அகஸ்தியனின் கையில் கமண்டலத்தை ஏன் காட்டியுள்ளார்கள்…?

Image

Agastyan kamandalam

அகஸ்தியனின் கையில் கமண்டலத்தை ஏன் காட்டியுள்ளார்கள்…?

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அகஸ்தியன் காடுகளிலே அவன் வாழ்ந்து வந்தாலும் அவன் சந்தர்ப்பம் தன் தாய் தந்தையின் அருளால் விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெறும் தகுதி பெற்றான்.

அதன் மூலம் தீமைகளை அகற்றிடும் வல்லமையையும் இருள் சூழும் நஞ்சினை அடக்கி அதை அவனுக்குள் ஒளியின் தன்மையாகவும் பெருக்கிக் கொண்டான்.
1.அது மட்டுமல்ல…!
2.இந்த பூமியின் இயல்பான நிலைகளில் அதை உருவாக்கவும்
3.அதற்குள் மாற்றம் செய்யக்கூடிய வல்லமையும் அவனுக்கே உண்டு.

அதை வைத்துத்தான் இந்தப் பூமியையே அவன் வாழ்ந்த காலத்தில் சமப்படுத்தினான். அது எவ்வாறு என்பதைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்வதற்குக் காவியப் படைப்புகளும் உண்டு.

நம் பூமி சுழலும் போது துருவப் பகுதியின் வழியாக விண்வெளியில் இருக்கும் ஆற்றலைக் கவர்கின்றது. அது தான் பார்வதி…! – தன் பார்வையில் கவரும் சக்திகள். அவ்வாறு பூமி கவரும் அந்தச் சக்திகள் அனைத்தும் துருவப் பகுதியில் உறைந்து சிவமாகின்றது.

1.அதாவது பூமி சுழலும் சக்தி பார்வதி
2.அப்படிக் கவர்ந்த சக்திகளின் உறைவிடமாக அங்கே வருகின்றது துருவப் பகுதியில்
3.ஆகவே சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம்.

சிவன் என்பது பூமி. அதன் சுழற்சியின் வேக சக்தியால் விண்ணிலிருந்து வரும் சக்திகளைக் கவரப்படும் பொழுது சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம். கவர்ந்த உணர்வின் தன்மை சிவத்துடன் இரண்டறக் கலக்கின்றது.

ஆனால் பூமியுடன் சேர்த்து அது ஒன்றாகக் கலக்கின்றது என்ற நிலை வந்தாலும் இதனின் நிலைகளைப் பார்க்க வெகு கோடி ஜனங்கள் இங்கே வருவார்கள்

ஏனென்றால் பூமி கவர்ந்த அந்த உணர்வின் தன்மைகள் அனைத்தும் அணுக்களாகப் பெருகி
1.அந்தச் சக்தியின் தன்மை அகண்டு செல்லப்படும் போது
2.ஒரு பக்கம் எடை கூடி பூமி கவிழும் நிலை வரும்.

அதனால் பூமி திசை மாறி எடையற்ற பகுதிகள் மீண்டும் சக்திகளைக் கவர்ந்து அங்கே உறைந்து முதலில் உருவானது மீண்டும் கரைய இது வளரும்.

இப்படி பூமியின் சுழற்சியின் மாற்றங்கள் ஆவதிலிருந்து அதை ஆகாதபடி அன்று அகஸ்தியன் இதைக் காத்தான். அதைத்தான் சிவன் “அகஸ்தியா… நீ தெற்கே செல்…!” என்று சொல்வதாகக் காட்டியிருப்பார்கள்.

கல்யாணக் காலங்களில் இங்கே கூட்டங்கள் அதிகமாகிவிட்டால் எல்லாம் அதிர்ந்து விடும். அப்பொழுது பூமியின் நிலை தடுமாறி விடும். ஆகவே நீ தெற்கில் சென்று பூமியினைச் சமப்படுத்து..! என்ற எண்ணத்தை உருவாக்கியதாக அந்தக் காவியம் உண்டு.

அகஸ்தியின் தெற்கிலே சென்று சமமான பகுதியில் நின்று சூரியனின் காந்தப்புலனை அவன் எடுத்து இந்த பூமிக்குள் பரவச் செய்கின்றான்.
1.வடக்கில் கவரும் சக்திகள் பனியாக உறைந்தாலும்
2.தெற்கிலே நேராகக் கவரப்படும் சூரியனின் ஒளிக்கதிரால் அந்தப் பனிப்பாறைகள் உருகிக் கடலாகக் கரைந்து
3.இந்தப் பூமியின் தன்மைகள் சமமாக ஆனது.

