மனிதனுடைய ஆணிவேர் எது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Taproot meditation

மனிதனுடைய ஆணிவேர் எது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஓ…ம் என்னும் பதத்திற்கு ஓ..ம் என்ற ஓங்கார இசையினிலே கலந்திருப்பாய்..! என்று பாடுகின்றாய். அந்தப் பாடலின் ஆணிவேர் என்னப்பா…?

ஒரு நிமிடம் உன் நிலையில் பகர்கின்றேன். ஒரு சொல்லில் பகர்ந்திடப்பா…! உதய வழியை அளிக்கத்தான் இந்த நாள் முதல் உன் மனதிற்கு அளிக்கின்றேன்.

1.தாவரங்களின் உயிர்… அந்த ஆணிவேரில் உள்ளது
2.அதன் ஈர்ப்புத் தன்மை சூரிய ஒளி பட்டுக் கீழ் நோக்கி இழுக்கின்றது.
3.மனிதனின் ஆணிவேர் “உயிர்…” சிரசின் முன் பகுதியில் உள்ளது…!
4.மனிதனின் சுவாச நிலை சூரிய ஒளி பட்டவுடனே தன்னைத் தானே சுற்றுகிறது.
5.இந்த உலகத்தின் ஆணிவேர் அவ் ஓ…ம் என்ற ஓங்கார இசையினிலே சுழல்கிறது.

உன் உதயத்தில் உன் ஜெப நிலையில் அவ்வுலகச் சுழற்சியில் ஓ…ம் என்ற ஓங்கார நாதத்தை நீ உணர்ந்திடலாம். ஒரு நிமிடம் ஜெப நிலையில் இருந்திட்டால் உன்னைச் சுற்றியுள்ள ஒலிகள் எல்லாம் அடங்கும்.

அவ் ஓ…ம் என்ற ஓங்கார இசையை ஜெப நிலையின் பொருள் நம்மைச் சுற்றியுள்ள ஓ…ம் என்ற ஓங்கார நாதத்தை அருளச் செய்யத்தான் இந்நிலையை உண்டாக்கினேன்.

1.ஏட்டுப் படிப்பு மட்டும் தான் ஏற்கின்றாய்.
2.செயலில் வர வேண்டுமப்பா…!

ஓ..ம் என்ற ஒலியின் ஓங்கார இசையில் நிலைத்திடத்தான் ஓ..ம் சக்தி என்ற பாடலை அமைத்திட்டேன்.
1.உருளுகின்ற சக்தியே…
2.உயிரணுவின் சக்தியே…
3.உயர்ந்து நிற்கும் சக்தியே…!

பாடலின் பொருளும் இந்தப் பாடத்தின் பொருளும் ஒன்று தான்.

ஓங்கார இசையினிலே ஓங்கி நிற்பாள் ஓ..ம் சக்தி
சிங்கார இசையினிலும் இருந்திடுவாள் ஓ..ம் சக்தி
சினமெல்லாம் தவிர்த்திடுவாள் ஓ..ம் சக்தி
உலகெல்லாம் ஓங்கி நிற்கும் ஓ…ம் சக்தி

உலகாளும் சக்தியே
உருளுகின்ற சக்தியே
உயர்ந்து நிற்கும் சக்தியே
உயிரணுவின் சக்தியே

உலகாளும் ஈசனின் சக்தியாய்
பூ மழையாய்ப் பொழிந்திடுவாய் சக்தியே
நீ பொழிந்த பூவையே பூஜை செய்வேன்
பூவில் பூஜை செய்வேன்.. சக்தி பூஜை செய்வேன்

பூர்ண சந்திரனின் வடிவினிலே
பூர்ண கும்பமாக என் மனதில்
பூவின் மனத்தையெலாம் தந்திடுவாய் சக்தியே

பரிபூரணமாய் என் மனதில் கலந்திடுவாய் சக்தியே
மனமெல்லாம் மணக்கச் செய்வாய் சக்தியே
ஓங்கார இசையினிலே ஓங்கி நிற்பாள் ஓ…ம் சக்தி…! ஓ..ம் சக்தி…!

தியான நிலையில் நினைவெல்லாம் இன்னும் பரிபக்குவ நிலை வரவேண்டுமப்பா…! சுவாச நிலையில் வாழ்க்கை முறையிலேயே கலந்து வர வேண்டும்.
1.அந்தத் தியான நிலை… அந்நிலையில்தான்…
2.நீ அமரும் தியான நிலை… இது இரண்டும் கலந்தால் தான் தியான நிலை கைகூடும்.

சுவாச நிலையின் எண்ணம் தான் முதல் படியாக “ஓங்கார ஒலியைக் கேட்பது…!” அந்நிலையில் நீ விடும் சுவாச நிலையே மறந்து விடும். ஓங்கார ஒலி தான் உன் செவிக்குள்ளே ஒலித்து வரும்.

இந்த உலகத் தன்மையே இந்த ஒலியினால் தான் இயங்குகிறது. இந்த ஒலி தான் உலகத்துக்கு ஆணிவேர். அந்த ஒலியின் மேல் அவ் ஒளி பட்டவுடன் தான் ஜீவராசிகளின் ஜீவன் எல்லாம் தோன்றுகிறது.

இந்த ஒலியிலிருந்து நல் மனத்தைப் பெற்றிடுங்கள். நல் மூச்சையே விட்டிடுங்கள் என்பதெல்லாம் எந்த நிலையில்…?

நல் நிலையில் மூச்சை விட்டிடுங்கள் என்னும் பொழுது அந்நிலையில் புஷ்பங்களையும் நறுமணம் கொண்ட பொருள்களையும் தேடுகின்றாய். அந்த நிலையில் வருவதல்ல நல் மூச்சு…!

நல் மூச்சு என்பதன் பொருள்
1.உன் சொல்லிலும் செயலிலும் எண்ணத்திலும் இருந்து வருவது தான்…!
2.உன் மன நிலையில் மகிழ்ச்சியாக உள்ள நாளில் அந்த இடத்தில் உள்ள அசுத்தக் காற்றுகளும் உன்னை வந்து அடையாது.
3.அந்த நிலையில் உன் சுவாச நிலையும் அந்தத் தீய மணத்தை ஏற்றுக் கொள்ளாது.

ஆனால் உன் மனமும் சுவாச நிலையும் உன் மன நிலையில் சோர்வு நிலை வந்துவிட்டால் உன் சுவாச நிலைக்கு எந்த நறுமணங்களும் வந்து அடையாது. அத்தகைய சோர்வை நாம் அண்டவிடக் கூடாது…!

Leave a Reply