கடவுளைப் பார்க்க முடியுமா…? உணர முடியுமா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Inner god

கடவுளைப் பார்க்க முடியுமா…? உணர முடியுமா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆதிசக்தியின் சக்திக் குழந்தைகளான எல்லாமின் எல்லாமாக இறை சக்தி நிறைந்துள்ளது. ஒவ்வொரு சாராரும் இறைவனை அவரவர்கள் ஒவ்வொரு வழி கொண்டு வணங்குகின்றனர்.

நாஸ்தீகம் பேசுபவர்கள் (கடவுள் இல்லை என்பவர்கள்) இறை சக்தியைக் காட்டச் சொல்கின்றனர். எல்லா ஜீவராசிகளும்.. எல்லாமும் இறைவன் தான்…! என்றாலும் இறைவனை நாம் காண முடிகின்றதா…?

காட்சி:-

முதுகில் அரிப்பெடுத்த ஒருவர் அரிப்பெடுத்த இடத்தைத் தன் கையால் கீற முடியாமல் மற்ற உபகரணத்தை எடுத்துக் கீறுவதைப் போன்றும்… முதுகைச் சுவற்றில் தேய்ப்பது போன்றும் காட்சி தருகின்றார்.

விளக்கம்:-

தன் முதுகு தான்… ஆனால் தன் முதுகைத் தானே சொறிவதற்கு முடிவதில்லை. அந்த இடத்தில் என்ன உள்ளது…? என்று பார்க்கவும் முடிவதில்லை.

ஆனால் தனக்குச் சொந்தமான முதுகு தான். அதில் ஏற்படும் நமைச்சலையும் உணர்ச்சிகளையும் உணர முடிகின்றது.

அதைப் போன்று ஒவ்வொரு உயிரினத்திலும் அவ்வுயிரணு தோன்றிடவே
1.ஆண்டவனின் சக்தி ஆவியாக… உயிர் கொண்டு இருந்து தான்
2.அனைத்து ஜீவன்களுமே வாழுகின்றன.
3.இப்படி இருக்க… ஆண்டவன் என்ற தனித்த பிம்பத்தைக் காட்டினால் தான் ஆண்டவன் என்று உணர முடியுமா…?

ஆகவே ஆண்டவனின் அருள் சக்திக்குகந்த செயல்படும் ஜீவன்களாகத் தான் ஒவ்வொரு ஜீவனும் ஜீவித்து வாழ்கின்றது.

இதை உணராமல்… தனக்கு எந்த அளவு சக்தி நிலை உள்ளதோ அந்த நிலையில் எடுக்கும் செயல் வாழ்க்கை தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும்… “அவன் எடுக்கும் சுவாச எண்ணம் கொண்டு செயல்படுகின்றது…”

1.நுண்ணிய சிறு கருவிகளை…
2.நுண்ணிய சிறு உறுப்பின் துணை கொண்டு தான் அதன் வேலைப்பாடு செய்ய முடிகின்றது.
3.கனம் கொண்ட பெரிய உறுப்புகளின் செயலுக்கு
4.அதன் செயலுக்குகந்த வலுவான சாதனப் பொருள் கொண்டு தான் அந்தப் பொருளை உருவாக்க முடிகின்றது.

அதைப் போன்றுதான் நாம் எடுக்கும் குறுகிய எண்ணத்தின் வளர்ச்சி கொண்ட சுவாசமாக இருந்தால்… அதன் தன்மைக்குகந்த குறுகிய ஞானம் கொண்ட வாழ்க்கை தான் நமக்கு அமையும்.

1.எண்ணத்தின் வலு…
2.எதன் அடிப்படையில் எதன் சக்தித் திறன் கூடுகின்றதோ
3.அதன் செயல் ஞானம் தான் நமக்கும் கிட்டும்.

எண்ணத்தின் உயர்வை இந்த உடல் என்ற ஆவியுடன் கூடிய ஆத்ம உயிர் இந்தப் பிம்பத்தில் உள்ள பொழுதே நம் சுவாச அலையை உயர்ந்த ஞான எண்ணமுடன் செலுத்தி எடுப்போமானால்… இப்பொழுதுள்ள ஜீவ சக்தி கொண்ட இந்த உடலில் எடுக்கும் ஞான அலையைக் காட்டிலும் “உயர்ந்த ஞான அலையை நாம் பெற முடியும்…”

இந்த மனிதப் பிறவியில் (உடலில்) இருக்கும் பொழுது தான் அதைச் செயல்படுத்த முடியும். ஆவி நிலையிலிருந்து பெற முடியாது.. மிருகங்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் அந்தத் தகுதி கிடையாது.

காட்சி:-

ஒரு பந்து நீரில் மிதந்து ஓடிக் கொண்டே உள்ளது. அந்தப் பந்தில் சிறு துவாரம் ஏற்பட்டவுடன் பந்தில் உள்ள காற்று பிரிந்து அந்தப் பந்தானது நீரின் உள் பாகத்திற்கு நிலத்திற்குச் சென்று விடுகிறது.

விளக்கம்:-

ஆக… இந்த உடல் என்ற காற்றடைத்த இந்தப் பந்து இந்த உடலில் உள்ள உயிர் ஆவி பிரிந்தவுடன்… நடக்கவோ நிற்கவோ முடியாமால் ஜீவனற்று… இந்தக் காற்று பிரிந்தவுடன் நிலத்துடன் கனத்து ஐக்கியப்பட்டு விடுகின்றது.

அதைப் போன்று இந்தக் காற்றின் அலை சக்தியை
1.நம் சுவாச நிலை கொண்டு நம் உடல் ஆத்மா மட்டும் வாழ்வதோடு அல்லாமல்
2.நம் எண்ணத்தின் ஆத்ம வலுவின் சக்தியும் வாழுகின்றது.
3.அதன் சக்தித் திறனை வழிப்படுத்தித் தருவது தான்
4.இங்கே ஈஸ்வரபட்டனாகிய யான் வெளிப்படுத்தும் இந்தத் தத்துவத்தின் உண்மை ஞான வழித் தொடர்…!

Leave a Reply