ஜாதகத்தில் உள்ள உண்மையின் நிலைகள்

Tru astrology

ஜாதகத்தில் உள்ள உண்மையின் நிலைகள்

 

ஒரு குழந்தை பிறந்து விட்டது என்ற உடனேயே நாம் ஜாதகக்காரனிடம் ஓடுகின்றோம்.

அவன் பார்த்து விட்டு குழந்தை பிறந்த நேரம் சரியாக இல்லை. இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் மிருக குணம் அதிகமாக இருக்கும். அவன் அசுர செயல்கள் கொண்டு செயல்படுவான் என்று அந்த ஜாதகம் பார்ப்பவன் கணக்குப் போட்டுச் சொல்கிறான்.
1.இந்தக் குழந்தை ஏழரை நாட்டுச் சனி பிடித்தவன்.
2.உங்கள் குடும்பத்திற்கே ஆகாது என்று சொல்கிறான்.

மிருகங்கள் எப்படி தன்னைக் கட்டுபடுத்தாத நிலைகள் கொண்டு செயல்படுமோ அதே உணர்ச்சிப்படியே இவன் போவான். “அவனால் உங்கள் குடும்பத்திற்கே சனியன் பிடிக்கும்…!” என்று விளக்குகிறான் ஜாதகக்காரன்.

ஆனால் அந்தக் குழந்தை ஒன்றும் தவறு செய்யவில்லை.

குழந்தை பிறந்த ஜாதகத்தை அவன் கட்டத்தைப் போட்டு எழுதுகிறான். நாம் நம்பிக்கையுடன் போனவுடனே இதை எடுத்து நமக்குள் உருவாக்கி வைத்துக் கொள்கிறோம்.

அடுத்தாற்போல என்ன செய்கிறோம்…?

“குடும்பத்திற்குச் சனியன் பிடித்துவிட்டதே…!” என்ற இதே உணர்வை எடுத்துக் கொண்டவுடன் தொழில் ரீதியாக ஒருவரிடம் வியாபாரம் செய்தாலும் நம் பணத்தை இவன் கொடுப்பானா.. கொடுக்க மாட்டானா…! என்று நினைத்துக் கொண்டே பொருளைக் கொடுக்கிறோம்.

நம்முடைய இந்தச் சோக உணர்வு அவனுக்குள் போன பின் அவன் நம் பணத்தைக் கொடுக்கவே மாட்டான். நம் எண்ணமே அதை மாற்றி விடுகிறது.

ஏனென்றால் ஜாதகக்காரன் சொன்ன அந்த உணர்வைப் பதிவு செய்யும் போது அது நமக்குள் கடவுளாக மாறுகிறது. “அவன் தான் நம்முள் சிருஷ்டிக்கிறான்…!” என்ற நிலைகள் கொண்டு எண்ணத்தால் எடுத்து நமக்குள் இப்படி அறியாத நிலைகள் கொண்டு உருவாக்கி விடுகிறோம்.

அதே சமயத்தில்
1.ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை வேண்டி
2.அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்றும்
3.அந்தக் குழந்தை இப்படித் தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் கருவிலிருந்து வளர்த்துப் பாருங்கள்.
4.குடும்பத்தில் தரித்திரம் இருந்தாலும் அதை எல்லாம் நீக்கிடும் வல்லமை பெற்றவனாக அந்தக் குழந்தை பிறந்து வருவான்.

சில வீட்டில் கர்ப்பமாக இருக்கும் போது பாருங்கள். ஆயிரம் சண்டை போடுவார்கள். பிறந்த பிற்பாடு அந்தக் குழந்தை என்ன செய்வான்…?
1.அந்தச் சண்டை போடும் வழக்கத்திற்கே போவான்.
2.ஊரில் இல்லாத வம்பை எல்லாம் வீட்டிற்குள் இழுத்துக் கொண்டு வருவான்.

ஏனென்றால் சண்டையை உற்றுப் பார்த்த உணர்வுகள் தாய் உடலில் ஊழ்வினையாகின்றது. கருவில் வளரும் குழந்தைக்கோ அது பூர்வ புண்ணியமாகின்றது.

ஆகவே இதை எல்லாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

அன்றைய அரசன் தன்னுடைய குழந்தை மிகவும் வலிமையாக இருப்பதற்காக என்ன செய்தான்…? அரசனின் மனைவி கர்ப்பம் ஆகி விட்டது என்றாலே ஒரு முடியில் விஷத்தைத் தொட்டு அதை உணவுடன் கலந்து அந்தத் தாய்க்குக் கொடுப்பார்கள்.

இப்படிப் பிறக்கும் குழந்தை வீரியமான வலு கொண்டதாகவும் மற்றவர்கள் விஷத்தைக் கொடுத்தாலும் கொன்று விடமுடியாத அளவிற்கு இதைச் செய்தார்கள். மக்கள் யாரும் அதைச் செய்யவில்லை.

ஆனால் அதே சமயத்தில் குடும்பத்தில் கர்ப்பம் என்று தெரிந்தாலே ஒவ்வொரு நிமிடத்திலேயும் கருவில் இருக்கும் குழந்தை மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் உலக ஞானம் பெற வேண்டும். உலகில் வரும் தீமைகளை எல்லாம் அகற்றக்கூடிய அந்த அருள் சக்தி பெற வேண்டும். நஞ்சை வென்றிடும் உணர்வு பெற வேண்டும் என்று குடும்பத்தில் இருக்கிறவர்களெல்லாம் சொல்லுங்கள்.

கர்ப்பமான தாயும் இந்த முறைப்படி எண்ணி அந்த மெய் ஞானிகளுடைய உணர்வை எடுத்துப் பாருங்கள். உங்கள் குழந்தை அபூர்வ சக்தியாக ஞானக் குழந்தையாக வளர்வான்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம். நீங்கள் ஜாதகக்காரனைத் தேட வேண்டியதில்லை…!

Leave a Reply