அடிக்கடி உணர்ச்சி வசப்படுகின்றோம்… (TENSION) – அதை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?

tension-stress-relief

அடிக்கடி உணர்ச்சி வசப்படுகின்றோம்… (“TENSION”) – அதை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?

என் பிள்ளையை எப்படியெல்லாம் வளர்த்தேன்…. எல்லாம் நல்லது செய்தேன்….! “தொலைந்து போகின்றவன்… இப்படியெல்லாம் செய்கின்றானே…! என்று நாம் திட்டுகின்றோம்.

அப்போது இந்தப் பக்குவம் கெடப்படும் போது நாமும் பக்குவம் கெட்டுவிடுகின்றோம். அவனையும் பக்குவ நிலையிலிருந்து கெட வைத்து விடுகின்றோம்.

வியாபாரம் செய்கின்றோம். ஒருவர் ஒரு தடவை கேட்டவுடனேயே கடனைக் கொடுத்து விடுகின்றோம். ஆனால் சந்தர்ப்பம் கடன் கொடுத்தவரால் திரும்பக் கொடுக்க முடியாமல் போய்விடுகின்றது.

கடன் கொடுத்தவனால் பணத்தைக் கொடுக்க முடியவில்லை என்று சொன்னால் நமக்குள் என்ன ஆகின்றது…? “நான் கொடுத்தேன்… என்னை ஏமாற்றி விட்டான்…!” என்றால் இந்தப் பக்குவம் கெட்டுப் போய்விடுகின்றது.

கொடுத்தேன் ஏமாற்றி விட்டான்… கொடுத்தேன் ஏமாற்றி விட்டான்… கொடுத்தேன் ஏமாற்றி விட்டான்…! என்று இப்படியே சொல்லிக் கொண்டிருக்கும் போது நம் நல்ல குணங்கள் எல்லாம் மாறுகின்றது. பக்குவ நிலைகள் கெடுகின்றது.

1.நான் இதைச் செய்தேன்.., அதைச் செய்தேன்…! என்று சொல்கின்றோம்
2.அந்தப் பாட்டைப் பாடுகின்றோம்
3.ஆனால் (நல்ல) பக்குவத்தைக் கெடுத்து விடுகின்றோம்.
4பல நினைவுக்குச் சென்றுவிடுகின்றோம்

தோசையைச் சுட வேண்டும் என்றால் மாவை எல்லாம் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி வைத்து விடுகின்றோம். ஆனால் தீயை நிறைய எரிய விட்டுத் தோசையை ஊற்றினால் என்ன செய்யும்…? கருகிப் போய்விடும்.

குழிப் பணியாரம் சுடும் போது நெருப்பை அதிகமாக வைத்துவிட்டு மாவை ஊற்றினால் என்ன செய்யும்…? கீழே அடியில் பிடித்துவிடும். கருகிவிட்டால் சுவை இருக்காது.

ஆகவே அது அதற்கு என்ன பக்குவம் செய்ய வேண்டுமோ அந்த நிலை இல்லையென்றால் ருசி கெட்டுப் போய்விடுகின்றது.

அதைப் போன்று தான் கோபம் ஆத்திரம் வேதனை என்ற உணர்ச்சிகள் நமக்குள் அதிகமான பின் நம் பக்குவம் தவறிப் போய்விடுகின்றது. நம் சொல்லும் நயம் கெடுகின்றது.

1.பக்குவம் தவறுவதால் கார உணர்ச்சிகள் நம் உடலுக்குள் வந்து
2.நம் உடலிலுள்ள உறுப்புகளில் அதே கார உணர்ச்சியைத் தூண்டும் இரத்தமாக மாறுகின்றது.
3.இரத்தத்தில் கார உணர்ச்சிகள் வந்தவுடனே எல்லா அணுக்களும் கெடும். பக்குவம் தவறிப் போகும்.

எல்லோருக்கும் நல்லதைச் செய்கின்றோம்… பின்னாடி நான் இதைச் செய்தேன் அதைச் செய்தேன் என்று சொல்கின்றோம்.

செய்த பிற்பாடு நாம் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் பக்குவம் கெட்டுத்
1.திட்ட ஆரம்பித்து விடுகின்றோம்.
2.அல்லது குறை கூற ஆரம்பித்து விடுகின்றோம்
3.இந்தக் குறையைத்தான் வளர்க்கின்றோம்.

அதே சமயத்தில் நோயாளியைக் காப்பாற்ற எண்ணுகின்றோம். அந்த நோயின் தன்மையோ வேகம் அதிகமாக இருக்கின்றது.

அதைக் கேட்டுக் கொண்ட பின் தவறிப் போய் பாசத்தால் “உனக்கு இப்படி ஆகிவிட்டதே…!” என்று நமக்குள் அவரின் நோயின் உணர்வைச் சேர்த்துக் கொண்டோம் என்றால் அந்தப் பக்குவம் தவறிவிடுகின்றது. அதே நோய் நமக்குள்ளும் வந்து விடுகின்றது.

