மன அமைதியை இழக்கும் சந்தர்ப்பங்களை எல்லாம் மனதை உற்சாகப்படுத்தும் சந்தர்ப்பமாக எப்படி மாற்ற வேண்டும்…?
சகஜ வாழ்க்கையில் எல்லோரும் நல்லதைத்தான் எண்ணுகின்றோம். யாரும் தவறு செய்யவில்லை. இருந்தாலும் சந்தர்ப்பங்கள் எப்படி நம்மை இயக்குகிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இன்றைய இளைய தலைமுறையினர் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அடுத்தவர் ஏதாவது தன்னைப் பற்றிச் சிறிதளவு பிடிக்காமல் சொல்லிவிட்டாலும்.. :உடனே எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது..!” என்று வந்துவிடுகின்றார்கள்.
1.கேட்டால் வேலை பார்க்கிற இடத்திலே என்னைத் திட்டுகிறார்கள். வீட்டிலேயும் திட்டுகிறார்கள்.
2.நண்பர்களும் சரியாக என்னிடம் பேசுவதில்லை.
3.என்னை யாருக்குமே பிடிக்கவில்லை.
4.என் மனது சரியில்லை… நான் வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன்..! என்று மிகுந்த மன உளைச்சலுடன் இருப்பார்கள்.
என்ன நடந்தது…? எதனால் இப்படி ஆனார்கள்..? என்று சிந்தித்துப் பார்த்தால் வாழ்க்கையை வெறுக்கும்படியாக அதில் ஒன்றுமே இருக்காது.
ஒன்றுமே இல்லை என்றால் அது எப்படி…?
1.நம் கையில் ஒரு அழுக்கோ தூசியோ ஒட்டினால் அதற்காக யாராவது டென்ஷன் ஆவோமா…?
2.தினசரி உடல் அழுக்கு ஆகிறது உடுத்தியிருக்கும் உடை அழுக்காகின்றது குளிக்காமல் இருப்போமா..?
3.அல்லது துணியைப் துவைக்காமலோ துணியைப் போடாமலோ இருப்போமா..? இல்லை.
சோப்பைப் போட்டு நல்ல நீரில் குளித்தால் அழுக்குகள் எல்லாம் ஓடிப் போகுமா இல்லையா…! சோப்பைப் போட்டு நுரையை ஏற்றினால் துணியிலிருக்கும் அழுக்குப் போகுமா இல்லையா…!
புறத் தூய்மை எப்படிச் செய்கிறோமோ அதே மாதிரித்தான் நம் மனதிலும் நம் எண்ணத்திலும் ஒட்டிக் கொள்ளும் அழுக்கைச் சோப்பைப் போட்டுக் கழுவுவது போல கழுவ முடியும்.
எத்தனை தடவை அழுக்கானாலும் நம் மனதையும் எண்ணத்தையும் தங்கம் போல பளிச் என்று வைத்துக் கொள்ள முடியும். அதனால் தான் வாழ்க்கையில் எந்த ஒரு காரியத்திற்காகவும்… “மன உளைச்சல் பட வேண்டியதில்லை…!” என்று சொல்கிறோம்.
ஏனென்றால் நம்மைத் திட்டுகிறவர்கள் திட்டி முடிந்ததும் அதை விட்டுவிட்டு வேறு வேலையைப் பார்க்கத் தொடங்குகிறார்கள். ஆனால் திட்டினார்கள்… திட்டினார்கள்…! என்று அதையே நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
அங்கே தான் நாம் தவறு செய்கிறோம்.
1.கையில் எடுத்த ஒரு வேண்டாத பொருளை கீழே அப்படியே போட்டு விடுவது போல்
2.அவர்கள் திட்டியதை நாம் அனாதையாக்க வேண்டும்.
