என்னுடைய இச்சை எது…? கிரியையாக்கியது எதை…? ஞானமாகப் பேசச் செய்வது யார்…?

spiritual need

என்னுடைய இச்சை எது…? கிரியையாக்கியது எதை…? ஞானமாகப் பேசச் செய்வது யார்…?

ஜாதகம் பார்த்து…
1.நல்ல நேரம் கெட்ட நேரம் என்று படைத்து
2.நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளும் நிலைகளைத் தான் சிருஷ்டித்துக் கொள்கின்றோமே தவிர
3.தீமைகளை அகற்றிடும் ஞானத்தைப் பெறவேண்டும் என்று நாம் இச்சைப்படவில்லை.

மெய் ஞானிகளின் உணர்வைப் படைத்து அருள் உணர்வைப் பெறும் சந்தர்ப்பத்தை இணைத்து அறியாது வந்த இருளை நீக்கிட அன்று ஞானிகள் காட்டிய அருள் நெறியை அந்த விநாயகர் தத்துவத்தை யாரும் நுகர்ந்து பார்க்கக் கூட இல்லை.

1.நான் (ஞானகுரு) ஏதோ விளையாட்டிற்குச் சொல்கின்றேன் என்றோ
2.உங்களிடத்தில் நான் பெருமையைத் தேடிக் கொள்வதற்காக இதைச் சொல்கிறேன் என்றோ
3.யாரும் தயவு செய்து அப்படி எண்ண வேண்டாம்.

மெய் ஞானிகள் காட்டிய உணர்வுகள் உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக வேண்டும். அவர்கள் சென்ற வழியில் நீங்கள் செல்ல வேண்டும். “நீங்கள் நினைத்த மாத்திரத்தில்…!” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைத்து அறியாது வரும் இருள்கள் நீங்க வேண்டும் என்ற இந்த ஆசையை மனதில் வைத்துத்தான் உங்களிடம் (ஞானகுரு) பேசுகின்றேன்.
1.நான் அதை ஆசைப்படுகின்றேன் “இச்சா சக்தி”
2.எனக்குள் சேர்ந்த பின் அது “கிரியா சக்தி”
3.அது ஒளியாகச் சொல்லாக வெளி வரப்போகும் போது “ஞான சக்தி”

நான் எதை எண்ணுகின்றனோ அந்த ஆசை எனக்குள் கிரியையாகி அந்தச் சொல்லின் உருவமாக ஞானமாகின்றது. இதைக் கேட்டுணர்ந்த நீங்கள் மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறவேண்டும் என்று இச்சைப்பட்டால் உங்களுக்குள் அது கிரியையாகி அந்த ஞானத்தின் செயலாக உங்களுக்குள் அது வடிக்கும்… அதன் வழியில் செயல்படுத்தும்.

நாம் இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி என்று அந்தப் பாடலைப் பாடுகின்றோமே தவிர அந்த இச்சை என்ற நிலைகள் எதிலே தோன்றியது…? கிரியை என்ற நிலைகள் எதை வளர்க்கின்றது…? அந்த ஞானம் என்ற நிலைகள் எதை எதை இயக்குகின்றது…? என்று அறிய முயற்சிக்கவில்லை.

எந்த மெய்ப் பொருளைக் காண்பதற்கு அன்று மெய் ஞானிகள் இயற்கையின் ஆற்றலைத் தெளிவுற உணர்த்தி உள்ளார்களோ அதை நிச்சயம் நாம் பெற வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு அதைத்தான் காட்டினார். அவர் சென்ற வழியில் நானும் செல்ல வேண்டும் என்று இச்சைப்பட்டேன். அவர் உபதேசித்த உணர்வுகளை எனக்குள் கிரியை ஆக்கினேன். கிரியையின் உணர்வை நினைவாக்கும் போது அந்த ஞானத்தின் செயலாக
1.என் உடலை இயக்குகின்றது குருவின் உணர்வுகள் ஆக நானல்ல.
2.இப்பொழுது பேசுவதும் நானல்ல.

மாமாகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுத்த துன்பத்தை அகற்றிடும் உணர்வுகள் மீது இச்சைப்பட்டேன். அது எனக்குள் கிரியை ஆகி நஞ்சை முறியடிக்கும் ஞானமாக வெளிப்படுகின்றது. அந்தக் குருவின் சொல்லே உங்களுக்குள் இப்பொழுது ஊடுருவிச் சொல்கின்றது.

ஆகவே உங்கள் வாழ்க்கையில் தவறு செய்யாது நன்மையை எண்ணியே நீங்கள் செய்தாலும் அறியாது வந்த இருள்களை நீக்கி
1.மெய்ப் பொருளை நீங்கள் காண வேண்டும் என்று குரு காட்டிய வழியில் “நான் இச்சைப்படுகின்றேன்…!”
2.அதனால் தான் மணிக்கணக்கில் உபதேசிக்கின்றேன்.

Leave a Reply