பக்தி கொண்ட ஆன்மாக்களின் நிலைகள்

http://omeswara.blogspot.com/2013/01/blog-post_5923.html

  1. பக்தியில் மந்திரம் சொல்வதால் ஏற்படும் விளைவுகள்

மனிதனாகப் பிறந்த நாம், எதனையும் உருவாக்கத் தெரிந்து கொண்டவர்கள்.  நாம் இன்றைய மனித வாழ்க்கையில்,  மந்திரங்களைச் சொல்லி நமக்குள் உருவாக்கிக் கொள்கின்றோம் உருவாக்கிய பின் அந்த தெய்வம் தான்,  எல்லாம் என்ற வகையில் சதா அந்த மந்திரத்தை சொல்லி வருகின்றோம்.

உதாரணமாக முருகன் படத்தில் இருந்து வரக்கூடிய கலர்,  அதன் மேல் போட்ட துணியின் கலர்,  இவைகளைக் கண் பார்த்து, அதன் கலர்களைக் காட்டுகின்றது. அதிலிருந்து அந்த உணர்வை எடுக்கின்றது. எடுக்க எடுக்க,  அந்த முருகன் மாதிரியே,  நம் உடலுக்குள் வந்து விடுகின்றது.

நாம் ஜெபித்த சொல் (மந்திரம்),  நமக்குள் பதிவாகின்றது. இந்த உணர்வின் தன்மையை ஆயுள் முழுவதும்,  நமக்குள் உருப் பெறச் செய்கின்றோம். யாராவது நம்மிடம் வந்தார்கள் என்றால், முருகன் அருள் கிடைக்கும், உனக்கு நன்றாகி விடும் என்று சொல்கின்றோம். அந்த வலுவான எண்ணங்கள் அவர்களுக்குள் சென்றவுடன், அவர்களுக்கு நன்றாகி விடுகின்றது.

இருந்தாலும் இதை உருவாக்கப்பட்டு,  என்னென்ன மந்திரத்தை சொல்லுகின்றேனோ, “நீ இத்தனை முறை மந்திரத்தைச் சொன்னால், முருகனையே நீ  காணலாம்”,  அவன் அருள் கிடைக்கும்.

இதைப் போன்று,  “வராகி,  சுடலை மாடன்”  என்று சொல்லுவார்கள். அந்தந்த உணர்வுகள் குவிக்கப்பட்டு,  அந்த உருவம் உனக்குள் தெரியும். இந்த உணர்வை வளர்த்து வந்தால், நாம் இறந்தபின்,  இதே மந்திரத்தைச் சொன்னார்களென்றால்,  அந்த உணர்வையே எடுத்து,  நாம் போட்ட பூஷ்பத்தைப் போட்டால் முருகனையே கைவல்யப்படுத்தலாம்,  என்றெல்லாம் சொல்வார்கள்.

அப்பொழுது,  முருகனையே எனக்குள் வடித்துக் கொள்கின்றேன். எனக்குள் உருவான நிலைகளில்,  என் உருவம் தெரியாது.  எனக்குள் எந்த உருவத்தை நினைவுபடுத்திக் கொண்டேனோ,  அந்த அலைகள் பரவும். அப்பொழுது அங்கு,  முருகனாகக் காட்சி கொடுக்கும்.

காட்சிகளில்,  முருகனாகப் பார்ப்பது எல்லாம்,  பக்தி கொண்ட நிலைகள்தான்.  ஒரு முருகன் ஒரு விதமாகப் பேசுவார். இன்னொரு முருகன் வேறு விதமாகப் பேசுவார்.

அவரவர் உணர்வில் கலந்த உணர்வின் வேகங்கள்தான்,  அந்தந்த அலைகளாகப் படரும் பொழுது, அவரவர்களுக்குக் கிடைத்த நிலைகள் கொண்டு பேசுவார்கள்.

ஒரு முருகன் ரோட்டில் உருளும்,  இன்னொரு முருகன்,  “இரு நான் பார்க்கின்றேன்” என்று ஆசீர்வதிக்கும். இப்படி முருகனில்,  யார் யார் எந்தெந்த உணர்வு கொண்டு வளர்த்தார்களோ,  அந்த அலைகளாகப் படரும். படர்ந்த அலைகள் குவிந்தவுடன், “முருகனையே  தரிசனம் செய்தேன்”  என்று சொல்வார்கள். அந்த உணர்வின் ஒலிகள் வரும் பொழுது அதற்குரிய மந்திரத்தைச் சொன்னால் போதும், சஷ்டிக் கவசத்தைப் பாடுகின்றார்கள்.