3.அதற்குப் பதிலாக நாம் நல்லதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அவசரமாக ஊருக்குப் போகும் பொழுது ரோட்டில் சண்டை போட்டால் அதைப் பார்ப்போமா…? இல்லை. பார்த்தால் ட்ரெயினைப் பிடிக்க முடியாது. எப்படிச் சண்டை போட்டாலும் ஏசினாலும் பேசினாலும் அதை நின்று பார்க்க மாட்டோம்.. கேட்கவும் மாட்டோம்.
அது போல் தான் வாழ்க்கையில் எத்தனையோ கெட்டது வந்தாலும் அதன் மேல் நினைவைச் செலுத்த வேண்டியதில்லை,
மனதை எப்படிக் கழுவுவது என்று பார்ப்போம்.
1.நம் கண் ஒன்றைப் பார்க்கிறது.
2.சப்தம் காதிலே படுகிறது.
3.உடனே நினைவு கண்ணுக்கு வந்த பின் இழுத்துச் சுவாசிக்கிறோம்.
4,சுவாசித்தது உயிரில் படுகிறது…!
5.உயிர் ஒரு நெருப்பு. நெருப்பில் எதைப் போடுகிறோமோ அந்த வாசனை தான் வரும்.
6.அதிலே நல்ல பொருளைப் போட்டால் நல்ல வாசனை தான் வரும்.
கோயிலில் சாமி சிலைக்குப் பால் பன்னீர் சந்தனம் தேன் மலர்கள் கனிகள் இதேல்லாம் அபிஷேகம் செய்ற மாதிரி நம் உயிருக்கு அபிஷேகம் செய்தால் நம் மனதும் எண்ணங்களும் தங்கம் போல் பளபளப்பாகிவிடும்.
நம் உடலில் பாலையோ பன்னீரையோ சந்தனைத்தையோ ஊற்றினால் சந்தோஷம் வருமா இல்லையா…? ஆனால் மிளகாயை அரைத்து ஊற்றினால் எரியுதே எரியுதே உஷ்..உஷ்… ஆ…ஆ… என்று தான் சொல்வோம்.
அது மாதிரித்தான் திட்டுகிறவர்களை நினைத்தாலோ வேண்டாததை நினைத்தாலோ எரிச்சல் தான் வரும். டென்சன் தான் ஆவோம். மனதும் கெடும் உடலும் கெடும்.
அதற்குப் பதிலாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரில் திரும்பத் திரும்ப இணைத்தால் “அமைதியும் சந்தோஷமும் தன்னாலே தேடி வரும்….!”
ஓ…ம் ஈஸ்வரா…! என்று நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணினாலே போதும்.
1.ஒரு இரண்டு மூன்று தடவை இப்படி எண்ணினாலே
2.SUDDEN BRAKE…! (பிரேக்) போட்ட மாதிரி மற்றவர்களைப் பற்றிய எண்ணமே மறந்து போகும்.
3.அடுத்து நம் வேலையை நாம் பார்த்துக் கொண்டு போகலாம்…!
மனது கெடும் பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்ற இந்தச் சோப்பைப் போட்டால் கெட்டதெல்லாம் நம்மை விட்டு விலகும்.
செய்து பாருங்கள்…! செய்த பின் மிகுந்த உற்சாகம் வருகிறதா இல்லையா என்று…?
தாய் கருவில் நாம் ஒவ்வொருவரும் பெற்ற பூர்வ புண்ணியத்தின் இயக்கங்கள் நம்மை எப்படி இயக்குகிறது…?
பல கோடி சரீரங்களைக் கடந்து கடந்து இன்று நாம் மனிதனான பிறகு நம் உயிர் என்ன செய்கிறது…? ஆகாரத்துடன் கலந்து வரக்கூடிய நல்ல வாசனையுள்ள உணவில் கலந்துள்ள நஞ்சை மலமாக மாற்றி விடுகிறது.
1.நல்ல உணர்வை நம் உடலில் சேர்த்து
2.நல்ல உணர்வைப் பெறக்கூடிய அந்த உணர்வின் சத்தை நம் உடலாக மாற்றுகிறது.