மற்றவரைக் காப்பாற்ற வேண்டும், அப்படியே நம்மையும் காப்பாற்ற வேண்டும். அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் இரத்த நாளங்களில் படர வேண்டும். எங்கள் உடலிலே உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் எல்லாம் பெற வேண்டும் என்று பக்குவப்படுத்தி அந்த வலுவைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின் நோயாளியின் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்ந்து அவர் நோயிலிருந்து நீங்கி நன்றாக வேண்டும் என்று அந்த நல்ல வாக்கினை அவரிடம் பதிவு செய்ய வேண்டும்.

ஏனென்றால் அவரால் முடியவில்லை. அப்பொழுது நமக்குள் அருள் உணர்வுகளை விளைய வைக்கின்றோம், சொல்லை உணர்வாக்குகின்றோம். அருள் ஒளியாகப் பாய்ச்சுகின்றோம். அந்த உணர்ச்சியைத் தூண்டுகின்றோம். நோயாளி அதைப் பெறுகின்றார்.

உதாரணமாக நம்முடைய நண்பன் சந்தர்ப்பத்தால் வேதனைப்படுகின்றான். என் பையன் இந்த மாதிரிச் செய்து விட்டான். அந்த மாதிரிச் செய்து விட்டான் என்று சொல்லும் போது அந்தச் சந்தர்ப்பம் நண்பருக்குள் வேதனை உருவாகின்றது.

ஆனால் அந்த நண்பனை நாம் சந்திக்கும் சந்தர்ப்பம் நமக்கு என்ன செய்கின்றது..? அவர் வேதனையைக் கேட்டவுடனே அதே சந்தர்ப்பம் நமக்குள்ளும் வேதனையை உருவாக்குகின்றது.

நாம் சந்திக்கும் சந்தர்ப்பத்தில் தான் இவ்வாறெல்லாம் நடக்கின்றது. பல பல நன்மைகளை நாம் செய்தாலும் பரிபக்குவ நிலையை நாம் பெறத் தவறினால் இந்த வாழ்க்கையில் தேய் பிறையாகி மீண்டும் கீழே தான் போவோம்.

சர்க்கஸில் வேலை செய்பவர்கள் பல விதமான விளையாட்டுகளைச் செய்வார்கள். பார் (BAR) விளையாட்டில் இத்தனாவது நூலில் வருகின்றார்கள் என்று தெரிந்து அதைத் தாவிப் பிடித்துவிடுகின்றார்கள்.

தன்னுடைய வேகத்தில் என்ன செய்கிறார்கள்..? நிற்பவர்களையும் அந்தச் சமப்படுத்தும் நிலை கொண்டு (BALANCE செய்து) தூக்கி மேலே கொண்டு போய்விடுகின்றார்கள்.
1.அதிலே சிறிது பக்குவம் தவறி விட்டால் கீழே தள்ளி விட்டு விடும்.
2.சர்க்கஸில் விளையாடுகின்ற மாதிரிதான் நம்முடைய வாழ்க்கை.

எதனுடைய உணர்வை எடுத்தாலும் இந்தப் பக்குவம் தவறினால் நம் நல்ல குணங்கள் வீழ்ந்து போகும். வீழ்ந்த பிற்பாடு நாம் நல்லது செய்வது என்பது முடியாது போய் விடுகின்றது.

அடுத்து நல்ல செயலை வளர்க்க முடிவதில்லை. எல்லாம் நல்லது செய்தேனே… எனக்கு இப்படியெல்லாம் வந்து விட்டதே…! என்று இப்படித்தான் சொல்கின்றோம்.

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் பிறர்படும் துயரங்களையோ அல்லது பிறர் செய்யும் தவறுகளையோ பார்த்தால் “ஈஸ்வரா…!” என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எடுக்க வேண்டும்.

எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய ஜீவாத்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணினால் அந்த வேகத்தைத் தணித்து விடுகின்றோம். நல்ல சிந்தனை வருகின்றது.

1.கோபமோ வேதனையோ எதனால் நமக்கு வருகின்றது என்று சிந்தித்து
2.அதைத் தடுத்து நிறுத்தியவுடனே
3.நல்ல உணர்வுகள் நமக்குள் வருகின்றது.
4.சாந்தம் வருகிறது, விவேகம் வருகின்றது. அது நல்லதாகின்றது.

ஆக கோபப்படுவோரின் உணர்வுகளையும் வேதனைப்படுவோரின் உணர்வுகளையும் நமக்குள் சேராது விவேகத்தின் தன்மை கொண்டு அவனுக்குள் மாற்றும் சக்தியாக வருகின்றது. அப்பொழுது மற்றவர்கள் கஷ்டம் நமக்குள் வராது.

அதற்காகத்தான் பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாமல் “பரி பக்குவ நிலை பெற எனக்கு அருள்வாய் ஈஸ்வரா…!” என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டும்படிச் சொல்கிறோம்.

இந்தப் பழக்கம் வந்துவிட்டால் நம் மனதில் எப்பொழுதும் அமைதியும் சாந்தமும் குடிகொள்ளும்…!

Leave a Reply