உயிரின் இயக்க ஓட்டத்தின் இரகசியம்

Om - ohm

உயிரின் இயக்க ஓட்டத்தின் இரகசியம் 

மனிதன் தன் வாழ்க்கையில் ஒரு நல்லதைச் செய்ய வேண்டும் என்று எண்ணுவான். அதிலே குறை ஏற்பட்டால் குறையாகி விட்டதே..! இனி எதிர்காலம் என்ன ஆகுமோ…! என்று சலிப்பின் உணர்வை எடுத்துக் கொள்கின்றான்.

அந்தக் குறையான உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து விட்டால்
1.உயிரான விஷ்ணு அதன் தன்மை கொண்டு வரம் கொடுக்க
2.அதனுடைய நிலைகளை உயிரில் இருக்கும் காந்தம் (லட்சுமி) கவர
3.கவர்ந்தது சிருஷ்டியாகப் பிரம்மமாக உருவாக்கி விடுகின்றது,
4.நாம் கவர்ந்த அந்தக் குறையை தன் தாய் தந்தை சொன்னபடி மகன் அந்தக் கஷ்டத்தையே உருவாக்குகின்றான்.
5.(தாய் தந்தை – உயிரில் இருக்கும் வெப்பமும் அதனுடன் இணைந்த காந்தமும்) (மகன் – நடந்த நிகழ்ச்சியால் குறையான உணர்வுகள் உயிரிலே மோதும் சந்தர்ப்பம் “பிரம்மா”)
6.ஏனென்றால் இதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்வது நல்லது.

நமது காவியங்கள் ஒவ்வொரு நுணுக்க நிலைகளையும் அந்த மூலங்கள் எப்படி இயக்குகின்றது…? என்றும் தெளிவாகக் கூறுகின்றது.

ஆகவே நம்மை ஒரு அறிவாளியாக உருவாக்குவதும் நம்மை அறிவிலியாக அறிவை இழக்கச் செய்வதும் இதைப் போன்ற நிலைகள் தான். (சந்தர்ப்பத்தில் எது நம் உயிரிலே இணைகின்றதோ அது தான்)

உதாரணமாக எவ்வளவு பெரிய சக்தி வாய்ந்த பொருளாக இருப்பினும் அல்லது ஒரு சத்துள்ள சுவைமிக்க உணவாக இருப்பினும் விஷம் அதிலே கலந்து விட்டால் அந்த விஷமான சத்து பொருளின் சக்தியைச் சுத்தமாகவே இழக்கச் செய்து விடுகின்றது.

இதைப் போன்று தான் நாம் வேதனை என்ற நிலைகளை எடுத்துக் கொண்டால் உயிரான விஷ்ணு அதற்கு வரம் கொடுத்து விடுகின்றான். அங்கே உயிருக்குள் இணைந்தபின் “பிரம்மம்…!”
1.தன் தந்தை சொல்படி தட்டாது அதனை உருவாக்கி
2.வேதனை கொண்ட உணர்வின் செயலாக அதை இயக்கத் தொடங்கி விடுகின்றான்.
3.ஆகவே இவை இரண்டும் சேர்த்து ஒன்றாக இருக்கும் போது தான் ஈசன் என்று பெயர். இங்கே சிருஷ்டி.
4.தந்தையும் தன் குழந்தையும் இரண்டும் சேர்த்து இயக்கப்படும் போது பிரம்ம ரிஷி சிருஷ்டி… “ஈசா… ஓ..ம்… ஈஸ்வரா…!
5.நமது ஞானிகள் வைத்த காரண காரியப் பெயர்கள் சாதாரணமானவை அல்ல.

அதே சமயத்தில் சிருஷ்டி என்று உருவாவது அனைத்தும் அணுக்களாக உடலாக மாறுகின்றது. சிவத்திற்குள் அறையாக (ROOM) அமைத்து அதனை உருவாக்கி அதனைத் தன் இயக்கமாக வைத்துக் கொள்கின்றது. (உடலாக உருவாவதைச் சிவம் என்றார்கள் ஞானிகள்.)

நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் எண்ணி எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் நமக்குள் சதா சிவமாக உடலாக உருவாகிக் கொண்டே உள்ளது. வருவதை எல்லாம் சிவன் அரவணைத்துக் கொள்கின்றான்.

ஆனால் நாம் நல்லவைகளை எடுத்துக் கொண்டால் சிவனால் அதைத் தாங்க முடிகின்றது. தீமையானவைகளை எடுத்துக் கொண்டால் சிவன் ருத்ர தாண்டவம் ஆடுகின்றான் என்று அதையும் காட்டுகின்றார்கள்.

1.உதாரணமாக ஒரு குளிர்ச்சியான பொருளைக் கையில் கொடுத்தால் விறு..விறு…விறு…! என இருக்கிறது.
2.ரொம்ப நேரம் அதைக் கையில் வைக்க முடியவில்லை.
3.அதே சமயத்தில் ஒரு சுடும் பொருளை நாம் கையில் வைத்தாலும் சுரு…சுரு…சுரு…! என்கிறது
4.அதையும் நாம் நீண்ட நேரம் வைத்திருக்க முடிவதில்லை.

அதைப் போன்று தான் நாம் எண்ணியது அனைத்தும் உடலுக்குள் அது எது போய்ச் சேர்ந்தாலும் அதனதன் உணர்ச்சியைத் தூண்டத்தான் செய்யும்.

அந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் வேதனை என்று எண்ணினால் விஷம் தீண்டினால் எவ்வாறோ அதைப் போல நம் உடலுக்குள் நஞ்சாக விளையத்தான் செய்யும்.
1.அப்பொழுது உடலான சிவனால் அதைத் தாங்க முடியாது.
2.ஆனாலும் லட்சுமியுடைய (காந்தம்) நிலைகள் என்ன…?
3.உயிருக்குள் இருக்கும் காந்தம் எதையுமே கவர்ந்து கணவனுக்குச் (விஷ்ணு) செய்ய வேண்டிய தொண்டுகளைச் செய்கின்றது.

உயிருடைய இயக்கம் எதுவாக இருந்தாலும் தன் கணவருடனே இணைந்து விஷ்ணுவுடன் இணைக்கப்படும் போது அதிலே உருபெறும் குழந்தைகள் தான் நாம் சுவாசிக்கும் வேதனை வெறுப்பு கோபம் ஆத்திரம் எல்லாமே…!

ஆகவே
1.நம் உயிருக்குள் படும் உணர்வின் தன்மையில் மிகுந்த கவனம் தேவை.
2.நம் உயிரிலே எக்காரணத்தைக் கொண்டும் தீமைகள் சேராது பாதுகாக்க வேண்டியது நம் கடமையாகும்.

அதற்காக வேண்டித் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் மெய் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்து அதை உயிர் வழியாகச் சுவாசிக்கும் முறையும் இந்த உபதேச வாயிலாக உணர்த்துகின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் எத்தகைய நிலைகளைச் சந்திக்க நேர்ந்தாலும் “ஓ…ம் ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தியைக் கவரப் பழகிக் கொள்ளுங்கள்.

1.உங்கள் உயிர் அதை இயக்கி
2.சிருஷ்டி என்ற நிலைகளில் மெய் உணர்வுகளை உங்களுக்குள் பிரம்மமாக்கி
3.அதுவாகவே உங்களை மாற்றும்.

Leave a Reply