என் தாய் தந்தைரை விண் செலுத்திய நிகழ்ச்சி

ursa-major-big-dipper-polaris

என் தாய் தந்தைரை விண் செலுத்திய நிகழ்ச்சி

நம் முன்னோர்கள் மூதாதையர்களை (குலதெய்வங்களை) விண் செலுத்தாதபடி சப்தரிஷி மண்டலத்தின் ஆற்றலைப் பெற முடியாது. அது நடக்காத காரியம்.

1.எவ்வளவு தான் நல்ல சக்திகள் பெற்றிருந்தாலும்
2.நமக்கு என்று ஒரு தூதுவர் அங்கே போயிருக்க வேண்டும்.
3.அது இல்லை என்றால் நாம் பெற முடியாது.

முந்தி மகரிஷிகள் அங்கே சென்றார்கள். அவர்கள் வாழ்ந்த காலத்தில் எடுத்துக் கொண்ட நிலையை நம் குருநாதர் பெற்றார். அவர் காட்டிய வழியில் என் அம்மா அப்பாவையும் விண் செலுத்தும்படிச் சொன்னார். அதைச் செய்தேன்.

அதைச் செய்யாத வரைக்கும் எனக்கு அந்தச் சக்தி கிடைக்கவில்லை. என் அம்மா அப்பா இறந்த பிற்பாடு அந்த உடலின் நிலைகளை நீ எப்படி எப்படிச் செய்ய வேண்டும் என்னைப் பக்குவப்படுத்தினார்.

என் அப்பா இராஜபாளையத்தில் இருந்தார். நான் அங்கே அவரைச் சந்திக்கப் போனவுடனே “நீ… சீக்கிரம் வீட்டை விட்டுப் புறப்படு…” என்றார்.

ஏன் இப்படிக் குருநாதர் சொல்கிறார் என்று எனக்கு அர்த்தமாகவில்லை. ஏனென்றால் என் அப்பா நன்றாக உடல் நலத்துடன் தான் இருந்தார்.

“நீ சீக்கிரம் புறப்படு…” என்றே சொல்லிக் கொண்டிருந்தார் குருநாதர். நீ ஊருக்கெல்லாம் ஞானத்தைச் சொல்ல வேண்டும் வீட்டில் வந்து நீ சொந்தமாக இருக்க வரவில்லை “நீ நட…” என்கிறார் குருநாதர்.

கிளம்பி வந்துவிட்டேன்.

நீ அங்கே இருந்தாய் என்றால் உன் அப்பா உன் மேல் பாசமாக இருந்தார். வெளியில் வந்தால் அந்த உயிரான்மா உடனடியாக உன்னிடம் தான் வரும்.

நான் வீட்டை விட்டுப் புறப்பட்டவுடன் என் அப்பா.., எங்கடா.. அந்தச் “சாமியார் பயலை…?” என்று தான் என்னைக் கேட்டிருக்கின்றார்.

சாமியார் பயல் எல்லாவற்றையும் இந்த மாதிரிச் செய்துவிட்டு எங்கே போனான்…? பைத்தியத்துடன் சேர்ந்து அவனுக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று சொல்லி வேகமாகக் கேட்டுள்ளார்.

அவர் அருகில் இருந்தோம் என்றால் உடனடியாக என் உடலுக்குள் வந்துவிடுவார் என்பதற்காகத்தான் குருநாதர் எம்மை வீட்டை விட்டு “உடனடியாகப் புறப்படு” என்று சொல்லியுள்ளார்.

நடந்து போகப்படும் பொழுது இதற்கு மத்தியிலே என் அப்பாவின் ஆன்மா வெளியில் வருகின்றது.

அப்பொழுது அது தெரிந்தவுடனே அதற்கு வேண்டியதுகளைச் செய்து அந்த உயிரான்மாவை அங்கேயே உட்கார்ந்து அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று இணைக்கச் செய்தேன்.

உன் ஊருக்குச் சென்று போய்ப் பார் என்று குருநாதர் சொன்னார். அப்புறம் அப்பா இறந்தார் என்று சொன்னேன்.

உங்களுக்கு எப்படித் தெரிந்தது என்றார்கள்.

ஆன்மா வெளியில் வந்தது தெரிந்தது என்றேன்.

