாய் அல்லவா…!

சாமி… நான் கண் இல்லாமல் போனால் என்ன செய்வேன்…? என்று எனக்கும் அவருக்கும் சண்டை வரும்.

அந்த மின்னலின் இயக்கங்கள் வரப்படும் பொழுது அந்தத் துகள் என்ன ஆகின்றது..?
1.நான் இருக்கிறேன் அல்லவா…
2.நான் உன்னைத் தொடுகிறேன் அல்லவா…! என்பார் குருநாதர்.

அதாவது.. அவர் கையால் என்னைத் தொட்டு எர்த் செய்து (ELECTRICAL WIRE EARTH போல) “இப்பொழுது மின்னலைப் பாருடா…!” என்கிறார் குருநாதர்.

அந்த உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதியவுடன் இது எந்த நட்சத்திரத்திலிருந்து வந்தது…? இது எதனுடன் மோதும் பொழுது இந்த மின் கதிர்கள் மாறுகிறது எப்படி என்பதையெல்லாம் காட்டுகின்றார்.

அதற்குப் பின் தான் நான் துணிந்து பார்க்க ஆரம்பித்தேன்…!

குருநாதர் என்னைத் தொட்டுக் காண்பித்தது போல் தான் அந்த உணர்வுகளை எல்லாம் உங்கள் எல்லோரிடமும் உணர்வால் தொட்டுக் காண்பிக்கின்றேன்.

இந்த உணர்வுகள் தொடும் பொழுது உங்கள் உடலுக்குள் என்ன செய்கிறது…? ஊடுருவுகிறது…! ஒளியாக மாற்றும் பருவம் பெறுகின்றீர்கள்,
1.நீங்களும் அந்த உணர்வினைக் கவர்ந்து ஒவ்வொரு அணுக்களையும்
2.இந்த உயிரைப் போல ஆகும் அந்தத் திறன் பெறவேண்டும் என்பதற்குத்தான் இதை உங்களிடம் சொல்கிறேன்.

Leave a Reply