இதைத் தான் சிவன் அகஸ்தியனைத் தெற்கிலே சென்று இந்த உணர்வின் தன்மையை உற்றுப் பார்த்து நீ பூமியைச் சமப்படுத்து…! என்று சொன்னதன் மூலக் கருத்து. அதனால் தான் அகஸ்தியனின் கையிலே கமண்டலம் கொடுத்திருப்பார்கள். அதற்குள் நீர்…!

ஏனென்றால் பூமியிலிருந்து விண் சென்ற அந்த முதல் மனிதன் அகஸ்தியன் தென் பகுதியிலே வெப்பத் தணல்களை ஈர்க்கும்படியாகப் பூமியைத் திருப்பிப் பனிப்பாறைகளை நீராகக் கரையச் செய்து இந்தப் பூமியைக் காத்தான்…! என்று அவனுக்குப் பின் வந்த ஞானிகள் அதை உணர்த்தினார்கள்.

இன்றைய விஞ்ஞான அறிவால் ஒவ்வொருவரும் தன் நாட்டைக் காக்க எண்ணினாலும் விஞ்ஞானத்தால் விளைந்த நஞ்சுகள் அதிகரித்து இந்தப் பூமியில் வாழும் மக்கள் அனைவரையுமே அழித்துவிடும் நிலையாக இன்று வளர்ந்து கொண்டுள்ளது.

அழிவை மாற்ற வேண்டும் என்றால் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நாம் போற்றும் அந்த அகஸ்தியன் உணர்வுகளை எடுத்துப் பரவச் செய்தால்தான் இந்தப் பூமியின் நிலையை மீண்டும் சமப்படுத்த முடியும்…!

பதினெட்டாம்படிக் கருப்பு என்று ஏன் சொல்கிறோம்…!

Image

Lord Ayyappa

பதினெட்டாம்படிக் கருப்பு என்று ஏன் சொல்கிறோம்…!

வாழ்க்கையில் அவசரம் ஆத்திரம் போன்ற உணர்வுகள் கொண்டு தன்னைத் திரும்பி பார்க்காது போகும் பொழுது நம்மை அறியாமலே இருளில் மடிந்து (விழுந்து) விடுகின்றோம்…! அப்படி விழுகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..? என்ற நிலையைக் காட்டுவதற்குத் தான் பதினெட்டாம் படியை வைத்துக் காட்டுகின்றார்கள்.

பதினெட்டுப் படியைச் சீராக வைத்து அதை வழுக்கிடும் நிலைகளாக அமைத்து அங்கே அதற்கு அருகிலே “கருப்பாயி கருப்பணன்…” என்ற தெய்வங்களையும் காட்டுகின்றார்கள்.

ஐயப்பன் மேல் பக்தி கொண்டு வந்தாலும் ஐயப்பனைப் பார்க்க வேண்டும் என்ற வேகத்தில் வரும் போது மற்றதைச் சிந்திக்காது செயல்படும் தீமைகளை எவ்வாறு அகற்ற வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.

நம் எண்ணம் ஒருமித்து உயர்ந்த குணங்களைப் பெற்றாலும் நாம் போகும் பாதையில் எத்தனையோ இடையூறுகள் வருகின்றது. மற்றவர்கள் செய்யும் தவறுகளையோ மற்றதுகளையோ அதை எல்லாம் நம் கண்ணில் பார்க்காமல் இருக்க முடியாது.

அதன் உணர்வுகள் வரும் போது அதை எல்லாம் நம் உயிரான விஷ்ணு வரம் கொடுத்து நம் உடலாகப் பிரம்மமாகச் சிருஷ்டித்து விடுகின்றது.

ஆகவே இதை எல்லாம் அறிந்த பின் நாம் எதைச் சுவாசிக்க வேண்டும்…? எதை நம் உடலுக்குள் சிருஷ்டிக்க வேண்டும்…?
1.நமக்குள் தீமை விளைவிக்கும் இருளைத் தணித்து விட்டு
2.நம் வேகத்தின் உணர்வை அடக்கிப் படி மீது ஏறும் போது
3.தன் அருகில் வருவோரை அழைத்து அரவணைத்துச் செல்லும் உயர்ந்த பண்புகளை உடலுக்குள் வளர்க்கும்படிச் சொல்கின்றார்கள்.