அந்த உணர்வின் ஒலிகள் ஒருவர் மேல் பட்டவுடன்,  அந்த உடலில் இருப்பது எல்லாம் இங்கு இழுத்துவிடும்.

அந்த உணர்வுகள் இவருக்குள் வந்தபின்,  கஷ்டமெல்லாம் இவருக்கு வந்துவிடும்.இப்படி ஆயிரம் கஷ்டம் வந்தவுடன்,“முருகன் இப்படி சோதிக்கின்றான் என்பார்கள்”.

  1. பக்தி கொண்ட ஒரு அம்மாவின் நிலை

ஒரு சமயம்,  நான் சுற்று பயணம் செய்யும் பொழுது, ஒரு கிராமத்தில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன். அந்த கிராமத்தில் ஒரு அம்மா இருந்தது. அது ஒரு முருக பக்தர். அந்த அம்மாவிற்குச் சொத்து அதிகம் இருந்தது, எல்லாவற்றையும் எழுதிக் கொடுத்து விட்டது.

என்னை, அந்த அம்மா இருந்த வீட்டில், திண்ணையில் உட்காரச் சொன்னார்  குருநாதர்.  அந்த அம்மாவால், எழுந்து நடக்க முடியாது.

அந்த அம்மாவிற்கு,   வயது எழுபது இருக்கும். அது புலம்பிக் கொண்டே இருந்தது. என்னிடம் இருந்த சொத்து எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு,  என்னை அநாதையாக்கி விட்டார்கள்.

செல்வமும் செருக்கும் உள்ள பொழுது,  என் மடிமேல் உட்கார்ந்து விளையாடுவையே, “முருகா!”, இப்பொழுது எங்கடா போனாய்?. செல்வம் இருப்பவர்களைத் தான் பார்ப்பாயா?  நான் இப்பொழுது அநாதையாக இருக்கின்றேன் என்னைக் காக்கவில்லையா? நான் அநாதைதானா?, என்று புலம்பிக் கொண்டு உள்ளது. ஆனால், உடலெல்லாம் மலத்தால் சூழ்ந்து, அசிங்கமாக வைத்திருந்தது.

அந்த அம்மா வீடு பெரியது,  ஆனால் சாலையில் தூக்கிப் போட்டு விட்டுப் போய்விட்டார்கள். “முருகா!,  நான் நினைக்கும் பொழுதெல்லாம் வரம் கொடுத்தாய்,  நான் சொல்லுகின்றவருக்கு எல்லாம் நல்லது செய்தாய்,  எனக்கு நல்ல வழியும் காட்டினாய்”.  என்னிடம் செல்வம் இல்லையென்று, நீ கூட வராமல் போய்விட்டாயேடா,  என்று சொல்லிக் கொண்டு இருந்தது.

“நான் அவர்களுக்கு எல்லாம் செய்தேனே,  எனக்கு இப்படிச் செய்கின்றார்களே,  எனக்குச் சொத்து வேண்டாம், நீ இருந்தால் போதும் முருகா”. “என்னை இந்த நிலைக்கு விட்டு விட்டார்கள்,  நான் அசிங்கமான நிலையில் இருக்கின்றேன், என்னை கவனிப்பதற்கு, நீ கூட வரவில்லையே, இந்த அசிங்கத்தைப் பார்த்து, நீ கூட விலகி விட்டாயா?”  என்று கேட்டுக் கொண்டிருந்தது.  இரண்டு மணி நேரம்,  அந்த அம்மா சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

இதையெல்லாம்,  என் அனுபவத்தில் நான் கண்டதைச் சொல்லுகின்றேன்.  அந்த அம்மா புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்து,  நான் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனேன். அந்த அம்மவை பக்கத்தில் இருந்த கிணற்றில் குளிக்க வைத்து,  துணிகளை துவைத்துக் கொடுக்கச் சொன்னார் குருநாதர்,  செய்தேன். பின்பு,  ஆசீர்வாதம் கொடுத்தேன்.

