உடலுக்குள் புகுந்த கடுமையான ஆவி ஒடுங்கிய விதம்

Spiritual circle

உடலுக்குள் புகுந்த கடுமையான ஆவி ஒடுங்கிய விதம்

 

ஒரு சமயம் நான் (ஞானகுரு) மங்களுரில் இருக்கும் போது ஒரு நண்பர் வீட்டுக்குப் போனேன்.
1.அவருடைய சம்சாரம் எப்பொழுது பாத்தாலும் அவரைப் பறண்டிக் கொண்டே இருக்கும்.
2.அது எதற்கெடுத்தாலும் சும்மா நய்…நய்… என்று அழுது கொண்டே இருக்கும்.

அவர்கள் எங்கே போனாலும் ஒன்றும் செயல்படுத்த முடியாது. அவர்கள் வீட்டில் எந்தத் தொழில் செய்தாலும் நஷ்டமாகிக் கொண்டே இருக்கும்.

எனக்குத் தோசை வாங்கிட்டு வாடா.. அது வாங்கிக் கொண்டு வாடா.. இதை வாங்கிக் கொண்டு வாடா..! என்று சொல்கிறது. எத்தனை மணியாக இருந்தாலும் வாங்கிக் கொண்டு வர வேண்டும்.

அது வரை இங்கே உட்கார விடுவதில்லை…! உன்னை நான் கெடுத்தே போடுவேன். நீ எந்தத் தொழில் செய்தாலும் உன்னால் முடியாதுடா…! என்று சொல்லிக் கொண்டே இருக்கும்.

இப்படி இருக்கும் போது இந்தப் பேயை ஒட்ட வேண்டும் என்று பல முயற்சி எடுத்தார்கள். முனியப்பன் கோவில் அந்தக் கோவில் இந்தக் கோவில் என்று பல கோவில்களுக்குச் சென்று பல ஆடுகளை எல்லாம் பலி கொடுத்தால் இதை நிறுத்தி விடலாம் என்று பார்த்தார்கள். ஆனால் முடியவில்லை.

கடைசியில் என்ன ஆனது..? ஒரு மந்திரவாதியிடம் போன உடனே அவர் நான்கு கோழியை வாங்கிக் கொண்டு வரச் சொன்னார். அதில் மூன்று கோழியை அடுப்பாக வைத்தார்.

ஒரு கோழியை அறுத்து அதன் மீது வைத்துச் சமைத்தார்கள். நெருப்பை வைத்து எரிக்கிறார்கள். மேலே வைத்தது வேகுகிறது. வெந்த பின்பு அதை எடுத்து அப்படியே வீசினால் அந்த பேய் எல்லாவற்றையும் இழுத்துக் கொண்டு அப்படியே போய்விடுமாம்…!

நிலைமை என்ன ஆனது…? பத்து ஆயிரம் செலவழித்தது தான் மிச்சம். இது போக இராஐஸ்தானுக்குப் போய் அங்கேயும் என்னென்னமோ செய்து பார்த்திருக்கின்றார்கள். ஆனால் ஒன்றும் ஆகவில்லை.

கடைசியில் நான் (ஞானகுரு) சித்தாகி அங்கே போயிருக்கும் போது அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு வந்தது.

இந்த எட்டிச் செடி அது இது எல்லாம் போட்டால் சரியாப் போகும் என்று “மந்திரவாதிகள் சொல்கிறார்கள்…!” என்றார்கள். அது எல்லாம் முடியாது…! என்று சொன்னேன்.

காய்ந்த மிளகாயைப் பொடி செய்து எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று சொன்னேன். நெருப்பைக் கொண்டு வாருங்கள் என்று சொன்னேன். அந்த நெருப்பிலே இந்த மிளகாயைப் போட்டு அந்த நெடிக்கு நேராக அந்த அம்மாவின் முகத்தை வைக்கச் சொன்னேன்.

மிளகாய்க்கு மேலே நேராக முகத்தை வையம்மா…! என்று சொன்னேன்.