பழனிக்கு வந்து என் பையன் தண்டபானியைக் கூப்பிட்டு இராஜபாளையம் சென்றேன். என் மனைவி முதலில் அங்கே சென்றது.

உன் அப்பாவின் ஆன்மா உடலை விட்டுப் பிரியும் நேரம் அங்கே இருக்கக்கூடாது. ஏனென்றால் நீ அந்த அளவிற்கு மனப் பக்குவம் பெறவில்லை. ஆகையினால் “நீ விலகி இருப்பது தான் நல்லது” என்றார் குருநாதர்.

இதே மாதிரித்தான் “என் அம்மா உடலை விட்டுப் பிரியும் சமயமும்” நான் அருகில் இல்லை.

என் அம்மா உடல் நலிவுற்றதைப் பார்க்கச் சென்றிருந்தோம்.

அப்பொழுது என் மனைவியிடம் என் அம்மா இரண்டு கோழி முட்டைய வறுத்து வேக வைத்துக் கொஞ்சம் மிளாகய்த் தூளும் உப்பும் வைத்து எனக்குக் கொடு என்று கேட்டது.

அந்த நேரத்தில் என் அம்மாவால் சாப்பிட முடியாது. ஆனாலும் அந்த உணவின் மேல் இருந்த ஆசை விடவில்லை.

குருநாதர் சொன்னார். உங்கள் அம்மாவால் சாப்பிட முடியாது. ஆனால் கோழி முட்டையைப் பிரியமாகச் சாப்பிட்டிருக்கின்றார்கள். இந்தச் சமயத்தில் ஆன்மா பிரிந்தது என்றால் வேறு எங்கும் போகாது.

அதே சமயத்தில் உன் மீது பிரியமாக எண்ணியது. உன்னைக் “கடவுளின் அவதாரம்” என்று எண்ணுகிறது என்று சொல்கிறார் குருநாதர். ஆனாலும் அந்தக் கடைசி ஆசை கோழி முட்டை மீது செல்கிறது. அவர்களை அங்கே விட்டு விடக்கூடாது என்று சொல்கிறார்.

அன்றைக்கு தாரமங்கலத்தில் கூட்டுத் தியான நிகழ்ச்சி என்று ஏற்பாடு செய்திருந்தார்கள். நான் கலந்து கொள்வதாகவும் எல்லோருக்கும் தகவல் ஏற்கனவே சொல்லி வைத்திருந்தார்கள்.

அதன்படி நான் அங்கே சென்றுவிட்டேன். அங்கே தியானமிருக்கும்போது என் தாயின் ஆன்மா வெளி வருகின்றது. அங்கே இருந்த பலரும் அதைப் பார்த்தார்கள். அந்த ஆன்மாவின் உருவம் தெரிந்தது.

அப்பொழுதே அதற்குண்டான நிலைகளைச் செய்து என் தாயின் உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து பிறவா நிலை என்ற பெரு நிலை பெறவேண்டும் என்று உந்திச் செலுத்தினேன்.

சேலத்தில் சொல்லி வைத்திருந்தேன். ஏதாவது தந்தி வந்தால் உடனடியாகத் தாரமங்கலத்திற்குத் தகவல் கொடுக்கும்படி சொல்லியிருந்தேன்.

இப்படி என் தாய் தந்தை இரண்டு பேரும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்த பிற்பாடு தான்
1.அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து சில நுண்ணிய அலைகளை நான் பெற முடிந்தது.
2.அதை எடுத்து எல்லோருக்கும் என்னால் கொடுக்க முடிந்தது.
3.இல்லாமல் போனால் இந்த அளவிற்குத் தைரியமாக நான் உங்களிடம் சொல்ல முடியாது.

என் தாய் கடவுளாக தெய்வமாக இருந்து என்னைக் காத்தது. குருவாகவும் இருந்து நல் வழி காட்டியது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இதையெல்லாம் தெளிவாக எடுத்து உரைத்ததால் அதன் வழியில் தாய் தந்தையின் உயிரான்மாக்களை விண் செலுத்த முடிந்தது.

1.அவர்களை விண்ணுக்குச் செலுத்திய பின்பு தான்
2.நான் அந்தச் சக்திகளை அதிகமாகப் பெற முடிந்தது.

நீங்களும் உங்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்கச் செய்ய வேண்டும். செலுத்தினீர்கள் என்றால் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற முடியும்.

Leave a Reply