மனது தெளிவடைந்து அந்த அம்மா அமர்ந்தது,   “முருகா!, நீ வந்துவிட்டாயா?”. “நீ இந்த ரூபத்தில் வருவாய் என்று எனக்குத் தெரியவில்லையே”, என்று முருகனைத் தான் நினைக்கின்றது.

“என் பிள்ளை மாதிரி என் மடியில் அமர்ந்து விளையாடுவாய், இப்பொழுது, பெரிய ஆளாய் வந்து இருக்கின்றாய், நீ திருடனப்பா”  என்று சொல்லுகின்றது. அந்த இடத்தில், அவர்கள் உணர்வுகளைத் தெரிந்து கொண்டு,  அந்த அம்மாவிற்கு உபதேசம் கொடுக்கின்றார், குருநாதர்.

“நீ நல்லதைச் செய்தாய்,  ஆனால், பிறருடைய கஷ்டமெல்லாம்,  நீ எடுத்துக் கொண்டாய்”. “உனக்குப் பணம் வேண்டாம் என்று அவர்களிடம் கொடுத்து விட்டாய்”. “அவர்களின் கஷ்டத்தை நீ எடுத்துக் கொண்டாய்.

அவர்களின் கஷ்டங்களை நீ எடுத்து, அது நோயாக வந்து விட்டது.  “கடைசியில் நீ என்னைக் கைவிட்டு விட்டாய் என்று,  வெறுப்பைத்தான் எண்ணுகின்றாய்.

இந்த ஆறாவது அறிவின் (முருகன்) தன்மையை உனக்குள் ஒளிச் சுடராக மாற்றிடாமல்,  உடல் பற்றைத் தான் வைத்தாய்.

சொத்து வேண்டாமென்று விட்டு விட்டாய், நீ கூட மறந்து விட்டாய் என்று,   உடல் பற்றைத் தான் வைத்தாய்.

பக்தியில்,  துயரத்திற்கு அவன் (முருகன்) காக்கவில்லை என்ற நிலை வருகின்றது.  அந்த சமயத்தில்,  அருள் ஞானிகள் காட்டிய நிலைகள், இங்கு வரவே இல்லை என்பதைக் காட்டுகின்றார், குருநாதர்.

ஆனால்,  இதே நிலைகளில்,  பக்தியில் இந்த ஆன்மா வெளியே சென்றால்,  இது யார் மேல் வெறுப்பு கொண்டதோ, அவர் உடலுக்குள் தான் இந்த ஆன்மா செல்லும் என்று குருநாதர் சொல்கின்றார்.

அந்த அம்மாவிடம் கேட்கப்படும் பொழுது, “என் சொத்துகளை சொந்தங்களுக்கு எழுதி வைத்தேன்”  என்று சொல்லுகின்றது. சொத்துகளை வேண்டாம் என்று ஒதுக்கினாலும்,

உடலை விட்டு பிரியும் இந்த ஆன்மா, அவர்களிடமே (அந்த அம்மாவின் சொந்தங்கள்) செல்லுகின்றது.  

  1. பக்தி கொண்ட மற்றொருவரின் நிலை

இதை விட்டு விட்டு, இன்னொரு இடத்திற்குப் போகச் சொன்னார் குருநாதர்.

அது ஒரு சின்ன கிராமம், அது பெண், இது ஆண். அவருக்கு வயது அதிகமாகிவிட்டது. “என்னை ஏன்டா சோதிக்கின்றாய் முருகா, எல்லாவற்றையும் கொடுத்தாச்சு,  பேரன் பேத்தி எடுத்தாச்சு,  என்னை நீ உன்னிடம் அழைத்துக்கொள் முருகா”.  “எதுக்கு இந்த கஷ்டமெல்லாம் பட வேண்டும்?”, “பேரனுக்கு சம்பாதித்து வைத்தோம்,  அவன் அப்படித் திரிகின்றான்,  மகன் இப்படித் திரிகின்றான்”, “எல்லாம் பார்க்கச் சகிக்கவில்லை,  எவ்வளவு கஷ்டப்பட்டேன், சம்பாதித்தேன்,  அவர்கள் செய்கின்றதைப் பார்க்கும் பொழுது, எனக்குப் பிடிக்கவில்லை முருகா”. அவர் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றார்.

