தொழில் செய்யும் இடங்களில் மற்றவர்களால் தொல்லைகள் ஏற்படும் பொழுது அதனால் குடும்பத்திற்குள் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றது…? அதை எப்படி நல்லதாக்குவது…?

அகத்தியர்

தொழில் செய்யும் இடங்களில் மற்றவர்களால் தொல்லைகள் ஏற்படும் பொழுது அதனால் குடும்பத்திற்குள் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றது…? அதை எப்படி நல்லதாக்குவது…?

 

கணவர் வெளியில் வேலை செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அங்கு தொழிலில் சில இம்சைகள் வந்துவிடுகிறது.

இவர் நன்றாக வேலை செய்கிறார். தவறே செய்ய மாட்டார். எப்படியோ சந்தர்ப்பத்தில் ஒருவன் அவரைத் திட்டுகிறான். தான் மேலே வர வேண்டும் என்பதற்காக அவரைக் குற்றவாளியாக ஆக்குவதற்கு மறைமுகமாக ஏதாவது செய்வான். அந்த நேரத்தைச் சந்திக்கும் போது குற்றமாகி விடுகிறது.

நான் தவறு செய்யவில்லையே இப்படிச் செய்கிறார்களே…! என்று ஆத்திரப்பட்டு வேதனைப்படுகிறோம். அப்போது எதை எடுக்கிறோம்…?

நல் வழியில் நல்வினைப் பயனாக வாழ்க்கை நடத்தி வந்தாலும் அடுத்தவன் தவறு செய்துவிட்டு நம்மைக் குற்றவாளியாக்கும் பொழுது வேதனை என்ற விஷத்தின் தன்மையைத் தான் நமக்குள் எடுக்கிறோம்.

1.அப்படி விஷத்தின் தன்மை ஆகிவிட்டால்
2.நம்மிடம் இருக்கும் அந்த உண்மையின் நிலைகளை எடுத்துச் சொல்லக் கூட முடியாது – நாம் தவறு செய்யவில்லை.
3.ஆனால் நம்மைக் குற்றவாளியாக்க வேண்டும் என்று கற்பனை பண்ணிக் கொண்டவன்… அத்தகைய விஷத்தை உருவாக்கியவன்
4.அந்த உணர்வுக்குத்தக்க திடமான உணர்வு கொண்டு நம்மைக் குற்றவாளியாகவே ஆக்கிவிடுகின்றான்.

அந்த அளவுக்கு ஆன பின்னாடி என்ன நடக்கிறது…? தொழில் செய்தேன். இப்படி ஆகி விட்டது. ஆனால் நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லை என்று வீட்டில் வந்து மனைவியிடம் சொல்கிறார்.

இதை மனைவி கேட்டால் என்ன ஆகிறது…? அந்த வேதனை அங்கேயும் இயக்குகிறது. கணவருக்கு… “இப்படி ஆகி விட்டதே…!” என்று மனைவி எண்ணுகிறார்.

அப்பொழுது அந்த வேதனையான சக்தியை எடுத்து அந்த வேதனையை உருவாக்கும் அணுக்களைத் தான் இங்கே உருவாக்க முடிகிறதே தவிர அதைத் தணிக்க முடிகின்றதா…? பெண்களுக்கு வேதனை தான் வருகிறது. சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதா…?

ஆனால் காவியங்களிலே எப்படிக் காட்டுகின்றார்கள்…? சாவித்திரி எமனிடமிருந்து தன் கணவனை மீட்டாள் என்று கதைகளில் கொடுக்கிறார்கள்.

அகஸ்தியரும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போல கவர்ந்து கொண்ட இரண்டு சக்தியும் ஒரு மனமாக ஒரு உணர்வாக ஒன்றியது.

நளாயினி என்ன செய்கிறது…? குறைகளை எண்ணாது கணவனை உயர்த்தி எண்ணுகிறது. அதே சமயத்தில் கணவரும் தன் மனைவி உயர வேண்டும் என்று எண்ணுகிறார். அந்த இரண்டு உணர்வுகளும் ஒன்றி வரும்போது தான் இரு உயிரும் ஒன்றுகிறது. இரு உணர்வுகளும் ஒன்றுகிறது. இரு உணர்ச்சிகளும் ஒன்றுகிறது.

உயிரைக் போன்றே உணர்வின் தன்மையை நாம் எண்ணிய உணர்வுகள் கருத்தன்மையை அடைகிறது. அப்படி அடைந்தவர்கள் தான் துருவ நட்சத்திரமாக ஆனது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துத் தன் கணவனுக்குப் பெறவேண்டும் என்று மனைவி எண்ண வேண்டும்.

வேலை பார்க்கும் இடத்தில் நடக்கும் குறைகளை வீட்டில் மனைவியிடம் கவலையாகச் சொன்னால் மனைவி என்ன செய்வார்கள்…?

