ஞானிகள் சொல்லும் “பிச்சாந்தேஹி…”

pitchai

ஞானிகள் சொல்லும் “பிச்சாந்தேஹி…” 

1.நோயாளிக்கு மூன்று வேளை உணவு
2.சம்சாரிக்கு இரண்டு வேளை உணவு
3.ஞானிக்கு ஒரு வேளை உணவு என்ற உணவின் நியமனக் கட்டுப்பாடு
4.உலகோதய வாழ்க்கையில் எல்லோரும் உடல் நலத்துடன் வாழ்வதற்காக அன்றைய சித்தர்கள் வகுத்த வழி…!

குருவிடம் சிஷ்யன் முதலில் கற்றுக் கொள்ள வேண்டியது “குருகுல வாசத்தில் நாவின் சுவையை அடக்கி…!” ஆகாரக் கட்டுப்பாட்டின் வழியில் புலனடக்கம் பெற்று…
1.தனக்குள் இயக்கும் எல்லா உணர்வுகளையும்
2.தன் மனக்கட்டுப்பாட்டில் அடங்கச் செய்வதாகும்.

ஞானிக்கு ஓர் வேளை தான் உணவு என்றால் அதையும் அவன் எப்படி ஏற்கின்றான்…?

ஓர் நாளைக்கு ஓர் முறை தான் என்ற நிலையில் தான் தேர்வு செய்த ஓர் வீட்டிற்குச் சென்று “பிச்சாந்தேஹி…!” என்று கேட்பான். ஆனால் அந்தச் சொல் வழக்கில் இருந்து விடுபட்டு இன்று அதனுடைய புனிதத் தன்மையே திரிந்து போய்விட்டது.

ஞானிகள் வீடு வீடாகச் சென்று பிட்சை கேட்பதில்லை.

இன்று ஓர் ஞானியோ… முனிவனோ…
1.தனது வீட்டிற்குப் போஜனத்திற்காக வரமாட்டாரா…?
2.அவருடைய ஆசியைப் பெற மாட்டோமா…? என்று
3.வாசலில் காத்திருக்கும் இல்லறத்தோர் ஏங்கியது அந்தக் காலம்.
(அக்கால வழக்கம் எல்லாம் இன்று கேடுற்று விட்டது)

ஏதாவது ஓர் வீட்டைத் தேர்ந்தெடுத்து ஓர் வேளை பகல் பொழுதோ அல்லது அந்திமப் பொழுதோ சென்று சிறிது நேரம் நின்று பிட்சை என்ற ஒரு சொல் கேட்டு அன்புடன் வந்து அளித்திட்ட அமுதை அமுதமாக எண்ணி உண்பார்கள்.

ஒரு வேளைப் பொழுதுதான் உண்ணும் வழக்கமாக இருந்தாலும் “பிச்சாந்தேஹி…!” என்று கேட்டுக் குறித்த அவகாச காலத்தில் உணவு வராவிட்டால் என்ன செய்வார்கள்…?

அங்கு நிற்காமல் திரும்பி வந்து வெறும் நீரைக் குடித்து விட்டு மகிழ்ச்சியுடன் அமைதியாக அமர்ந்து “ஈஸ்வர தியானத்தில்” ஈடுபடுவார்கள். அக்காலத்தில் மூலிகை ஔஷதங்களைத் குருவின் மூலம் அறிந்து பெற்று அதை உண்டு வந்த அந்த வழக்கம் இன்று நடைமுறையில் சாத்தியப்படவில்லை.

இன்று உண்ணும் உணவிலும் ஊட்டச் சத்துக்கள் குறைவு. அது போக உடல் சோர்வும் மன நலிவும் உற்றுப் பிணிகளுக்கு ஆளாகுவது தான் இன்றைய நிலை.
1.அக்கால ஞானிகள் பெற்ற ஞானம் என்பது மிகவும் எளிதல்ல…!
2.கடுமையின் கடுமையை எதிர் நோக்கி வென்று வந்தார்கள் அவர்கள்.

அன்று மக்கள் தொகை பெருக்கம் இல்லாததால் குறைந்த கால அளவில் தான் பெறவேண்டிய நற்சக்தியை வளர்ச்சிப்படுத்தும் செயல் முறைக்குத் “தியானம் என்பதே… மிகக் கடுமையான பரிசோதனை முறைகளாக இருந்தது…!”

தான் பெற்ற சக்தியையே அது எந்த வழித் தொடர் என்பதை அறிந்து அதைப் பெற்று தனது நிலையை மென்மேலும் உயர்த்திடவே அனுபவப் பாட நிலைகள் கொண்டு வளர்ந்தவர்கள் தான் “அக்கால ஞானிகள்…!”

ஒரு வேளை உணவும் கிடைத்திடா விட்டாலும் வெறும் நீரை அருந்தி சந்தோஷமாகத் துயில் கொள்ளும்
1.தியானத் துயிலில் மனப் பக்குவ நிலை பெறும் சத்திய சோதனையையே
2. சத்திய நிலை நிலைக்கப் பெறும் தொடரில் வென்று
3.தனது நிலையை அன்று வளர்த்துக் கொண்டார்கள்.

அதே போல இந்த உலகில் வாழையடி வாழை என வாழ்ந்து கொண்டிருக்கும் ஞான சக்திச் செல்வங்களும் (மக்கள்) பெறவேண்டும் என்ற ஆசையின் நிலையில் தான்
1.இன்று கடுமையை விடுத்து
2.எளிய முறையாகத் தியானத்தின் மூலம் நற்சக்தி பெறுதல் என்று உணர்த்தி வருகின்றேன் (ஈஸ்வரபட்டர்).

மிகச் சுலபமான நிலைகளில் எண்ணத்தால் எண்ணி ஏங்கினாலே கிடைக்கும் வழிக்கு இந்தத் தியான முறையை உணர்த்துவது என்பதே வளர்ச்சியின் வளர்ப்பாக்கி “ஆதி சக்தியின் மூலத்தில் எல்லோரையும் கலக்கச் செய்வதற்குத்தான்..!”

 

Leave a Reply