என்னை அங்கே போகச் சொல்லுகின்றார் குருநாதர்,  “பக்தியில் எந்தளவிற்கு இருக்கின்றார்கள் என்பதைப் பார்”,  என்கிறார். எந்த முருகன் மேல் பக்தி வைத்தாரோ, இவருடைய நல்ல ஒழுக்கமும், அந்த சொத்து மேல் பற்று இல்லையென்றாலும்,  சொத்து சேர்த்து வைத்தேன்,  பையன் ஒழுக்கமாக இல்லையே என்ற நிலை தான் வளருகின்றது.

அவர்கள் செய்வது சகிக்கவில்லையப்பா,  நான் உன்னிடமே வந்து விடுகின்றேன் என்ற இந்த எண்ணம்தான் வளருகின்றது. சொத்தையும், பையனையும் வெறுக்கின்றார். முருகனிடம் வருகின்றேன் என்கின்றார். திருச்செந்தூர் முருகனைத்தான் எண்ணிக் கொண்டு இருக்கின்றார்.

“நீ எத்தனையோ தீயதுகளை சம்காரம் பண்ணினாய். என் பையன்களுக்கு தீமைகள் வராதபடி சம்காரம் பண்ணப்பா. அவர்களுக்கு நல்ல வழி காட்டப்பா”  என்று முருகனையே எண்ணிக் கொண்டிருக்கின்றார்.  இதே மாதிரி முருகனையே எண்ணிக் கொண்டிருந்த ஆவி,  எப்படி இவர் உடலில் நுழைகின்றது என்பதை, குருநாதர் காட்டுகின்றார்.

அவர் அருளாடுகின்றார்,  அப்பொழுது வருகிறவர்களுக்கு எல்லாம் நல்லதாகும் என்று சொல்லுகின்றார். நல்லாதாகின்றது. எவ்வளவோ நன்மைகளைச் செய்தார். இந்த உணர்வின் ஆன்மா உடலுக்குள் சென்றவுடனே,  பிறருடைய கஷ்டங்களைப் பார்த்தால்,  “மகனே வந்துவிட்டாயா,  உன் நோயெல்லாம் தீரும்” என்று சொன்னவுடனே,  இந்த உணர்வின் வலு அவரிடம் இருப்பதால்,  அந்த நோயெல்லாம் இவரிடம் வந்து விடுகின்றது,   மற்றவருக்கு நல்லதாகின்றது.

வாத நோய் உள்ளவருக்கெல்லாம்,  திருநீறு கொடுத்திருக்கின்றார். அந்த உணர்வுகள் வரவர,  இவருக்கு கைகால் வராமல் போய்விட்டது. “முருகா!,  எல்லோருக்கும் நல்லது செய்தாயே,  என்னை இப்படி விட்டு விட்டாயே”  என்று புலம்புகின்றார்.

சிறிது காலம் மற்ற இடங்களில் சுற்றித் திரிந்து விட்டு,  திரும்ப அவர் இருந்த இடத்திற்குப் போய்ப் பார்த்தேன். கை, கால், வராமல் கிடந்தார். நன்மை செய்யும் உணர்வுகளை தனக்குள் வலுவாக்கிக் கொண்டார்.

அவருக்குள் இந்த உணர்வுகள் சென்றபின், பிற உடல்களில் இருந்து இழுத்து அவர்களுக்கு நல்லது ஆகின்றது. ஆனால், பிறருடைய தீய உணர்வுகள், இவருக்குள் விளைந்து, இந்த உடலை வீழ்த்துகின்றது. 

“முருகன் எனக்கு தரிசனம் கொடுத்தான்,  எல்லாம் செய்தான், இன்றைக்கு அவனைக் காணவில்லையே”,  நோய் வந்தவுடன் இதையே தான், அவர் நினைக்கின்றார்.

தீமையின் உணர்வுகள் வந்தவுடன்,  அவர் எடுத்துக் கொண்ட நிலைகள் மங்கிப் போகின்றது. மங்கியபின்,  இந்த உடலை விட்டுச் சென்று விட்டால்,  கடைசி நிலைகளில், அந்த உயிரான்மா எப்படிப் போகின்றது? என்று அந்தளவிற்கு, அழைத்துச் சென்றார் குருநாதர்.