அந்த நல்ல உணர்வின் சத்து வெளிப்படும் போது அந்த மணம் இந்த உடலுக்கு எது தேவையோ அந்த உணர்வின் தன்மையைத் தான் அது பெறும்.
இருந்தாலும் மனிதனாகப் பிறந்த நிலையில் குழந்தையிலிருந்து வளர்ச்சி அடையும் போது ஒவ்வொன்றாகப் பார்க்கிறோம். குழந்தைப் பருவத்திலே
1.தாய் மேலே வெறுப்பாக இருக்கிறது.
2.தன் கூடப் பிறந்தவர்களை உதைக்க வருகிறது.
3.விளையாடும் பொழுது எத்தனையோ முறை தடுக்கி விழுகிறது.
இதற்குக் காரணம் என்ன…? குழந்தை தாய் கருவிலே விளையப்படும் போது வந்த உணர்வுகள் தான் இவை.
தாய் கருவுற்றிருக்கும் சமயம் சந்தர்ப்பவசத்தால் வெறுப்பு கொண்டர்களையோ வேதனை கொண்டவர்களையோ மற்றவர்களைத் தாக்கும் உணர்வுகளையோ பார்க்க நேர்ந்தால் அல்லது பேசுவதைக் கேட்க நேர்ந்தால் வேடிக்கையாகப் பார்த்தாலும் அதைத் தாய் நுகருகிறது. அது இரத்தத்தில் கலக்கிறது.
கரு உருவான ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் இத்தகைய சமபவங்களை உற்றுப் பார்த்தால் இரத்தத்தின் வழியாக அது குழந்தையின் கருவிலே இணைந்து விடும். கருவிலேயே இத்தகைய நிலைகள் உருவாகிறது. குழந்தைக்கு அதுவே பூர்வ புண்ணியமாகிறது.
குழந்தை கருவிலே விளையும் போது அடுத்தவர்களைத் கிள்ளுவது.. தள்ளி விடுவது…! போன்றவற்றைக் கருவுற்ற தாய் பார்த்திருப்பார்கள். பிறந்த உடனே அந்தக் குழந்தையைப் பாருங்கள்.
குழந்தையின் பாஷையும் தோரணையும் அதனுடைய சத்தமும் மற்றவரை அடிப்பதும் வெறுப்பதும் அது வளர்ச்சியாகி வரும் போது அந்த வித்தியாசம் தெரியும்.
ஆனால் சில குழந்தைகளைத் தள்ளி விட்டாலும் அது பேசாமல் இருந்து விட்டு ஒதுங்கிப் போகும். அது அதனுடைய உணர்வுகள்.
1.அப்போது அந்த உணர்வுகொப்ப இயக்கம் இந்த உயிர் தான் இயக்குகிறது.
2.வேறு யாரும் இயக்கவில்லை.
நாம் எண்ணி நுகர்ந்த உணர்வை அணுவாக மாற்றி அந்த அணுவின் மலம் தான் நம் உடலாகிறது. நல்ல அணுக்களாக இருந்தால் நம் உடல் அழகாக இருக்கிறது. அமைதியாக இருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது.
ஒரு குழந்தை இன்னொரு குழந்தையைத் தள்ளி விடும் போது கருவுற்ற தாய் “பார்… சிறிய குழந்தையை இப்படித் தள்ளி விடுகிறது…! என்று நினைத்தால் கருவிலிருக்கும் குழந்தைக்கு அதே உணர்வுகள் தான் தோன்றுகின்றன.
அதற்குத் தள்ளி விடும் உணர்வுகள் வருகிறது. அது பிறந்தபின் குழந்தை பருவத்தில் அடுத்த குழந்தையைத் தள்ளி விடும்போது விழுந்த குழந்தையின் பெற்றோருக்குக் கோபம் வருகிறது.
