“என் சொல் செயல்” உங்களை நல்லதாக்குவது போல் – “உங்கள் சொல் செயல்” மற்றவர்களை நல்லதாக்க வேண்டும்
இந்தப் பூவுலகில் அகஸ்தியன் சர்வ தீமைகளையும் அகற்றி சர்வ தீமைகளையும் அகற்றிடும் பேரருளைப் பெற்று நமது பூமியின் “துருவ நிலையின் நேராக நின்று.., துருவ நட்சத்திரமாக.., வடகிழக்காக அமைந்துள்ளான்”.
துருவ நட்சத்திரம் எத்தகையை விஷத் தன்மைகளானாலும் தீமைகளானாலும் அதையெல்லாம் ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டயுள்ளது.
அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியைக் கவரும்படி செய்தார் நமது குருநாதர். துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அருள் உணர்வுகளை நுகரச் செய்து.., என் உடலுக்குள் வந்த.., “தீமைகளை மாற்றியமைக்கும்” முறையினைச் சொன்னார்.
அதன் வழி என் வாழ்க்கையில் வந்த தீமைகளை நீக்கினேன். அவர் எனக்குக் காட்டிய அதே வழியில் குரு கொடுத்த அருள் உணர்வுகளை உங்களிடம் பதிவு செய்துவிட்டேன்.
1971ல் வைகுண்ட ஏகாதசி அன்றுதான் நம் குரு ஒளி உடல் பெற்ற நாள். தீமைகளை வென்று சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்தார்.
அவரைப் போலவே நீங்களும் தீமைகளை அகற்றுங்கள். இந்த உடலுக்குப் பின் ஒளியாக மாற்றுங்கள். உங்களால் முடியும்.
நான் (ஞானகுரு) ஒன்றும் உங்களை மாற்ற முடியாது. “சாமி மாற்றுவார்.., சாமியார்..,” என்று நான் சொன்னால் உங்களை ஏமாற்றுவதாகத் தான் அர்த்தம்.
ஏனென்றால்.., நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் தான் அதை அணுவாக மாற்றுகின்றது.
“நீங்கள் எல்லோரும் அருள்ஞானம் பெறவேண்டும்” என்று எண்ணும் பொழுது தான் நானும் அதைப் பெறுகின்றேன்.
இதைப் போல நீங்களும் “உலக மக்கள் அனைவரும்” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறவேண்டும் என்று ஏங்கினால் நீங்களும் பெறலாம்.
ஆகவே, குருநாதர் காட்டிய அருள் வழியை நாம் பின்பற்றுவோம். குருநாதர் காட்டிய அருள் வழியைப் பின்பற்றி நடக்கும்போது நாம் எதைச் செயல்படுத்த வேண்டும்?
1.நான் ஒருவரைப் பார்த்தேன்…, அவரின் தீமைகளைக் கேட்டேன்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்றேன்
3.அவர் நன்றாக ஆக வேண்டும் என்று சொன்னேன்.
4.”அவர்கள் நன்றாக ஆனார்கள்…,” என்று இந்த சந்தோஷம் உங்களுக்கு வரவேண்டும்.., “வரும்”.
இதைத்தான் நாம் செய்ய வேண்டும்.
அதை விட்டுவிட்டு “என்னைத் திட்டிக் கொண்டேயிருக்கின்றான்.., இரு.., நான் அவனைப் பார்க்கிறேன்.., அவனைத் தொலைத்து விடுகிறேன்” என்ற நிலை வரக்கூடாது.
அதற்குப் பதிலாக அந்த அருள் உணர்வை நான் பெற்றேன். “என்னைத் திட்டியவர்கள் தீமையிலிருந்து விடுபட்டனர்…, அவர்கள் நல்லவர்களாக ஆனார்கள்” என்று இப்படிப்பட்ட அனுபவமாக இருக்க வேண்டும்.
அதைப் போல நோயுற்றவர்களாக இருந்தால்.., “என் பார்வையால் சொல்லால் மூச்சால் அவர்கள் நோய் விலகியது” என்ற நிலைக்கு நீங்கள் வளர வேண்டும்.
இதை நீங்கள் ஒரு பழக்கத்திற்கு கொண்டு வரவேண்டும்.
குரு எனக்கு இதைத்தான் காட்டினார். அதைத்தான் நான் உங்களுக்கு உணர்த்துகின்றேன். பதிவாக்குகின்றேன்.
“இதைச் செயல் வடிவுக்குக் கொண்டு வருவது” உங்களுடைய பொறுப்பு. ஆகவே,
பகைமையை மாற்றுங்கள்.
பண்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.
அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.
அரவணைக்கும் சக்தியை உங்களுக்குள் கூட்டிக் கொள்ளுங்கள்.
பேரன்பை உருவாக்குங்கள்…, பேரிருளை மாற்றுங்கள்.
பேரன்பைக் கூட்டினால் நமக்குள் இருள் என்ற நிலைகள் வராது தடுக்க முடியும்.
நாமெல்லாம் அருள் வழியில் செல்வோம். இனி விஞ்ஞான உலகில் வரும் கடும் விஷத்தன்மைகளிலிருந்து மாற்றியமைப்போம் என்று உறுதி கொள்ளுங்கள்.