தீமைகளை எரித்து ஒளியாக மாற்றிய மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் நுகர்ந்தால் “நம் உணர்வுகளும் ஒளியாக மாறும்”

Eternity

தீமைகளை எரித்து ஒளியாக மாற்றிய மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் நுகர்ந்தால் “நம் உணர்வுகளும் ஒளியாக மாறும்”
நான் (ஞானகுரு) ஒன்றும் அறியாதவன். மூன்றாவது வகுப்பு கூட முழுமையாகப் படிக்கவில்லை. இத்தனை பேசுகின்றேன். நான் எங்கிருந்து பேசுகின்றேன்…!
1.புத்தகங்களைப் படித்ததும் இல்லை.
2.படிக்க விரும்பவும் இல்லை.
3.படித்தாலும் அது அர்த்தம் புரிவதில்லை.

திருவள்ளுவர் திருக்குறளைப் பாடியிருக்கின்றார் என்றால் அதைப் பற்றிப் படித்தவர்களுக்குத் தெரியும். படித்தால் எனக்கு என்ன அர்த்தம் தெரியும்…!

இராமயாணத்தை கவியாகப் பாடியுள்ளார்கள். கவிகள் பாடியவர்களுக்கு அல்லது கவி தெரிந்தவர்களுக்கு அதைப் பற்றி விளக்கம் சொல்ல முடியும்.

ஒருவர் இராமயாணத்தில் ஒன்றைச் சொல்வார். இன்னொருத்தர் அதை படித்து வியாக்கியானம் கொடுத்தால் இவருடைய இராமயாணம் வேறு விதமாக இருக்கும்.

படித்த உணர்வின் நிலைகள் அவர் உணர்வுடன் ஒன்றி செயல்படும் போது அந்த உணர்வுக்கொப்பத் தான் உணர்வின் எண்ணங்களும் செயல்களும் வருவது.

ஆனால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்து விண்ணுலகம் சென்ற முதல் மனிதனான அகஸ்தியனின் உணர்வலைகளை எனக்குள் பதிவாக்கினார்.

அகஸ்தியர் தன் தாய் கருவில் பெற்ற சக்தியின் துணை கொண்டு வானியல் புவியியல் உயிரியல் அடிப்படையில் அவர் கண்டுணர்ந்த பேருண்மைகளை என்னையும் அறியும்படி அதை உணரும்படிச் செய்தார்.

அகஸ்தியர் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான நிலைகளை குருநாதர் எமக்குக் காட்டினார்.

அந்த அகஸ்தியர் உணர்வைக் கவர்ந்தவர்கள் அனைவரும் மகரிஷிகளாக சப்தரிஷி மண்டலங்களாகச் சுழன்று கொண்டிருப்பதையும் காட்டி அந்தச் சக்திகளைப் பெறும் பாக்கியத்தை எனக்கு ஏற்படுத்தினார்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வுகள் இந்தப் புவியில் படர்ந்துள்ளது. அதை மனிதர்கள் நாம் நுகரும் திறன் பெற வேண்டும். நமக்குள் அதை வளர்க்க வேண்டும்.

அதனின் உணர்வுகள் வலு பெற்ற பின் அறியாது வந்த தீமைகளை அது கரைத்து விடும்.

விறகில் நெருப்பு வைக்கப்படும் போது அந்தக் கட்டைக்குள் இருக்கும் எண்ணெய்ச் சத்து எரிந்து கட்டையைக் கருக்கி விட்டு ஒளியாக மாற்றுகின்றது.

இதைப் போல தீமையான உணர்வுக்குள் இருக்கும் வீரிய சக்தியை எரித்து ஒளியாக மாற்றிக் கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள் மெய் ஞானிகள். எத்தகைய தீமைகள் வந்தாலும் அதைக் கருக்கி விட்டு ஒளியின் தன்மை மாற்றிக் கொண்டவர்கள்.

அப்படிப்பட்ட மெய் ஞானியின் உணர்வை நமக்குள் இணைத்து விட்டால் அது தன்னிச்சையாக தீமையான உணர்வுகளை எரி பொருளாக்கி ஒளியின் சக்தியாக மாற்றும் தன்மை வருகின்றது என்ற நிலையை நேரடியாகக் காட்டுகின்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

நான் (ஞானகுரு) சொல்வதெல்லாம் உங்களுக்கு அதிசயமாக இருக்கும்.

நான் சொன்னதையெல்லாம் நீங்கள் பார்க்கும் போது என்னிடம் சொல்வீர்கள்.
1.சாமி இதெல்லாம் நான் பார்க்க முடிந்தது…!
2.”என்னால் தீமையைப் போக்க முடிந்தது…!” என்ற
3.அந்த மகிழ்ச்சியான நிலைகள் உங்களுக்குள் வரும்.

Leave a Reply