கணவன் வேலைக்குப் போகும் பொழுதெல்லாம்
1.தொழில் செய்யும் இடத்திலுள்ளவர்களை எண்ணி
2..இந்தச் சண்டாளார்கள் என் கணவரை என்ன செய்கிறார்களோ…? ஏது செய்கிறார்களோ…! என்று
3.இப்படி அவர்களை சாபமிடும் உணர்வின் தன்மையே வரும்.

ஆனால் இப்படி எண்ணினால் இந்த உணர்வின் தன்மை என்ன செய்யும்…? மீண்டும் அவர்கள் உணர்வுடன் கலந்து அந்த உணர்ச்சியை மீண்டும் வீரியத் தன்மை ஆக்கும். இடையூறுகளை அதிகமாக ஊட்டும் தன்மை தான் வரும். நீங்கள் பார்க்கலாம்.

உதாரணமாக வேலை பார்க்கும் இடத்திலுள்ள நண்பர் என்ற நிலையில் கணவர் இங்கே வீட்டுக்கு அழைத்து வந்தாலும் மனைவி சந்தேகப்பட்டு என் கணவர் எல்லோருக்கும் உதவி செய்தார்…! ஆனால் பாவிகள் என் கணவருக்கு இடையூறு செய்கிறார்களே…! என்று அந்த நண்பரையும் எதிரியாக்கும் நிலைக்கு அழைத்துச் சென்றுவிடும்.

ஏனென்றால் இதெல்லாம் இயற்கையின் நியதிகளை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கணவருக்கு இடைஞ்சல் செய்கிறார்கள் என்ற உணர்வு தூண்டப்பட்டு நம்மை அறியாமலேயே எதிரியைக் கூட்டுகின்றது. பகைமையாக்கி விடுகின்றது.

இத்தகைய உணர்வுகளால் தொழிலும் கெடுகின்றது. வேதனை அதிகமாகி உடலில் நோய் வரக் காரணமாகின்றது. அதே சமயத்தில் அந்த வேதனையால் தினசரி வேலைகளில் நாம் பிற பொருள்களைப் பயன்படுத்தும் விதமும் மாறுகிறது.

வேதனையோடு இருக்கும் பொழுது ஒரு இடத்தில் அமர்ந்தாலும் அதிலள்ள ஒரு கம்பியோ மற்றதோ நீட்டியிருப்பது தெரியாது. அதைச் சரி பார்த்த பின் அமர வேண்டும் என்ற சிந்தனையும் வராது.

எழுந்திருக்கும் பொழுது அதிலே மாட்டிக் கொண்டு போட்ட துணி கிழிகிறது. உடனே என்ன நினைப்போம்…? தரித்திரம்…! பார் போறாத காலம் இப்படி ஆகிவிட்டதே…! என்று மீண்டும் வேதனைப்படுவோம். ஏனென்றால் பார்த்து அறிந்துணர்ந்து செயல்படும் தன்மையை இழக்கின்றது.

அடுத்தாற் போல் ரோட்டிலே நடந்து செல்லும் போது மேடு பள்ளம் தெரியாதபடி கீழே விழுந்து விடுவோம். ஏனென்றால் சிந்தனையை இழக்கும் போது கீழே விழுந்தான் மேலே விழுந்தான் என்ற நிலை எல்லாம் வருகிறது.

ஆகவே நம்மை எது இயக்குகிறது…?
1.நாம் நுகர்ந்ததைத்தான் நம் உயிர் இயக்குகிறது.
2.உணர்வின் உணர்ச்சி நம் உடலில் எதுவோ அந்த மணத்தின் தன்மை வெளிப்படுகிறது.
3.அந்த மணத்தின் தன்மை நல்ல மணங்களை அடக்கி விடுகிறது.
4.நல்ல மணங்களை அடக்கும் போது இத்தகைய நிலை ஆகின்றது.

எல்லோருடனும் தான் நாம் வாழ்கின்றோம். நல்லவர்களும் இருக்கிறார்கள் கெட்டவர்களும் இருக்கிறார்கள். தொழில் செய்யும் இடங்களில் எவ்வளவு இருந்தாலும் கூட எடுத்துக் கொண்ட உணர்வுக்கு ஒப்ப அவரவர்களின் குணம் அமைகிறது.

அந்த உணர்வு நம் நல்ல குணங்களுக்கு ஏற்றதாக இல்லை. நமக்குள் எதிரி என்ற உணர்வு வருகிறது. அதனால் தொழில் செய்யும் இடங்களில் போட்டி பொறாமை என்று இவ்வாறு ஆகி விடுகிறது.

இதை மனைவியிடம் சொன்னால் அவர்கள் என்ன செய்கிறார்கள்…? மனைவியும் நம்மோடு ஒத்துழைக்கிறார். எதற்கு…? நாம் படும் வேதனையை வளர்க்கும் விதமாக அவர்களும் சேர்ந்து வேதனைப்படுவார்கள்.

அந்த நேரத்தில் நம் குழந்தைகள் அன்பாகப் பேசினாலும் “சனியன்கள்…! இது வேறு…! சும்மா இருந்தால் என்ன…? நேரம் காலம் தெரியாமல்…! தன் பிள்ளைகள் என்று கூட அறியாதபடிச் சாபமிடும் நிலை வருகிறது.