1.கோபம் வந்தால் குழந்தைகளுக்குத் தெரிகிறதா என்றால் இல்லை.
2.ஆனாலும் தன் செயலைத் தான் அது செய்கிறது.
தன் குழந்தை தவறு செய்கிறதே…! என்று தாய் சப்தம் போட்டுக் கூப்பிட்டால் அந்தச் சப்தம் கேட்டு எதிர்த்துக் குழந்தை அழ ஆரம்பித்து விடும். ஆனால் தெரிவதில்லை,
எந்த உணர்வின் அணுவாக உருப்பெற்றதோ அந்த உணர்வின் உணர்ச்சிகள் அது இயங்கி அதையே உணவாக உட்கொண்டு அந்த அணுக்கள் பெருகும்.
நாம் குழந்தை என்று எண்ணுகிறோம். ஆனால் அதன் வளர்ச்சியில் நாளடைவில் தன் உடலுக்குள் பகைமை உணர்வு கொண்ட அணுக்களாக மாறி விடும். அதே சமயத்தில் அந்த உணர்வுகளைக் குழந்தை நுகர நுகர இரத்த நாளங்களில் அந்த உணர்ச்சியின் தன்மைகள் தான் வளரும்.
சூரியன் செடி கொடிகளின் சத்துக்களை எடுத்து இந்தக் காற்று மண்டலத்தில் வைத்துக் கொள்கிறது. செடியில் விளைந்த வித்தைப் பூமியில் விதைத்தால் அந்த பூமியின் ஈர்ப்பின் துணை கொண்டு தன் தாய் செடியின் சத்தை நுகர்ந்து அதன் உணர்வுகொப்ப அதன் மணமும் குணங்களும் அதன் உணர்ச்சிக்குத்தக்க அந்தச் செடியின் ரூபமும் வருகிறது.
இந்தப் பூமியைப் போலத் தான் நம் உடல். சூரியன் எப்படி மற்ற தாவர இனங்களை வளர்க்கச் செயல்படுகின்றதோ அதுபோல நம் உயிரால் உருவாக்கும் நிலைகள் உடலிலே ஜீவ அணுக்களை உருவாக்குகின்றது.
எந்த உடலில் விளைந்த கோபமோ வெறுப்போ வேதனையோ அதனதன் எண்ணங்களாக வெளி வரும் போது இது பல பல வித்துக்களாக மாறும்.
கண் கொண்டு கூர்ந்து பார்க்கும் நமக்குள் போது பதிவாகிறது. பதிவான நிலைகளை ஈர்க்கும் சக்தி பெறுகிறது நம் கண்ணின் காந்தப் புலனறிவு. நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டு அந்த உணர்வின் தன்மை தன் உடலிலே அணுவாகப் பெருகத் தொடங்குகிறது.
உருவான அணு தன் இனமான உணர்வை ஈர்க்கும் சக்தி பெற்று அதைக் கவரத் தொடங்குகிறது. அந்த அணுவுக்குத் தேவையான உணர்வை எடுத்துக் கொடுத்து வளர்ப்பது நம் உயிர் தான்.
நுகர்ந்த உணர்வின் அந்தச் சத்துகள் நம் உடலிலே பெருகப் பெருகப் பெருக நம் உடலிலுள்ள மற்ற நல்ல குணங்கள் கொண்ட அணுக்களுக்கு இது இடைஞ்சலாக வரும்.
தாய் கருவிலே இருக்கும் போது வெறுப்புணர்வு கொண்ட உணர்வுகளைத் தாய் கவர்ந்திருந்தால் சந்தோஷமாக அதை உணவாக உட்கொள்ளும். அந்த அணுக்கள் பெருகும்.
அதே சமயத்தில் இந்த உணர்வுகள் இரத்தத்தில் அதிகமான பின் மற்ற நல்ல அணுக்களுக்கு நல்ல உணர்வுகள் இரத்தத்தில் வரவில்லை என்றால் என்ன ஆகும்…? போர் முறை தான்…!
