துருவ தியானத்தின்… துருவ நட்சத்திர தியானத்தின் முக்கியத்துவம்

LTM - Polaris

துருவ தியானத்தின்… துருவ நட்சத்திர தியானத்தின் முக்கியத்துவம்

நம் குருநாதர் ஈஸ்வரபட்டர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் அனைவரும் பெறக்கூடிய சக்திக்குத்தான் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்குகின்றேன். பதிவாக்கினாலும் அதை மீண்டும் பெறுவதற்கு நினைவுபடுத்துகிறேன், ஏனென்றால் பல நிலைகள் உங்களை மூடி மறைக்கின்றது.

இப்பொழுது இந்த உபதேசத்தின் உணர்வுகளைப் படிக்கும் பொழுது உடனே அது வீரியம் பெறும். இங்கே நல்லதைச் சொல்லிக் கொண்டிருந்தாலும் அடுத்தாற்போல் ஒரு இரண்டு பேர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் என்ன சொல்வீர்கள்…!

1.பார்…! சாமி (ஞானகுரு) என்ன சொல்கிறார்…?
2.இங்கே இப்படிச் சண்டை போடுகிறார்கள்..! என்று நான் சொல்வதை உடனே விட்டுவிடுவீர்கள்…!
3.சண்டையிடுபவர்களின் உணர்வுகளை எடுத்துக் கொள்வீர்கள்.
4.அப்பொழுது அந்தத் தீய அணுக்களுக்குச் சாப்பாடு நிறையக் கொடுக்கின்றோம்.

ஏனென்றால் அதற்கு ஏற்கனவே வீரியம் அதிகம். ஆகவே அந்த அணுக்கள் நமக்குள் அதிகமாக இருக்கும் பொழுது அதை மாற்றும் சக்தியை எடுத்து… அதை வலுவாக எண்ணி… சண்டையிடுபவர்களின் உணர்வுகளை அடக்கச் செய்ய வேண்டும்.

அப்படி என்றால் அந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும்…?

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அவசியம் வளர்த்துக் கொள்ள வேண்டும் (துருவ தியானம்). அதை வைத்துத் தான் தீமைகளை அடக்க வேண்டும்.

சண்டை செய்கிறார்கள் என்றால் நாம் கண்ணில் பார்க்கின்றோம். அந்த மனிதர்களைப் பதிவாக்கிவிடுகின்றோம். தவ்று செய்கிறார்கள் என்று பார்க்கிறோம்… அந்த உணர்வை நுகர்கின்றோம்… அதே அணுவாக நம் உடலில் மாற்றிவிடுகின்றது.

இங்கே உபதேசத்தைக் கேட்கின்றீர்கள்.
1.ஆனால் நான் ஒருவன் தானே இங்கே சொல்கிறேன்.
2.அந்தப் பக்கம் நீங்கள் பார்த்தால் ஆயிரம் பேர் ஆயிரம் விதமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றார்கள் அல்லவா..!
3.அதைப் பார்த்ததும் அது தான் உங்களுகுள் பெருகுகின்றது. (நான் சொல்வது சிறுத்துவிடுகின்றது.

கோவிலுக்குப் போய்ச் சாமி கும்பிடுகின்றோம். அங்கே மற்றொருவரும் வந்து கும்பிடுகின்றார்.

நாம் கும்பிடும் பொழுது அவரைப் பார்த்தவுடன் அவர் பல தவறுகள் செய்பவர் என்று தெரிகிறது. அர்ச்சனை செய்து… அந்தப் பரிவட்டம் கட்டி… அபிஷேகம்… ஆராதனை…! என்று பல நிலைகள் அவருக்கு நடக்கின்றது.

1.எத்தனையோ கொலை செய்கின்றான்
2.அவனுக்குச் சாமி எல்லாம் கொடுக்கின்றது… உதவி செய்கின்றது பார்..!
3.கோவிலையே அந்த நேரத்தில் வெறுக்கின்றீர்கள்… இல்லையா…?

ஆக கோவிலுக்குப் போன இடத்தில் ஒரு தவறு செய்பவன் அபிஷேக ஆராதனை செய்து அவனுக்கு இவ்வளவு மரியாதை கிடைத்தவுடன் உங்களுடைய எண்ணம் எப்படி வருகிறது…?

மற்றவர்கள் செய்யும் தவறைப் பார்த்தவுடன் “என்றைக்குத் தான் இது நல்லதாகப் போகிறதோ…? தெரியவில்லையே…! என்று எண்ணுகின்றீர்கள். அப்பொழுது அந்த எண்ணத்திற்குத்தான் சக்தி கொடுக்கின்றீர்கள்.

அந்த நேரத்தில் நான் சொன்னதை நினைவுக்குக் கொண்டு வந்து அதை மாற்ற முடிகின்றதா…? என்றால் இல்லை..! அந்த உணர்வுகளே வருவதில்லை.

அதை எல்லாம் மாற்றுவதற்காக வேண்டித்தான் இந்தக் காலைத் துருவ தியானத்தை முக்கியமாக உங்களைச் செய்யச் சொல்கிறோம்.

1.ஈஸ்வரா…! புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும்…
3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்…! என்று எண்ணி
4.சந்தர்ப்பத்தால் நுகர்ந்த கோபம் வெறுப்பு வேதனை போன்றவைகளை உடனே துடைத்துப் பழக வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி இந்த ஆலயம் முழுவதும் படர வேண்டும், இங்கே வருவோர் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும். அந்த மெய்ப் பொருள் காணும் சக்தி இந்த ஆலயம் முழுவதும் படர வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணினால் நமக்குள் அந்தச் சோர்வு வராது. மன பலம் கிடைக்கும். தீமைகளிலிருந்து விலகிச் செல்லும் ஆற்றலும் கிடைக்கும்.

Leave a Reply