அதே சமயத்தில் இந்த மாதிரி வேதனையில் இருக்கும் சமயம் அக்கம் பக்கம் இருப்பவர்கள் அவர்கள் வீட்டில் தங்களுக்குள் பேசி சிரிப்பதைக் கேட்டால் போதும். அவர்கள் சிரிப்பது நமக்கு வேறு விதமாகத் தோன்றும்.

அவர்கள் தங்கள் குடும்பத்தில் இயல்பாகப் பேசிச் சிரித்திருப்பார்கள். ஆனால் நாம் அதைக் கேட்கும் பொழுது
1.நாம் வாழ்வது அவர்களுக்குப் பிடிக்கவில்லை.
2.நம்மைப் பார்த்து பொறாமையில் ஏளனமாகச் சிரிக்கிறார்கள் என்று
3.நம்மை அறியாமலேயே இப்படி எண்ணி இதை எடுத்து நமக்குள் வளர்க்கும் தன்மை வந்து விடுகிறது.

இப்படி எது எதனுடன் கலக்கின்றது…? குற்றம் இல்லாதவர்களைக் கூட குற்றவாளியாக்கும் நிலையும் அவர்களை எதிரி ஆக்கும் நிலையும் வருகிறது.

அதே சமயம் நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களுக்கு நாம் நுகர்ந்த உணர்வுகள் எதிரியாகி விடுகிறது. நமக்குள் ஒத்துழைக்கும் அந்த உண்மையின் தன்மையும் அது செயலிழக்கிறது.

ஏனென்றால் நாம் நுகர்ந்ததை… பார்த்ததை… கேட்டதை… நம் உயிர் சமைக்கின்றது…. உடலுக்குள் உருவாக்குகின்றது. சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் நம் உயிர் உருவாக்குகின்றது.

ஆனால் ஆறாவது அறிவு கொண்ட நாம் எந்த சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும்…? சிந்தியுங்கள்…!

மிளகாய் தனித்து இருக்கும் போது காரமாக இருக்கின்றது. இருந்தாலும் மற்ற பொருள்களுடன் இதை இணைத்துச் சுவையாக மாற்றுகிறோம்.

அது போன்று தான் குடும்பத்திலோ தொழிலிலோ சந்தர்ப்பத்தால் வேதனை என்ற உணர்வுகள் வந்தால் கணவனும் மனைவியும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கொஞ்மாவாது எடுக்க வேண்டும்.

அகஸ்தியரும் அவர் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போல வாழ்ந்து இருளை நீக்கி உணர்வின தன்மையை ஒளியாக மாற்றியவர்கள்.
1.துருவத்தின் வழி தான் விண்ணின் ஆற்றல் பூமிக்குள் வருகிறதென்று துருவத்தை உற்று நோக்கி
2.துருவத்தின் பாதையில் வரும் உணர்வை இருவருமே அந்த ஒளியின் கற்றையாக மாற்றினர்.

மின்னல்கள் ஏற்படும் போது மற்ற நட்சத்திரங்களிலிருந்து வரும் மின் ஒளிக்கற்றைகளை நுகருகின்றார்கள். இயற்கையின் விஷத்தின் உணர்வைலைகள் அங்கே செல்வதை அடக்கி தமக்குள் ஒளிக் கற்றைகளாக மாறுகின்றனர்.

உயிர் எப்படி ஆனதோ இதேபோல தான் அவர்கள் இருவருமே அந்த கருத்தன்மையை உருவாக்கி அந்த அணுவை ஒளித் தன்மையாக மாற்றியவர்கள். நஞ்சை வென்று ஒளியின் சுடராக துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்கின்றார்கள்.

அதை நம் உடலுக்குள் சேர்த்து வலுவாக்கிக் கொண்டு
1.என் கணவர் தொழில் செய்யும் இடம் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்.
2.அங்கே கணவருடன் வேலை செய்வோர் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று
3.சிந்தித்துச் செயல்படும் அருள் ஞானமும் பொருளறிந்து செயல்படும் திறனும் பெறவேண்டும்.
4.என் கணவரின் செயல்கள் அனைத்தும் மற்றவர் போற்றும் நிலை பெறவேண்டும் என்று
5.மனைவி இதை எண்ணித் தனக்குள் சமைத்து இந்த உணர்வைத் தன் கணவனுக்குப் பாய்ச்சிக் கொண்டே இருக்க வேண்டும்.

இந்த உணர்வுகளை மனைவி கணவனுக்குப் பாய்ச்சப் பாய்ச்ச “ரிமோட் கன்ட்ரோல்…!” போல் இயங்கி அங்கே தொழில் செய்யும் இடங்களில் வரும் பகைமைகளை மாற்றும். ஒன்று சேர்ந்து வாழும் உணர்வுகளை ஊட்டும். மகிழ்ந்து வாழச் செய்யும்.

இதேபோல நீங்கள் கணவன் மனைவி செய்து பாருங்கள்.

Leave a Reply