1.ஆக தாய் கருவில் பெற்ற நிலைகளே நமக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து
2.அதன் வழியிலேயே நாம் செயல்படுகின்றோம்.
இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் தியானம் இருந்தோம் என்று சொல்லிவிட்டு எதிர்த்த வீட்டில் சண்டை போட்டார்களென்றால் அந்தச் சண்டையைக் கொஞ்ச நேரம் நம்மை அறியாமல் நுகர்ந்தால் போதும்.
சண்டை போடுவதை உற்று பார்த்த உடனே
1.நம்மை அறியாமலேயே நமக்கு அந்த உணர்ச்சியின் வேகங்கள் வரும்.
2.உணர்ச்சிகளைத் தூண்டி அதே எண்ணங்கள் வரும். அந்தச் செயல்களும் வரும்.
3.நம் உடலிலுள்ள நல்ல அணுக்கள் இயங்க மறுக்கும்.
4.மறுக்கும் போது நம்மை அறியாமலே ஒரு விதமான இனம் புரியாத எரிச்சல் வரும்.
குழம்பில் காரம் அதிகமாகப் போட்டால் எப்படி இருக்கும்…? அதே போல இந்த உணர்ச்சிகள் நம் உடலில் வந்த உடனே அதே உணர்ச்சியின் எண்ணங்களால் நம் சிந்திக்கும் ஆற்றல் குறையும்.
பதிலுக்கு எப்படியும் எதையாவது சொல்ல வேண்டும் என்ற உணர்வைத் தூண்டும்.
1.அந்த உணர்வைத் தூண்டிய உடனே அவர்களோடு நாம் சண்டைக்குப் போனால்
2.சண்டையிட்டால் “இவருக்கு என்ன வந்தது…?” என்று நம்மிடம் கேட்பார்கள்.
அவர்கள் சண்டை போடும் போது நாம் பார்த்தோம். அதற்கு முன் அவர்கள் எதற்காகச் சண்டை போட்டுக் கொண்டார்கள் என்று நமக்குத் தெரியவில்லை.
1.ஆனாலும் சண்டையைப் பார்த்த உடனே அந்த உணர்வுகள் நம்மை இயக்குகிறது.
2.இயக்கினாலும் பொது வாழ்க்கையில் நாம் யார் யாரோ எப்படி எப்படியோ நாம் பழகத் தான் செய்கிறோம்.
3.ஆனால் நல்லதை நாம் பெறுகின்றோமா… வளர்க்கின்றோமா…?
அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்? “ஈஸ்வரா…!”புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு பிரேக் (BRAKE) போட்ட மாதிரி சண்டை போடும் உணர்வை நமக்குள் புகாதபடி நிறுத்த வேண்டும்.
நிறுத்திய உடனே நம் உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் கொண்டு வந்து விட வேண்டும். இது கூடிவிட்டால் சண்டை போட்டவர்களின் உணர்வு நம்மை இயக்காது.
பின் மகரிஷிகளின் அருள் சக்தி சண்டையிட்டவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும். அவர்கள் பொருளறிந்து செயல்படும் அருள் சக்தி பெறவேண்டும். பகைமைகள் அகன்று ஒற்றுமை உணர்வுடன் வாழ வேண்டும் என்று இத்தகைய உணர்வுகளைப் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.
இதனால் பிறரின் தீமைகள் நமக்குள் வராது தடுக்கின்றோம். மற்றவர்களுக்கும் நாம் நல்ல உணர்வைப் பெறச் செய்கின்றோம்.
ஏனென்றால் உங்கள் வாழ்க்கையில் அவ்வப்பொழுது வரும் தீமைகளிலிருந்து நீங்கள் எப்படி விடுபட வேண்டும் என்ற உபாயத்தைத்தான் யாம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.