நான் நானா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Myself

நான் நானா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நான் என்பது யார்…? உயிரா.. ஆத்மாவா… இந்த உடலா..?

சரீரம் என்பது அழிககூடியது தான். ஆனால் இந்தச் சரீரத்தின் உண்மையின் இயக்கத்தில் உண்மையில் எண்ணம் என்பது எது…?

1.ஒரு பம்பரம் சுழல்கிறது என்றால் எந்த வேகத்தை அதற்குத் தருகின்றோமோ அது வரைக்கும் தான் அதனுடைய சுழற்சி இருக்கும். பின் நின்றுவிடும்
2.குழந்தையை ஆட்டுவிக்கும் ஒரு தூளியும் நாம் ஆட்டுவிக்கும் வேகத்திற்கொப்பத்தான் ஆடுகின்றது. பின் ஆட்டம் நின்றுவிடும்.

செயற்கையில் சுழலும் பொருள்கள் (ஜீவன் இல்லாத) அனைத்துமே நாம் செய்விக்கும் திறனைப் பொருத்து அதன் ஓட்டத்தின் கதியை அடைகின்றது. இயந்திரங்களும் அதனுடைய செயல்பாட்டின் நிலைக்கொப்ப ஓடுகின்றது.

ஆனால் கோள்களின் ஓட்டம் இயற்கையின் கதி விகிதத்தைக் கொண்டு ஜீவனுடன் ஓடிக் கொண்டே உள்ளது. இருந்தாலும்
1.மனிதனின் செயல் நிலையில் உண்மையின் தத்துவ உட்பொருளான
2.”நானின்…” இயக்கத்தை நாம் அறிதல் வேண்டும்.

சுவாசம் எடுத்துவிடுவதும்… கண் இமை மூடித் திறப்பதும்… செவி ஒலி கேட்பதும்… சுவை உமிழ் நீர் ஊருவதும்… இவை எல்லாமே நம் எண்ணத்தைச் செலுத்தாமலே தானே நடக்கின்றது.

கோள்கள் இயற்கையின் கதியில் எப்படி அது இயற்கையின் மாற்றத்திற்கொப்ப எல்லாம் செயல்பட்டு வளர்ந்தே ஜீவனுடன் எண்ணம் இல்லாமல் ஓடிக் கொண்டுள்ளதோ அதைப் போன்று தான்
1.நம் சரீரத்தின் இயக்கத்தின் கதியும் எண்ணத்தைச் செலுத்தாமலேயே
2.பசி… தூக்கம்… மற்றும் உடல் உபாதைகளில் ஏற்படும் வேதனைகளும்… தன் தன் கதியில்
3.நாம் எண்ணத்தைச் செலுத்தாமலே ஓடிக் கொண்டுள்ளது. (பசியோ தூக்கமோ உடல் வலியோ நாம் எண்ணி வருவதில்லை)

செயல்படும் நிலையில் ஏற்படும் மாற்றத்தால் அந்த உந்துதல் ஏற்படக் கூடிய தருணத்தில்தான்
1.எண்ணத்தில் அதை அறிந்து
2.சாப்பிடவோ தூங்கவோ வலியை நீக்கவேண்டும் என்றோ
3.எண்ணத்தை அதற்காகச் செயல்படுத்துகின்றது உடல்.

கோள்களுக்கு எண்ணம் இல்லாததினால் அது சந்திக்கும் மற்ற கோள்களின் அமிலத் தொடர்பைக் கொண்டு அதன் ஜீவ ஓட்டம் தன் இச்சையில் ஓடிக் கொண்டுள்ளது.

மனித உடலின் இயற்கையின் செயல்படும் கதியில் ஏற்படக்கூடிய மாற்றத்திற்கு எண்ணத்தைக் கொண்டு பசிக்கு உணவையும்… சோர்வுக்கு உறக்கத்தையும்… செலுத்தக் கூடிய எல்லாவற்றிற்கும் எண்ணத்தைச் செலுத்துகின்றோம்.

அப்பொழுது… இந்த “எண்ணம் தான்…” நானா…?

விதை முளைத்து மரமாகி பலன் தந்து பல நாள் வாழும் மரத்திற்கு எண்ணம் இல்லாவிட்டாலும் உணர்வின் செயல் தன்மை உள்ள மரத்தின் உயிர் தன்மை வலுவாகி வளர்த்துக் கொள்கிறது.

தாவரங்கள் எண்ணமில்லாத இயற்கையின் வலுவானாலும் அதற்கு அடுத்த நிலை என்ற உயர் நிலைக்கு உயிர்ப்பிக்கும் அந்தத் தாவரங்களும் செல்வதில்லை.

ஆனால் மனிதச் செயலுக்கோ தன் எண்ணத்தைக் கொண்டு தெய்வ குணங்களான உயர் தன்மைகளை வளர்த்திட அறு குணங்களை உணரக்கூடிய எண்ணத்தின் பால் வரையறுக்கப்பட்ட குணச் சிறப்பின் விதிக்கொப்ப
1.மனிதனிடம் செயலாகும் எண்ணத்தின் கதி கொண்டே
2.நான் என்பது யார்..? என்ற எண்ணத்தை ஊன்றிப் பார்த்தோமானால்
3.மனித எண்ணத்தில் ஓடக்கூடிய பல குணங்களில் பொறுக்கி எடுத்த
4.நற்குணம் ஆறு எதிர் நிலையான தீய குணங்கள் ஆறு என்ற அடிப்படையில்
5.மனிதனுக்குள் ஓடக்கூடிய பல ஆயிரக்கணக்கான எண்ண குண நலன்கள்
6.பல விந்தையின் விபரீத நிலையிலும் செயல் கொள்கின்றதப்பா…!

அவனவன் எடுத்துக் கொண்ட எண்ணத்தின் தன்மைக்கொப்ப மெய் ஞானியாகவும் ஆகின்றான் விஞ்ஞானியாகவும் ஆகின்றான் அல்லது அஞ்ஞானியாகவும் ஆகின்றான்.

மற்ற எந்த உயிரினங்களுக்கும் இல்லாத சிறப்பாகத் தன் எண்ணத்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் எடுத்துக் கொண்ட நிலைக்கொப்ப மருத்துவம் பொறியியல் தத்துவம் கலைகள் இசை விவசாயம் என்று செயல்படுத்துகிறார்கள் அல்லவா…!

ஆகவே எண்ணத்தின் மூலமே உயிரின் பரிமாணத்தின் பலனாக மனித ஆத்மாவின் வலுவிற்கு வழி தேடும்
1.“நான்…!” என்னும் பலனை
2.நாம் அறிதல் வேண்டும்.

Leave a Reply