மகரிஷிகளை நாம் தேடிச் சென்றால் மகிழ்ச்சி நம்மைத் தேடி வரும் – அனுபவத்தில் பார்க்கலாம்

Divine Sages Light

மகரிஷிகளை நாம் தேடிச் சென்றால் மகிழ்ச்சி நம்மைத் தேடி வரும் – அனுபவத்தில் பார்க்கலாம்

 

வீட்டை எவ்வளவு சுத்தமாக வைத்திருந்தாலும் அதற்குள் மீண்டும் மீண்டும் தூசிகள் வந்து கொண்டே தான் இருக்கும். அதே மாதிரித்தான் அன்றாட வாழ்க்கையில் குறைகள் இல்லாத மனிதர்கள் கிடையாது.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வுகள் நம் மீது மோதும். அதற்குத்தக்க நம் சொல்லும் செயலும் மாறும்.

இருந்தாலும் சந்தர்ப்பத்தால் நம் மீது மோதுவது தீமையான உணர்வுகளாகவே இருந்தால் அதைச் சரியான முறையில் அகற்றத் தெரியவில்லை என்றால் வாழ்க்கை இருள் சூழ்ந்துவிடும்.

சிந்தனை குறைந்த செயல்களை நம்மைச் செய்ய வைத்துவிடும். பின் நல்லதை நாம் தேடிக் கொண்டு தான் இருக்க வேண்டும்.

ஆகவே அத்தகைய இருளை நீக்க வேண்டும் என்றால் ஓட்டையாக (குறைபாடு) உள்ளதை… “அதை உடனே தட்டியெறிந்து விட்டு” முழுமையான நிலைகளில் செயல்பட்டால்தான் சரியாகும்.

ஒரு பாத்திரத்தில் ஓட்டை உடைசல் அடைக்கிற மாதிரி அப்பொழுதுக்கு மட்டும் ஏதாவது சாமியைப் பார்ப்பதோ மந்திரத்தைச் செய்தோ மாயங்கள் செய்தோ சாமியாரைப் பார்த்தோ செய்வோம்..,

1.“பின்னாடி எல்லாம் சரியாகிப் போய்விடும்” என்றால்

2.எல்லாம் கழன்று ஓடி விடும்.

அந்த மாதிரி இல்லாதபடி நல்லதைக் காக்கும் நிலையாக இருளைப் போக்கும் நிலையாக மெய் ஒளியின் தன்மையை நமக்குள் வளர்ப்பதற்கு அந்த மகரிஷிகளின் ஆற்றல் மிக்க சக்திகளைப் பெறவேண்டும்.

நல்லது வரும் பொழுது மகரிஷிகளை எண்ணுகின்றோமோ இல்லையோ தீமைகள் வரும் சமயம் அதை மாற்ற உடனடியாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நம் நினைவின் ஆற்றலை மகரிஷிகளின் பால் மேல் நோக்கிச் செலுத்த வேண்டும்.

இந்தப் பழக்கம் வந்துவிட்டாலே கெட்டது வரும் சமயம் எல்லாம் மகரிஷிகளின் எண்ணங்களும் சேர்ந்தே வரும். அப்பொழுது கெட்டதை நிறுத்திவிட்டு மகரிஷிகளின் உணர்வை வலு சேர்த்தால் நம் செயல் ஞானிகளின் செயலாக மாறும்.

கெட்டது கெட்டதும் அல்ல நல்லதும் நல்லதல்ல. எதுவாக இருந்தாலும் அதற்கும் மகரிஷிகளின் அருள் ஒளியைக் கலக்கும் பக்குவத்திற்கு நாம் வருதல் வேண்டும்.

மகிழ்ச்சி நம்மைத் தேடி வரும். அனுபவத்தில் பார்க்கலாம்.

Leave a Reply