எனக்கு எல்லாம் தெரியும்… நீ வை பார்க்கலாம்…! என்று என்னிடம் சொல்கிறது.

இந்த மிளகாயைப் பொடி செய்து போட்டோம் அல்லவா..! அந்த நெடி தாங்காமல் எங்கே இருந்த எல்லோரும் ஓடுகிறார்கள். பக்கத்தில் இருந்தவர்களும் விலகி ஓடுகிறார்கள். என்ன இந்த மாதிரி போடுகிறீர்கள்…? என்று சண்டைக்கு வந்துவிட்டார்கள்.

ஆனால் அந்த அம்மா அதற்கே நேரே முகத்தைக் காட்டிக் கொண்டு “இன்னும் போடு…! எல்லாம் ஓடட்டும்..!” என்று சொல்கிறது.

அப்புறம் அவர்களுக்கு விளக்கத்தைச் சொன்னேன். ஒரு ஆவியின் உணர்வு உடலுக்குள் சென்று விட்டால் அதை உங்களால் அப்புறப்படுத்த முடியாது என்றேன்.

உன் மனைவி உடலில் இருப்பது “உன் அண்ணனின் ஆன்மா தான்…!” என்று சொன்னேன். உன் அண்ணனை நீ எந்தந்த அளவுக்கு இம்சித்தாயோ பழி தீர்க்கும் உணர்வோடு உன் சம்சாரத்துக்குள் இருக்கிறது என்று விபரத்தைச் சொன்னேன்.

1.இந்த உடலை விட்டுச் சென்ற பிற்பாடு (அண்ணனின் உயிரான்மா) அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து
2.உடல் பெறும் உணர்வுகள் கரைந்து ஒளி பெறும் சரீரமாகப் பெற வேண்டும்.
3.இந்த உடலிலேயே நீ உயர்ந்த சக்தி பெற வேண்டும். அந்த உயர்ந்த சக்தியைப் பெற வேண்டும் என்று
4.இந்த பெண்ணை நீ இந்த உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று தியானியுங்கள்..! என்று சொல்லி இந்த உணர்வைப் பதிவு செய்தேன்.

நான் பதிவு செய்தபடி அவர் அதைச் செய்த பின் அந்த அம்மாவிற்கு எல்லாம் நல்லதாக ஆனது. நிறைய உதவிகள் வந்தது. அந்த ஆளுக்கு ஜே..ஜே..! என்று எல்லாம் வந்தது.

அந்த வளர்ச்சிகள் வளரப்படும் போது அந்த ஆளுக்குப் புத்தி என்ன ஆனது…! பணம் வர ஆரம்பித்ததும் தவறுகள் நிறையச் செய்ய ஆரம்பித்தார். “நானே தான் ராஜா…!” என்று சொல்ல ஆரம்பித்தார்,

அண்ணணாவது… கத்திரிக்காயாவது..! அவன் தான் என்னைக்கோ இறந்து போய்விட்டானே… நீ என்ன பெரிய இது…? என்றார். அவ்வளவு தான் மறுபடியும் வந்துவிட்டது.

1.உடலுக்குள் ஆன்மா இருந்தால் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைச் செருகேற்றி அதை வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.
2.அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலம் அடைய வேண்டும் என்ற உணர்வைச் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

ஆனால் அதைச் செய்யாதபடி அதனின் உணர்வுக்குக் கொஞ்சம் இடம் கொடுத்தவுடன் என்ன ஆனது. மறுபடியும் அது பிடித்துக் கொண்டது.

எது எது எல்லாம் நல்ல வழியில் வளர்ச்சிக்கு வந்ததோ மறுபடியும் அதை எல்லாம் வடிகட்ட ஆரம்பித்து விட்டது. எல்லாச் செல்வங்களும் கரைய ஆரம்பித்தது.

ஆக ஒரு ஆவி உடலுக்குள் வந்தால் அதனின் இயக்கங்கள் இப்படித்தான் இருக்கும்…! என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Leave a Reply