ஈஸ்வரபட்டரின் அனைத்து ஆற்றல்களையும் நீங்கள் பெற வேண்டும்…

eternal-sages-world

ஈஸ்வரபட்டரின் அனைத்து ஆற்றல்களையும் நீங்கள் பெற வேண்டும்… 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குள் (ஞானகுரு) பதிவு செய்த மெய் ஞானத்தின் உணர்வுகள் எண்ணிலடங்காதது. அதை எல்லாம் சொல் வடிவாக வெளிப்படுத்த வேண்டும் என்றால் இந்த மனித உடலுக்கே ஆயுள் பத்தாது.

அதை எல்லாம் படிப்படியாகக் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லிக் கொண்டு வருகின்றேன். பூரணமாகச் சொல்ல வேண்டும் என்றால் காலம் இல்லை. நேரமும் இல்லை.

ஆகவே அவ்வளவு பெரிய அண்டத்தின் உணர்வைப் பதிவு செய்த
1.குருநாதரின் அத்தனை ஆற்றல்களையும் நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்று
2.அவ்வப்பொழுது அந்தத் துணுக்குகளை எடுத்து
3.அவரின் நினைவைக் கூட்டி உணர்வை ஒளியாக்கி
4.ஒளியான உணர்வின் தன்மையை எண்ணமாக்கி அதைத்தான் உபதேசமாகக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு ரூபத்திலும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அவர் எனக்குள் பதிய வைத்த உணர்வின் தன்மைகளை நான் மீண்டும் நினைவு கொள்ளும் போது
1.எதை அவர் கற்றுணர்ந்தாரோ அந்த உணர்வின் தன்மையை
2.இந்த உடலையும் அவரே வழி நடத்துகின்றார்.
3.என் உடலுக்குள் வந்தல்ல.

விஞ்ஞான முறைப்படி நாடாக்களில் பதிவு செய்ததை மீண்டும் இயக்கச் செய்வது போல் குருநாதர் மூலம் எனக்குள் பதிவானதை நான் எண்ணும் போது அந்த உணர்வுகளே என்னை அது இயக்குகின்றது அந்த மெய் ஞானத்தின் உணர்வுகளையும் என்னைப் பெறச் செய்கின்றது.

அவர் எனக்குச் செய்தது போல்…
1.நீங்கள் எல்லோரும் மெய் ஞானம் பெற வேண்டும் என்று
2.அவர் செய்த உணர்வின் இயக்கத்தைத்தான் நானும் செய்கின்றேன்…!
3.அந்த உணர்வே தான் என்னை அவ்வாறு செய்விக்க வைக்கின்றது…!
4.ஆகவே குரு அருளை நாம் அனைவரும் பெறுவோம். குரு காட்டிய வழியில் நாம் செல்வோம்.

இந்த மனித வாழ்க்கையில் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவோம். நம் உடலையும் மனதையும் மகிழ்ச்சி பெறச் செய்வோம். நாம் பார்க்கும் அனைவரையும் மகிழச் செய்வோம்.

இந்த வாழ்க்கையில் மகரிஷிகள் உணர்வுடன் ஒன்றியே வாழ்வோம். பேரானந்த நிலை என்ற பெரு நிலைகளுடன் ஒன்றி வாழ்ந்திடும் நிலையை உருவாக்குவோம்.

அந்த மகா ஞானிகளுடன் ஒன்றி வாழும் நிலையை நாம் அனைவரும் பெறுவோம்.