அந்த உயிராத்மா மனித உடலுக்கு போவதில்லை. எத்தனை பேருடைய நஞ்சுகள் இதில் கலந்ததோ,  அந்த விஷத் தன்மை கொண்ட உணர்வுகள், பரமாத்மாவில் கலக்கின்றது. கலந்தபின்,  இதற்கு ஒத்த உடல் கிடைக்கும் வரை,  சூட்சுமத்திலேயே இருக்கின்றது. அதைப் பின்தொடர்ந்து, போகச் சொல்கின்றார் குருநாதர்.

எனக்குச் சரியான பாதுகாப்பு கொடுத்தார். “நீ இந்த எண்ணத்தில் இருந்தால் உன்னிடம் வந்துவிடும்” என்று குருநாதர் சொல்லுகின்றார்.

பிறருடைய வேதனைகளை, அவர் எவ்வளவு எடுத்துக் கொண்டாரே, அதற்குத் தக்க,  “கட்டுவீரியன்”  பாம்பின் ஈர்ப்பிற்குள் போகின்றார்.

இந்த ஆன்மா எவ்வளவு உயர்ந்ததை செய்தது,  ஒரு உடலுக்குள் போனவுடன்,  பல விஷத்தன்மையை எடுத்தது. இந்த உணர்வின் தன்மை கட்டுக்கட்டாக விளைகின்றது.

இந்த உடலைவிட்டுச் சென்றபின்,  அந்த ஆன்மா கட்டுவீரியன் பாம்பின் ஈர்ப்பிற்குள் எப்படிப் போகின்றது. அந்த உணர்வின் தன்மை கருவாகி,  அதே பாம்பாக ரூபமாகின்றது. இதை நேரடியாக, அந்த உணர்வைத் தேடிப் பிடித்துப் பார்க்கின்றவரை,  என்னை விடவில்லை குருநாதர்.  இப்படித்தான் சில அனுபவங்களைக் காட்டினார். குருநாதர்.

  1. மகரிஷிகள் காட்டிய காக்கக் கூடிய சக்தி

அவர் (பக்தியில் இருந்தவர்) தப்புச் செய்யவில்லை, பக்தி கொண்டார். நல்லதைச் செய்தார், நன்மையும் செய்தார்.  அந்தத் தீய உணர்வுகள் இவருக்குள் வரும் பொழுது, தன்னைக் காக்கக் கூடிய சக்தி,  அந்த மகரிஷிகள் காட்டிய சக்தி அவரிடம் இல்லை.

ஏனென்றால்,  நஞ்சின் உணர்வை ஒளியாக மாற்றியவர்கள் மகரிஷிகள். மனிதருக்குள் விளைய வைத்த உணர்வுகள்,  நன்மைகள் பல செய்ய வேண்டும் என்று எண்ணினாலும், அவர் உடலில் இருந்து வந்த உணர்வுகள், நம் உடலுக்குள் வந்துவிடுகின்றது. 

அந்த ஆன்மா, இன்னொரு உடலுக்குள் சென்றால், என்ன செய்கின்றது? என்பதைத் தெளிவாகக் காட்டினார்.

இன்று பெரும் பகுதியானவர்கள்,  தங்கள் கஷ்டத்தைத்தான் சொல்லுகின்றார்கள். நாம் அதைக் கேட்காமல் இருக்க முடியாது. ஆனால் கேட்டவுடன்,  பிறருடைய கஷ்டமான  உணர்வுகள் நமக்குள் வளராமல், விளையாமல் தடுக்கும் நிலை பெறவேண்டும்.

 நஞ்சினை வென்று,  உணர்வினை ஒளியாக்கிய,  என்றும் பதினாறு என்று, மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும்,  அந்தத் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும்,  பேரருளையும் பேரொளியையும், நம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் படர வேண்டும் என்று இணைத்துப் பழக வேண்டும்.

இவ்வாறு செய்தோம் என்றால்,  பிறருடைய தீமைகள் நமக்குள் வராமல் தடுக்கின்றோம்,  இந்த வாழ்க்கையில்,  மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் அனைவரும் வாழும் நிலையும்,  இந்த வாழ்க்கைக்குப் பின் நம் உயிராத்மா பிறவி இல்லா நிலை என்னும் அழியா ஒளி சரீரம் பெறுகின்றது. இது தான் எல்லை.

Leave a Reply