வித்தைகளைக் கற்றுக் கொள்… அநுபூதியைப் பெற்றுக் கொள்…! மாமகரிஷி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

siddhis of rishis

வித்தைகளைக் கற்றுக் கொள்… அநுபூதியைப் பெற்றுக் கொள்…! மாமகரிஷி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

 

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் (ஒரு) குடும்பத்தில் வரக்கூடிய ஒன்றிரண்டு பிரச்சினைகளையும் சிக்கல்களையும் சரியான முறையில் சமாளிப்பதற்குள்ளேயே போதும்… போதும்…! என்று சொல்லி விடுகிறோம்.

அடுத்தடுத்து தொடர்ந்து அதே மாதிரி வந்தால் சோர்வடைந்து விடுகின்றோம்… என்ன வாழ்க்கை இது…? என்று வேதனையும் படுகின்றோம்…!

ஆனால் ஞானகுரு அவர்கள் (சாமிகள்) சுமார் 12 வருட காலம் மூன்று இலட்சம் பேரின் வாழ்க்கையின் நிலைகளை நேரடி அனுபவமாகப் பார்த்தவர்.
1.அவர்களின் கஷ்ட நஷ்டங்களை அப்படியே பார்த்து
2.அவர்களுடைய சிரமங்கள் தன்னை இயக்காதபடி தடுத்து
3.அதில் மெய்ப் பொருளைக் கண்டு அந்த மெய்யை வளர்க்கும் ஆற்றலை வளர்த்தவர்.
4.அது அனத்துமே வித்தைகள்.

மூன்று இலட்சம் பேரையும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தான் அவரைச் சந்திக்கச் சொல்கிறார். அவர் காட்டிய அருள் வழியைக் கடைப்பிடித்து அனுபவபூர்வமாக அந்த வித்தைகளைக் கற்றுக் கொண்டார்.

மெய் ஞானத்தின் தன்மைகளை வித்தைகளாக அவர் தனக்குள் கற்றுச் சீராக வளர்த்துக் கொண்டதால் ஞானகுருவாக இருக்கிறார்…! குருநாதர் இட்ட ஆணைப்படி வைராக்கியமான நிலைகள் கொண்டு விடா முயற்சியால் அதைப் பெற்றார்.

வித்தைகள்… வித்துக்கள்… வினைகள்…! முழுமையும் அது சரியாக இருந்தால் அதனின் விளைச்சல் பலன்களாக அநுபூதியாகக் கிடைக்கின்றது.

அநுபூதியைப் பெற்றுக் கொள்தல் என்பது
1.நல்ல விதைகளை ஊன்றி அவைகளைப் பக்குவமாக வளர்த்தால் அதன் மூலம் நல்ல மகசூலைக் காண்பது போல்
2.நல்ல வினைகளை நமக்குள் சேர்த்தால்…
3.மெய் ஞானிகள் பெற்ற பேரருள் பேரொளி உணர்வுகளை இந்த மனித வாழ்க்கையில் வளர்த்து உடலிலே விளையச் செய்தால்
4.விளைந்த சத்துகள் அனைத்தும் உயிருடன் இணைந்து உயிரான்மா அழியா ஒளிச் சரீரம் பெறும்.
5.அதைத்தான் பெறுதல் “பெற்றுக் கொள்தல்…!” என்பது.

அந்த நிலை பெற அத்தகைய சந்தர்ப்பத்தை ஏற்படுத்துபவர்கள் தான் மாமகரிஷிகள். அதனால் தான் வித்தைகளைக் கற்றுக் கொள்… அநுபூதியைப் பெற்றுக் கொள்…!” என்று நமக்கு அதைக் கொடுக்கிறார்கள்.

மகரிஷிகள் என்பவர்கள் எத்தகைய நஞ்சையும் பிளந்திடும் நிலைகள் பெற்றவர்கள். நம் பூமியின் தொடர் கொண்டு வாழுகின்றார்கள்.

அகண்ட அண்டத்தின் இயக்கத்தில் உள்ள எது அழிந்தாலும் இவர்கள் தனி மண்டலமாக இயக்கப்பட்டு “தீமையற்ற உலகை…!” அவர்களுக்குள் சிருஷ்டித்துக் கொண்டிருப்பார்கள்.

ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் ஏற்பட்ட இந்த மண்டலங்கள் வேறு வேறு விதமாக இருப்பினும் “பெரும் மண்டலமாகத் திகழ்கின்றார்கள்…!
1.அகண்ட பேரண்டத்தில் இப்பேர்ப்பட்ட மகரிஷிகள் உண்டு.
2.மனிதனில் தெளிந்த நிலைகள் கொண்டு அது பெரும் வட்டமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்.
3.நாம் அதிலே இணைய வேண்டும்.

அத்தகைய அநுபூதியைப் பெற்றுக் கொள்ளத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் வித்தைகளைக் கற்றுக் கொள்… அநுபூதியைப் பெற்றுக் கொள்…! என்று நம் சாமியிடம் ஆரம்பத்திலிருந்தே (சாமிக்கு ஈஸ்வரபட்டர் யார் என்று தெரியாத பொழுதிலிருந்தே) கூறி வந்தார்.

அந்த மகரிஷிகள் அவர்கள் பெற்ற அநுபூதியை. நமக்கும் கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றார்கள். அந்த அநுபூதியை யார் பெறவேண்டும் என்று விரும்பி வாங்குகிறார்களோ அவர்களுக்கு அது பரிபூரணமாகக் கிடைக்கிறது…!

Leave a Reply