அதாவது நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் தீமையான நிலைகளைத் தனக்குள் புகவிடாது தடுத்து அந்தத் தீமைகளை எவ்வாறு அடக்க வேண்டும்…? என்று நாம் தெளிந்திடும் நிலையாக ஐயப்பன் ஆலயத்தில் காவியத் தொகுப்பாகக் கொடுத்து பதினெட்டாம் படியை வைத்துள்ளார்கள்.

அன்று அவன் கூறிய அறிவுப்படி அதை அமைத்தாலும் இப்போது வெறும் ஐதீகம்… சாஸ்திரம்…! என்ற நிலைகளில் போய்விட்டது.

பதினெட்டாம்படிக்குச் சென்றால் நான் முதல் வருடம் போனேன். தேங்காய் சிதறுகாய் போட்டேன். அதற்கு வேண்டிய சாஸ்திரத்தைச் செய்தேன். ஐயப்பன் எனக்கு எல்லாம் செய்வான். ஆகையினால்
1.மூன்றாவது வருஷம் நான்காவது வருஷம் என்று இப்படிப் பதினெட்டு வருஷம் சென்றேன்.
2.இப்பொழுது முழுமை அடைந்து நான் ஐயப்பனின் அருளையே பெற்று விட்டேன் என்ற நிலைக்குத்தான் செல்கின்றார்கள்.

ஆனாலும் ஐயப்பன் கோவிலில் கூட்டம் கூடக் கூடக் அங்கே சென்று பதினெட்டாம்படி ஏறுவதற்குள் போகும் பாதையிலே எத்தனையோ பேர் மரணமடைகின்றார்கள்… (ACCIDENT) என்று கேள்விப்படுகின்றோம்.

ஐயப்பன் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு சென்றாலும் அருகிலே இருப்போர்களை அரவணைத்துச் செல்வதற்குப் பதில் மற்றவரை வீழ்த்துகின்றோம்.

ஏனென்றால் அந்த வேக உணர்வுகள் கொண்டு செல்லும் பொழுது அருகில் வருபவனை அறியாது இருள் சூழ்ந்து கொள்கின்றது. அந்த இருள் சூழ்ந்த நிலைகள் வருவதைக் குறைப்பதற்குத் தான் அங்கே கருப்பாயி கருப்பணன் என்று வைத்து அந்த இருளை நீக்க வேண்டும் என்று காண்பிக்கின்றார்கள்,

ஆகவே ஐயப்பனின் அருள் கொண்டு மற்றவரையும் தன்னுடன் அரவணைத்துச் சென்று அவர்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுதல் வேண்டும்.
1.பதினெட்டாம் படி ஏறுவதற்கு முன் தான் அருகிலே இருப்போரை அரவணைத்து
2.அவர்கள் மேலே செல்லட்டும். அவர்கள் ஐயப்பனின் அருளைப் பெறட்டும் என்ற இந்த உணர்வின் தன்மை வரும் போது
3.நமக்குள் வரும் இருள் சூழும் நிலைகள் குறைந்து அமைதி கொண்டு நாம் அங்கே செல்ல போக முடியும்.

இதைத்தான் “வாழ்க்கையில் ஒழுங்குபடுத்தும் முறையாக… அங்கே காண்பிக்கப்பட்டு…!” அந்த உண்மையினுடைய நிலைகளை வளர்த்து பிறருக்குத் தீங்கு இல்லாத நிலைகள் மேலெ செல்லும் பொழுது அந்த மெய் ஞானி காட்டிய உணர்வின் தன்மையைப் பெற முடியும் என்று உணர்த்துகின்றார்கள்.

சாதாரண மக்களுக்கும் பக்தி என்றால் எது…? என்று காட்டி
1.மற்றோர்கள் உயர வேண்டும்.
2.அவர்கள் அருள் வாழ்க்கை வாழ வேண்டும்
3.அவர்களும் மெய் ஒளி காண வேண்டும் என்ற இந்த அரவணைப்பைக் கொண்டு செல்ல வேண்டும்.
4.அருள் ஞான உணர்வுகளைச் சீராக வளர்க்க வேண்டும் என்பதை அங்கே தலையில் சுமக்கச் செய்து
5.படி மீது ஏறுவதாக… அதாவது மேலே விண் செல்லும் மார்க்கத்தில் ஏறிச் செல்ல வேண்டும்…! என்று பதினெட்டாம்படியாகக் காட்டுகிறார்கள்.