நாம் வேதனைப்பட்டு விடும் மூச்சலைகள் வீட்டிற்குள் படர்வதால் பாதிப்புகள் ஏற்படுமா…?

maharishi

நாம் வேதனைப்பட்டு விடும் மூச்சலைகள் வீட்டிற்குள் படர்வதால் பாதிப்புகள் ஏற்படுமா…?

1.நம்முடைய மூச்சலைகள் என்ன செய்கின்றது..?

நம் குடும்பத்திலுள்ளவர்கள் வேலைகள் நிமித்தமாக வெளியிலே செல்லும் பொழுது “பிறருடைய கடுமையான உணர்வலைகள்” அவர்களுக்குள் தாக்கப்படும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றது.

அதனால் அவர்கள் நல்ல உணர்வின் எண்ணங்களையும் அது மாற்றி குடும்பத்திற்குள் ஊடுருவி.., வீட்டிற்குள் “தீய வினைகளாக” உண்டாக்கி விடுகின்றது.

நாம் வெறுப்பான உணர்வுகளை எடுத்துக் கொண்டு வீட்டிலே நடமாடும் பொழுது ஒருவருக்கொருவர் எதிர்க்கும் உணர்வுகள் தோன்றுகின்றது.

பின், வெறுப்பான உணர்ச்சிகளை நாம் மூச்சால் வெளியிடும் பொழுது சுவர்களிலும் தரைகளிலும் பதிவாகிவிடுகின்றது. அதே சமயம் பூமியின் ஈர்ப்பலைகளில் நாம் இருப்பதால் இங்கே நமக்கு முன் உள்ள காற்று மண்டலத்திலும் பதிந்துவிடுகின்றது.

அப்படிப் பதிந்தபின்.., “நம் உடலிலிருந்து வந்த.., இந்த வீட்டிலே வீசும் மணத்தைக் கொண்டு” ஒருவருக்கொருவர் கடுகடுப்பாகப் பேசும் நிலைகளையும் அதனால் வெறுப்படையும் எண்ணங்களையும் நாம் தோற்றுவித்து விடுகிறோம்.

அப்பொழுது நம் காரியங்கள் தடைபடுகின்றது. நாம் எண்ணிய நல்ல காரியங்கள் “இப்படித் தடைபடுகின்றதே..,” என்று வேதனையும் சஞ்சலமும் பட்டுக்கொண்டே இருப்போம்.

ஆக, நாம் எதற்குள் இருக்கின்றோம்?

இப்படி எடுத்துக் கொண்ட தீமையான உணர்வுகளுக்கு மத்தியில் தான் இருக்கின்றோம்.

ஆக, நம் வீட்டிற்குள்ளேயே அதை உருப்பெறச் செய்து அந்த உணர்வையே.., “மீண்டும் மீண்டும் சுவாசித்து.., நமக்குள் அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோம்”.

பூமிக்கு வெளியிலே விஷத்தின் ஆற்றல் இருக்கின்றது. பூமி விண்ணிலிருந்து வரும் ஆற்றல்களைக் கவர்ந்து வெளிப்படுத்தினாலும் அந்த உணர்வின் தன்மைகள் பூமிக்குள்ளும் சேர்கின்றது.

இதைப் போன்றுதான் சந்தர்ப்பத்தால் நாம் சுவாசிக்கும் உணர்வுகள் நம் உடலுக்குள்ளும் இயக்கிவிடுகின்றது. நம் வீட்டிற்குள்ளும் பரவச் செய்து.., “நமக்கு நாமே தண்டனை விதித்தது போன்று” ஆகிவிடுகின்றது.

இந்த நிகழ்ச்சிகளை நம் குடும்பத்தளவு இந்த ஆத்ம சுத்தி செய்து இதைப் போக்க வேண்டும்.

2. கூட்டுத் தியானத்தின் மூலம் வீட்டிற்குள் மகிழ்ச்சியான அலைகளைப் பெருக்க முடியும்

இதைப் போன்று நம்மையறியாமலேயே சேரும் தீமையான உணர்வலைகளை நாம் மாற்ற வேண்டும் என்றால் தீமைகளை வென்ற அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துக் கொண்டு உங்கள் எண்ணத்தின் வலுவை உங்கள் வீட்டிற்குள் பரவச் செய்வதற்கு வாரத்தில் ஒரு நாள் கூட்டுத் தியானம் இருங்கள்.

உங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவருமே அருள் ஒளிகளைப் பாய்ச்சுங்கள். வீட்டிலே படரச் செய்யுங்கள்.

உங்கள் குலங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உயிராத்மாக்களை எண்ணி “அந்த உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலக்க வேண்டும். அவர்கள் என்றென்றும் அழியா ஒளி சரீரம் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணிப்பாருங்கள்.

அதற்குப் பின் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் சக்தியை நாங்கள் பெறவேண்டும்”. இது எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று உங்கள் உடலுக்குள் இணைத்து உங்கள் உடலைத் தியானித்து விட்டு உங்கள் மூச்சலைகளைப் படரவிடுங்கள்.

நாங்கள் குடியிருக்கும் இந்த வீடு முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். தரைகளிலும்.., சுவர்களிலும்.., மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும்.

எங்கள் வீட்டிற்கு வருவோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று எல்லா நலமும் வளமும் பெறவேண்டும் என்று “உங்கள் உணர்வின் ஒளிகளைப் பாய்ச்சுங்கள்”.

இந்த உணர்வாலே.., “இழுக்கப்பட்ட அந்தச் சக்திகள்” உங்கள் மூச்சலகள் மூலமாக வீட்டிற்குள் பதிவாகின்றது.

அதே சமயம் தீமை செய்யும் உணர்வலைகள் எதிர்பாராமல் வீட்டிற்குள் பதிவானாலும் அதை மாய்க்க இது உதவும்.

இவ்வாறு ஒவ்வொரு நிமிடமும் நம் வீட்டையும், உடலையும், ஆன்மாவையும் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கொண்டு சுத்தப்படுத்தியே ஆக வேண்டும்.

தினசரி, நாம் நம்மைச் சுத்தப்படுத்துகின்றோம், உடைகளைத் தூய்மைப்படுத்துகின்றோம், வீட்டையும் தூய்மைப்படுத்துகின்றோம். இதுவெல்லாம் “புறத்தால் செய்வது”

ஆனால், “அகத்துக்குள்” வரும் தீமைகளைப் பற்றித் தெரியாமலேயே இருக்கின்றோம். அதை அகற்றவில்லை என்றால் நமக்குள் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் அறியாமலேயே தான் இருக்கின்றோம்.

ஆகவே, இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் மிகவும் நல்லது.

Leave a Reply