தீட்டு என்று சொல்கிறார்கள்…! எது தீட்டு…?

lord eswara shiva

தீட்டு என்று சொல்கிறார்கள்…! எது தீட்டு…?

 

இறந்த வீட்டுக்குள் போனால் தீட்டு…! ஒருவர் தொட்டால் தீட்டு…! குளிக்காமல் இருந்தால் தீட்டு…! இப்படி
1.தீட்டு… தீட்டு… தீட்டு…! என்று சொல்லி
2.நம் எண்ணத்தில் அதை அழுத்தமாக எடுத்துக் கொண்டால்
3.அது தான் (அந்த எண்ணம்) நமக்குள் தீட்டாக வருகின்றது.
4.ஆனால் அதை அகற்ற வேண்டும் என்று எண்ணினால் நமக்குள் அந்தத் தீட்டு வரவே வராது.

எப்படி…?

நீங்கள் வேண்டும் என்றால் சந்தேகம் இருந்தால் பாருங்கள்.

ரோட்டில் நடந்து செல்லப்படும் பொழுது உங்கள் நெடுநாளைய நண்பரைத் திடீரென்ற் சந்திக்கின்றீர்கள். நண்பரைச் சந்தித்த மகிழ்ச்சியில் ரொம்ப நேரம் அங்கேயே பேசிக் கொண்டிருக்கின்றீர்கள்.

எல்லாம் பேசி முடித்த பின்பு பார்த்தால் நீங்கள் நின்று பேசிக் கொண்டிருந்த இடத்தில் நாற்றமான பொருள் இருக்கிறது. அதைப் பார்க்கின்றீர்கள்.

அதைப் பார்த்தவுடனே அந்த நாற்றம் உங்களுக்குத் தெரிய வரும்…! “ஐய்யய்யோ… இவ்வளவு நேரம் இங்கே தான் நின்று பேசி இருக்கிறோம்…!” என்று அதற்கப்புறம் தான் ஞாபகம் வரும்.

1.கண்களால் பார்த்து அந்த உணர்வு வந்ததற்கு அப்புறம் தான் நாற்றம் என்று தெரிகிறது.
2.அது வரையிலும் நாற்றம் தெரியவில்லை.

ஆகையினால் இதையெல்லாம் நாம் வாழ்க்கையில் எப்படி எடுக்க வேண்டும் என்று தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நொடியும் நாம் பார்த்து கேட்டு நுகர்ந்தறியும் உணர்வுகள் நமக்குள் எப்படிப் பதிவாகின்றதோ அதற்குத்தக்க தான் நம்முடைய எண்ணம் சொல் செயல் அனைத்தும் அமையும்.

இருந்தாலும் நாம் சுவாசிக்கும் உணர்வுக்குள் வரும் தீமைகளை அகற்றி நல்லதாக ஆக்க வேண்டும் என்றால் மகரிஷிகளின் பால் கண்ணின் நினைவைச் செலுத்தி அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று அதை வலுவாக்கிக் கொண்டால் நம் ஆன்மாவில் அது வலுவாகிவிடும்.

மற்ற உணர்வுகளை விலக்கித் தள்ளிவிடும். இதையும் நீங்கள் செய்து உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

Leave a Reply